'ஓட்டு மிஷினில் அஞ்சலி நாயர் என்று பெயர் மாற்ற முடியாது' - நடிகையின் கோரிக்கையை நிராகரித்த அதிகாரி

Apr 6, 2026 - 07:31
 0
'ஓட்டு மிஷினில் அஞ்சலி நாயர் என்று பெயர் மாற்ற முடியாது' - நடிகையின் கோரிக்கையை நிராகரித்த அதிகாரி

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் திருப்பூணித்துறை சட்டசபை தொகுதியில் பா.ஜ.க கூட்டணியில் உள்ள ட்வண்டி 20 கட்சி வேட்பாளராக நடிகை அஞ்சலி நாயர் போட்டியிடுகிறார். ட்வண்டி 20 கட்சி வேட்பாளர்கள் பலாப்பழம்  சின்னத்தில் போட்டியிடுகின்றனர். அஞ்சலி நாயரும் பலாப்பழம் சின்னத்தில் வாக்குகேட்டு பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

அஞ்சலி நாயர் என்ற பெயர் மூலம் சினிமாவில் பிரபலமானாலும், அரசு பதிவுகளில் அஞ்சலி பி.வி என்றுதான் அவரது பெயர் உள்ளது. அரசு ஆவணங்களின்படி வேட்புமனு தாக்கல் செய்ததால் அவரது பெயர் வாக்குப்பதிவு இயந்திரத்தில் 'அஞ்சலி பி.வி' எனப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் தனது பெயரை அஞ்சலி நாயர் என பதிவுசெய்ய வேண்டும் என அவர் தேர்தல் நடத்தும் அலுவலருக்கு மனு அளித்திருந்தார். ஆனால், அதற்கு சரியான பதில் கிடைக்காததால் அஞ்சலி நாயர் ஐகோர்ட்டில் இதுசம்பந்தமாக மனுத் தாக்கல் செய்திருந்தார்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்

வேட்புமனுவில் அஞ்சலி பி.வி என்ற பெயரைப் பயன்படுத்தியிருந்தாலும், பொதுவாழ்விலும் திரைத்துறையிலும் அஞ்சலி நாயர் என்று பிரபலமாக அறியப்படுகிறார். தேர்தல் பிரசாரத்தின்போதும் அஞ்சலி நாயர் என்ற பெயரை அவர் பயன்படுத்தியதால் அஞ்சலி பி.வி. என்பதை மாற்றி அஞ்சலி நாயர் என்று வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவுசெய்ய வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

மனுவை விசாரித்த ஐகோர்ட், ஒரு நபர் அறியப்படும் பெயரே வாக்குச் சீட்டிலும் இருக்க வேண்டும் என்று கூறியதுடன், இது சம்பந்தமாக மறுபரிசீலனை செய்து தகுந்த முடிவெடுக்குமாறு தேர்தல் நடத்தும் அலுவலருக்கு அறிவுறுத்தியது.

இதுகுறித்து தேர்தல் நடத்தும் அலுவலர் விசாரணை நடத்தி அஞ்சலி நாயரின் மனுவை தள்ளுபடி செய்தார். முதலில்  தனது பெயர் சம்பந்தமான கோரிக்கைக்கு அஞ்சலி நாயர் தகுந்த ஆவணங்களை சமர்ப்பிக்கவில்லை என தேர்தல் நடத்தும் அதிகாரி தெரிவித்துள்ளார். மார்ச் 28-ம் தேதி வாக்குச் சீட்டின் வரைவு பரிசோதனையின் போதும் அவர் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று தேர்தல் நடத்தும் அலுவலர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் பிரசாரத்தில் நடிகை அஞ்சலி நாயர்

முதியோர்களிடம் வீடுகளுக்குச் சென்று வாக்குகளை பெறும் நடைமுறை தொடங்கிவிட்டது. இப்போது பெயரை மாற்றினால் புதிய தபால் வாக்குச் சீட்டுகளை அச்சிட வேண்டிய நிலை ஏற்படும். இயந்திரங்களிலும் மாற்றம் செய்ய வேண்டும். அப்படி செய்தால் அந்த பணிகளை வாக்குப்பதிவு தினமான ஏப்ரல் 9-ம் தேதிக்குள் நிறைவு செய்ய முடியாது. வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளரின் புகைப்படமும், பெயரும், சின்னமும் இருப்பதால் வாக்காளர்களுக்குக் குழப்பம் ஏற்படாது.

மேலும் வேட்பாளர் பட்டியலில் அஞ்சலி என்ற பெயரில் வேறு யாரும் இல்லை எனவும் தேர்தல் நடத்தும் அலுவலர் தெரிவித்துள்ளார். அதே சமயம் இந்த முடிவு அரசியல் உள்நோக்கம் கொண்டது எனவும், ட்வெண்டி 20 கட்சி தலைமையில் ஆலோசித்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அஞ்சலி நாயர் தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0