Mandaadi: " 'உன்னை கொன்றுக்கணும், விட்டிருக்கக் கூடாது'னு கமென்ட்ஸ் போடுறாங்க!" - 'மண்டாடி' கிட்டான்

Sep 16, 2026 - 09:00
0
Mandaadi: " 'உன்னை கொன்றுக்கணும், விட்டிருக்கக் கூடாது'னு கமென்ட்ஸ் போடுறாங்க!" - 'மண்டாடி' கிட்டான்

சூரியின் 'மண்டாடி' படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. மதிமாறன் புகழேந்தி இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் சத்யராஜ், சுஹாஸ், மஹிமா நம்பியார் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

Mandaadi BTS Stills
Mandaadi BTS Stills

இவர்களோடு 'கிட்டான்' கதாபாத்திரத்தில் நடிகர் கிரிஷ் ஹாசன் என்பவர் நடித்திருக்கிறார். 'தங்கலான்', 'வேட்டையன்', மலையாளத்தில் 'முரா' உள்ளிட்ட படங்களில் நடித்த இவருக்கு, இப்படம் பெரிய வரவேற்பைப் பெற்றுத் தந்திருக்கிறது. 'மண்டாடி'க்காக அவரைச் சந்தித்துப் பேட்டி கண்டோம்.

'மண்டாடி' படத்திற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. குறிப்பாக உங்கள் கதாபாத்திரத்தை வெறுக்கும் அளவுக்கு கமென்ட் தருகிறார்கள். எப்படி இருக்கிறது இந்த வரவேற்பு?

"உண்மையிலேயே இது ஒரு மேஜிக் போலத்தான் இருக்கிறது. தமிழ் சினிமாவில் ஒரு நல்ல அங்கீகாரத்திற்காக ஓடிக்கொண்டிருந்தேன். இப்போது சூரி சார், சுஹாஸ் சாருக்கு அடுத்தபடியாக அனைவரும் என்னைப் பற்றிப் பேசுகிறார்கள். 'இவனை சும்மா விட்டிருக்கக் கூடாது, கொன்றிருக்க வேண்டும்' என்று கோபப்படும் அளவிற்குப் கமென்ட்ஸ் வருகின்றன. அதை எனக்கும், என் நடிப்புக்கும் கிடைத்த பெரிய வெற்றியாகப் பார்க்கிறேன். ஒரு நடிகனாக என் பயணத்தில் இது மிகவும் சிறப்பான தருணம்."

Mandaadi BTS Stills
Mandaadi BTS Stills

'மண்டாடி' படத்தில் 'கிட்டான்' கதாபாத்திரத்திற்கு நீங்கள் தேர்வானது எப்படி?

"பாண்டிச்சேரியில் ஒரு நாடக நிகழ்விற்காகச் சென்றிருந்தபோது, 'சூரி சார் நடிப்பில் மண்டாடி என்ற படம் தொடங்குகிறது, நடிப்பதற்கு முயற்சி செய்து பார்' என்று என் நண்பன் கூறினான். உதவி இயக்குநரைத் தொடர்புகொண்டபோது, முதலில் 'வாய்ப்பில்லை' என்று கூறிவிட்டார்கள். பின்னர் நான் மலையாளத்தில் 'முரா' என்ற படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதைக் கூறி ஃப்ரொஃபைல் அனுப்பியதும், உடனடியாக அலுவலகத்திற்கு வரச் சொன்னார்கள். அங்கு சென்றபோது இயக்குநர் மதிமாறன் என்னை ஒரு வாரத்தில் மீசை வளர்த்துக்கொண்டு வரச்சொன்னார். ஆனால் எனக்கு மீசை சரியாக வளரவில்லை. செயற்கையாகப் பொருத்துவதும் சரியாக வராததால், நேர்மையாக அவரிடமே விஷயத்தைக் கூறினேன். ஆனால் சில நாள்கள் கழித்து 'வேறு ஆளைப் பார்க்கத் தொடங்கிவிட்டார்கள்' என்று தகவல் வந்தது.

இருப்பினும் இந்தக் கதைக்களமும் கடலும் எனக்கு மிகவும் பிடித்திருந்ததால், நம்பிக்கையை விடாமல் அன்றைக்கு மதியமே கடலில் ஒரு போட்டோஷூட் செய்து உதவி இயக்குநருக்கு அனுப்பினேன். என் முயற்சியைப் பார்த்து இயக்குநர், 'ஏன்டா, இதெல்லாம் பண்ற' எனச் சொல்லி என்னை படத்திற்குத் தேர்வு செய்து, தொண்டிக்குச் சென்று ஆறு மாதங்கள் மீனவர்களுடனே தங்கி, அவர்களாகவே மாற வேண்டும் என்று கூறினார். சின்ன கதாபாத்திரம் என்று நினைத்துதான் சென்றேன். ஆனால் ஸ்கிரிப்ட் பேப்பர் கொடுத்த பிறகுதான் அது படத்தையே நகர்த்திச் செல்லும் முதன்மையான வில்லனின் மகன் கதாபாத்திரம் என்பது தெரிந்தது."

உங்கள் நடிப்பைப் பார்த்துவிட்டு இயக்குநர் மதிமாறன் என்ன சொன்னார்... இயக்குநர் வெற்றிமாறனையும் சந்தித்திருந்தீர்களே?!

"படப்பிடிப்புத் தளத்தில் இயக்குநர் மதிமாறன் சார் பணிகளில் மிகவும் தீவிரமாக இருப்பார். இந்தக் கதாபாத்திரத்தில் நான் நன்றாக நடித்திருக்கிறேன் எனத் திருப்திகரமாகவும் பகிர்ந்துகொண்டார். முக்கியமாக, இயக்குநர் வெற்றிமாறன் சார் படத்தைப் பார்த்துவிட்டு, 'இவன் கதாபாத்திரம் மிகவும் கன்வின்சிங்காக இருக்கிறது. இவனைப் பார்த்தாலே எரிச்சலாகிறது, அதுதான் இந்தக் கதாபாத்திரத்தின் வெற்றி' என்று பாராட்டியதாகக் கூறினார். ஆடியோ வெளியீட்டு நிகழ்வில் என்னைச் சுட்டிக்காட்டிப் பாராட்டினார். வெற்றிமாறன் சார் போன்ற ஒரு மாபெரும் இயக்குநரிடமிருந்து கிடைத்த பாராட்டை என் வாழ்நாளில் மறக்க முடியாது."

Mandaadi BTS Stills
Mandaadi BTS Stills

தொண்டியில் 6 மாதக் காலம் தங்கி நடித்த அனுபவம், உடலளவில் சந்தித்த சவால்கள் பற்றிச் சொல்லுங்கள்?

"வேறு ஒரு படத்திற்காக உடற்பயிற்சி செய்து ஃபிட்டாக இருந்தேன். ஆனால், இந்தப் படத்திற்காக வொர்க் அவுட்டை நிறுத்துமாறு இயக்குநர் மதிமாறன் சார் சொன்னார். கடலில் 35 நாள்கள் திட்டமிடப்பட்டு, சுமார் 90 முதல் 100 நாள்கள் படப்பிடிப்பு நடந்தது. முறையான உணவு, தூக்கம், ஓய்வறை வசதிகள் இன்றி கடலிலேயே தங்கி நடித்தோம். உடலளவிலும் மனதளவிலும் மிகவும் சவாலாக இருந்தது. காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை படகிலேயேதான் வாழ்க்கை. இரவு தூங்கச் சென்றாலும், என் உடல் படகில் மிதப்பது போலவே தோன்றும். இப்படி இக்கதைக்குப் பெரிய உடலுழைப்பு தேவைப்பட்டது."

நடிகர் சூரியுடன் பணியாற்றிய அனுபவம் பற்றி...

"சூரி அண்ணன் மிகப்பெரிய கலைஞர். முதன்முதலில் என்னைச் சந்தித்தபோதே, 'உன் முகம் இந்த ஊர் முகம் மாதிரியே இருக்கிறது தம்பி, ஸ்லாங்கும் நன்றாக வருகிறது' என்று ஊக்கப்படுத்தினார். படப்பிடிப்பில் நான் செய்யும் சின்னச் சின்ன விஷயங்களைக்கூட கவனித்துப் பாராட்டுவார். எனக்குத் தேவையான வசதிகளைச் செய்து தருவதுடன், சொந்தத் தம்பி போலப் பார்த்துக்கொண்டார். இடைவேளைக் காட்சியின் போது அவர் கூறிய தன் வாழ்க்கை அனுபவம் எனக்குப் பெரிய நம்பிக்கையைக் கொடுத்தது. படப்பிடிப்புத் தளத்தில் அனைவருக்கும் எனர்ஜிக்காக அவர் 'ரெட் புல்' வாங்கித் தருவது வழக்கம். எனக்கு அதனை யாரும் செய்யவில்லை என்பதைத் தெரிந்துகொண்ட சூரி அண்ணன், அவருடைய ஆட்கள் மூலம் எனக்கு ரெட் புல் அனுப்பி வைத்தார்.

சுஹாஸ் சாருக்குத் தமிழ் தெரியாது, எனக்குத் தெலுங்கு தெரியாது. நான் 'மண்டாடி'யில் கமிட் ஆனதும், அவருக்கு இன்ஸ்டாவில் மெசேஜ் செய்தேன். உடனடியாக ரிப்ளையும் தந்து பேசினார். ஷூட்டிங்கின் முதல் நாளிலிருந்தே என்னை 'அப்பா' என்றுதான் கூப்பிடச் சொன்னார். படப்பிடிப்பு முடிந்த பின்பும் அந்த அன்பும் மரியாதையும் எங்கள் இருவருக்குள்ளும் அப்படியே இருக்கிறது."

Mandaadi BTS Stills
Mandaadi BTS Stills

'தங்கலான்', 'வேட்டையன்', 'மண்டாடி' என முக்கியமான படங்களில் நடித்துவிட்டீர்கள், அடுத்து உங்களுடைய திட்டம் என்ன?

"கும்பகோணத்திலிருந்து எந்தப் பின்னணியும் இல்லாமல் சினிமா ஆசையோடு வந்த எனக்கு தமிழ், மலையாள திரையுலகம் நல்ல இடத்தைக் கொடுத்திருக்கிறது. ஆரம்பத்தில் வில்லனாக நடிக்க வேண்டும் என்றுதான் வந்தேன். ஆனால், இப்போது 'பாய் நெக்ஸ்ட் டோர்' போன்ற கதாபாத்திரங்களிலோ அல்லது நகைச்சுவை சார்ந்த கதாபாத்திரங்களிலோ நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். சில வில்லன் கதைகள் எனக்கு வந்தன. ஆனால், நிதானமாகப் பார்த்துச் செய்ய வேண்டும் என்கிற திட்டத்தோடு இருக்கிறேன்."

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User