"எல்லா விஷயங்களிலும் ஒன்றாக நிற்க முடியாது" - பினராயி விஜயனைச் சந்தித்த வி.டி.சதீசன் கூறியது என்ன?

May 16, 2026 - 08:00
0
"எல்லா விஷயங்களிலும் ஒன்றாக நிற்க முடியாது" - பினராயி விஜயனைச் சந்தித்த வி.டி.சதீசன் கூறியது என்ன?

கேரள மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்க உள்ளது காங்கிரஸ் தலைமையிலான யு.டி.எஃப் கூட்டணி.

முதல்வர் பதவிக்கு எதிர்க்கட்சித் தலைவராக இருந்த வி.டி.சதீசன் தேர்வுசெய்யப்பட்டுள்ளார். வரும் திங்கள் கிழமை திருவனந்தபுரம் தலைமை செயலகம் அருகே உள்ள சென்ட்ரல் ஸ்டேடியத்தில் முதல்வர் பதவி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இந்த நிகழ்ச்சிக்கு நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, வயநாடு எம்.பி., பிரியங்கா காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, கர்நாடகா, இமாச்சல், தெலங்கானா மாநிலங்களின் முதல்வர்கள் கலந்துகொள்ள உள்ளனர். தமிழக முதல்வர் விஜய்யும் கலந்துகொள்வார் எனக்கூறப்படுகிறது.

வி.டி.சதீசன், பினராயி விஜயன் சந்திப்பு
வி.டி.சதீசன், பினராயி விஜயன் சந்திப்பு

இந்த நிலையில் முதல்வராகப் பதவியேற்க உள்ள வி.டி.சதீசன் காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே.ஆண்டனியைச் சந்தித்து வாழ்த்து பெற்றார். காங்கிரஸ் மாநிலத் தலைமை அலுவலகமான இந்திரா பவனில் நடந்த கொண்டாட்டத்தில் மாநில காங்கிரஸ் தலைவர் சன்னி ஜோசப்பைக் கட்டிப்பிடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் வி.டி.சதீசன்.

முதல்வர் பதவி கிடைக்காத வருத்தத்தில் உள்ள ரமேஷ் சென்னிதலாவையும் சந்தித்து பேசினார். அதைத்தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவராகப் பதவியேற்க உள்ள பினராயி விஜயனை அவரது இல்லத்தில் சந்தித்து உரையாடினார் வி.டி.சதீசன்.

உரையாடல் முடிந்த பிறகு வி.டி.சதீசனை வீட்டு வாசல் வரை சென்று வழியனுப்பினார். அந்தச் சமயத்தில் பினராயி விஜயன் மற்றும் வி.டி.சதீசனை மீடியாவினர் சூழ்ந்துகொண்டனர்.

"அவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்களோ சொல்லுங்கள்" என வி.டி.சதீசனிடம் கூறிய பினராயி விஜயன் மீடியாக்களிடம் பேசாமல் ஒதுங்கிவிட்டார். வி.டி.சதீசன் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்து பேசினார்.

பினராயி விஜயனைச் சந்தித்த வி.டி.சதீசன்
பினராயி விஜயனைச் சந்தித்த வி.டி.சதீசன்

செய்தியாளர்களிடம் வி.டி.சதீசன் கூறுகையில், "கேரள அரசியலில் சீனியர் தலைவர் என்பதால் நான் பினராயி விஜயனைச் சந்திக்க வந்தேன். பத்து ஆண்டுகள் முதல்வராகவும், 16 ஆண்டுகள் சி.பி.எம் செயலாளராகவும் இருந்தவர் அவர். அவர் எதிர்க்கட்சித் தலைவராக வரப்போகிறார்.

எனவே கேரளத்தின் முக்கியமான விஷயத்தில் உடன் நிற்க வேண்டும் என நினைக்கிறேன். அதற்கு அவரது பக்கத்துணை வேண்டும். அரசியலில் எல்லா விஷயங்களிலும் ஒன்றாக நிற்க முடியாது என்பது தெரியும். அதே சமயம் பத்து ஆண்டுகளாக அரசு கொண்டுவந்த அனைத்தையும் மாற்றப்போவதில்லை.

அரசு என்பது தொடர்ந்து நடப்பது ஆகும். சில நேரம் விமர்சித்த பகுதியைத் திருத்தி அதைச் செயல்படுத்துவோம். ஒரு அரசு செயல்படுத்தியதை அடுத்த அரசு நிறுத்தினால் கேரளம் இருக்குமா? எங்களுக்குள் பேசிய அனைத்தையும் வெளியில் கூற முடியாது. பதவி ஏற்புவிழாவுக்கு அவரை அழைத்துள்ளேன்" என்றார்.

இதற்கு முன்பு பினராயி விஜயன் முதல்வராக பதவி ஏற்கும் முன்பு முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியை மரியாதை நிமித்தமாக சந்தித்து உரையாடியது குறிப்பிடத்தக்கது.

கொள்கைகள் வெவ்வேறாக இருந்தாலும் கட்சித் தலைவர்கள் தங்களுக்குள் நட்பை வெளிப்படுத்தும் பாங்கை கேரள அரசியலில் காண முடியும்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User