Madhampatty Rangaraj: "கதறி அழுத ஒரு தாயை அவர்கள் பார்க்கவில்லை" - ஜாய் கிறிஸ்டில்டா

Jul 31, 2026 - 13:02
0
Madhampatty Rangaraj: "கதறி அழுத ஒரு தாயை அவர்கள் பார்க்கவில்லை" - ஜாய் கிறிஸ்டில்டா

ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிறிஸ்டில்டா, தானும் மாதம்பட்டி ரங்கராஜும் காதலித்துத் திருமணம் செய்துகொண்டதாகவும், தன்னுடைய குழந்தைக்கு அவர்தான் தந்தை எனவும் கூறியிருந்தார்.

பிறகு, தங்களுக்குள் நடந்த திருமணத்தை மறைக்க முயல்வதாக குற்றச்சாட்டுகளை முன்வைத்த ஜாய் கிறிஸ்டில்டா, தனக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றும், மாதம்பட்டி ரங்கராஜிடமிருந்து ஜீவனாம்சம் வேண்டும் என்றும் கோரி சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

நேற்றைய தினம் ஜாய் கிறிஸ்டில்டாவுக்கும் தனக்கும் பிறந்த மகன்தான் இவர் என்றும், தந்தையாக அத்தனை கடமைகளையும் தான் கவனித்துவருவதாகவும், மாதம்பட்டி ரங்கராஜ் தெரிவித்திருந்தார். தற்போது இது குறித்து ஜாய் கிறிஸ்டில்டா அவருடைய சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

ஜாய் கிறிசில்டா  - மாதம்பட்டி ரங்கராஜ்
ஜாய் கிறிசில்டா - மாதம்பட்டி ரங்கராஜ்

அவர், "கண்ணீர், தூக்கமில்லாத இரவுகள், முடியாத கேள்விகள் மற்றும் ஒரு தாயால் மட்டுமே முழுமையாகப் புரிந்துகொள்ள முடிந்த போராட்டங்களுக்குப் பிறகு இது நடந்திருக்கிறது. உலகிற்கு நான் காட்டிய ஒவ்வொரு சிரிப்புக்குப் பின்னாலும் ஆயிரம் துளிக் கண்ணீர் மறைந்திருந்தது.

எனது மகன், ஒவ்வொரு குழந்தையும் பெறத் தகுதியான அவனுக்கான சரியான அடையாளம் மற்றும் அங்கீகாரத்தை இறுதியாகப் பெற்றுவிட்டான். மக்கள் தலைப்புச் செய்திகளைப் பார்த்தார்கள். மக்கள் கருத்துகளைப் பார்த்தார்கள். மக்கள் சமூக வலைத்தளங்களைப் பார்த்தார்கள். ஆனால், அமைதியில் கதறி அழுத ஒரு தாயை அவர்கள் பார்க்கவில்லை.

தன்னையே கேள்வி கேட்டுக்கொண்ட ஒரு தாயைப் பார்க்கவில்லை. தன் குழந்தைக்கு உண்மையைத் தவிர வேறு எதுவும் கிடைக்கக் கூடாது என்பதற்காக, ஒவ்வொரு முறையும் மீண்டு எழுந்து நின்ற ஒரு தாயை அவர்கள் பார்க்கவில்லை. இந்தப் பயணம் யார் சரி, யார் தவறு என்று நிரூபிப்பதற்கானது அல்ல. இது எப்போதுமே ஒரு குழந்தைக்குச் சேர வேண்டிய அங்கீகாரம், அன்பு மற்றும் பாதுகாப்பிற்கானது.

இது எதையோ நிரூபிப்பதற்காக அல்ல. நான் ஜெயிக்க வேண்டும் என்பதற்காகப் போராடவில்லை. என் மகன் ராகா ரங்கராஜ் ஒருநாள் விழித்தெழுந்து தன் சுயமரியாதையைக் கேள்வி கேட்கும் நிலை வரக்கூடாது என்பதற்காகவே நான் போராடினேன்.

நீ அன்பையும், மரியாதையையும், இந்த உலகில் உனக்கான சரியான இடத்தையும் பெற முழுத் தகுதியானவன் என்பதை எந்தச் சந்தேகமும் இன்றி நீ தெரிந்துகொள்ள வேண்டும் என்று விரும்பினேன். இந்தச் சிறுவன் ராகா ரங்கராஜ், தான் யார் என்ற கேள்வியோடு வளரக்கூடாது என்பதில் மட்டுமே உறுதியாக இருந்தேன்.

மாதம்பட்டி ரங்கராஜ்
மாதம்பட்டி ரங்கராஜ்

இன்று, அவனுக்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்றிவிட்டேன். இது எப்போதுமே ஒரு தாய் தன் மகனுக்குக் கொடுத்த வாக்குறுதி சார்ந்த விஷயம். வாழ்க்கை எவ்வளவு கடினமானதாக மாறினாலும், உனக்குச் சேர வேண்டிய உரிமைகளுக்காகப் போராடுவதை நான் ஒருபோதும் நிறுத்த மாட்டேன்.

வார்த்தைகளால் விவரிக்க முடியாத வேதனையை மாதக்கணக்கில் சுமந்த பிறகு, இன்று என் இதயம் இறுதியாக அமைதியடைந்துள்ளது. இனி யாராவது என்னிடம் என் வாழ்வின் மிகப்பெரிய சாதனை எது என்று கேட்டால், என் பதில் புகழோ, வெற்றியோ அல்லது அங்கீகாரமோ அல்ல. என் பதில் எப்போதுமே இதுவாகத்தான் இருக்கும். என் மகனுக்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்றினேன்" எனக் குறிப்பிட்டுப் பதிவிட்டிருக்கிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User