கும்பகோணம்: `பிரசாரத்தில் ஹோலோகிராம் விஜய்; மக்கள் இயக்க பணி டு அமைச்சர்!' - யார் இந்த வினோத்?

May 21, 2026 - 11:31
0
கும்பகோணம்: `பிரசாரத்தில் ஹோலோகிராம் விஜய்; மக்கள் இயக்க பணி டு அமைச்சர்!' - யார் இந்த வினோத்?

கும்பகோணம் சட்டமன்றத் தொகுதி தொடர்ந்து 30 வருடங்களாக திமுக வசம் இருந்தது. இதனால் கும்பகோணத்தை திமுக-வின் கோட்டை என்றே சொல்லி வந்தனர். திமுக-வைச் சேர்ந்த சாக்கோட்டை அன்பழகன் தொடர்ந்து மூன்று முறை எம்.எல்.ஏ-வாக இருந்து தொகுதியை தக்க வைத்திருந்தார். களத்தில் பம்பரமாக சுழன்றதால் கட்சி சார்பின்றி மக்களிடம் நன்மதிப்பை பெற்றவர். பெரிய சர்ச்சைகளில் சிக்காமல் வலம் வந்தவருக்கு புதிய பேருந்து நிலையம் இடமாற்ற விவகாரம் சிக்கலை ஏற்படுத்தியது. இது விமர்சனத்துக்கு உள்ளான நிலையில் தேர்தல் வந்தது.

தவெக-வில் வெற்றி பெற்று அமைச்சராக பதவியேற்றுள்ள வினோத்

தவெக-வில் போட்டியிட்ட வினோத், சாக்கோட்டை அன்பழகனை வீழ்த்தி வெற்றி பெற்று திமுக-வின் கோட்டை என அறியப்பட்ட கும்பகோணத்தை தனதாக்கி அரசியல் வட்டத்தில் கவனம் ஈர்த்தார்.

தஞ்சாவூர் தொகுதியில் வெற்றி பெற்ற சீனியரான, விஜய்க்கு நெருக்கமானவரான, பேச்சாற்றல் கொண்ட விஜய் சரவணன் அமைச்சர் ஆவார் என்றே பரவலாக பேசப்பட்ட நிலையில் வினோத்துக்கு அமைச்சரவையில் இடம் கிடைத்து இன்று நடைபெற்ற அமைச்சரவை விரிவாக்கத்தில் அமைச்சராகவும் பதவியேற்றுக் கொண்டுள்ளார்.

இது குறித்து உள்விபரங்கள் அறிந்த பலரிடம் பேசினோம், ``தொகுதிக்கு புதியவராக இருந்தாலும் விஜய் மக்கள் இயக்கம் டூ தவெக என கட்சி பணிகளில் ஆக்கப்பூர்வமாக செயல்பட்டதால் தவெக வட்டாரத்தில் நன்கு அறியப்பட்டவராக இருந்தார். தேர்தல் பிரச்சாரத்தில் நூதனமாக இவர் முன்னெடுத்த ஹோலோகிராம் தொழில் நுட்பத்தின் மூலம் விஜய் தன் அருகே நின்று பேசுவது போல் செய்த பிரச்சாரம் கும்பகோணத்தில் பட்டிதொட்டி எங்கும் வினோத்தை கொண்டு சேர்த்தது.

இதுவே வெற்றிக்கான காரணியாகவும் அமைந்து எம்.எல்.ஏ-வும் ஆனவர் தற்போது அமைச்சர் ஆகிவிட்டார்.

அமைச்சர் வினோத்

திருவிடைமருதூர் தொகுதிக்கு உட்பட்ட வேப்பத்தூர் இவருடைய பூர்வீக கிராமம். வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர். இவருடைய தந்தை இறந்து விட்டதால் கும்பகோணத்தில் உள்ள சித்தி வீட்டில் தான் வளர்ந்துள்ளார். பி.இ பட்டதாரியான வினோத் சிறிய அளவில் ரெடிமேட் துணிக்கடை வைத்திருந்தார். இவருடைய சித்தி குடும்பத்தினருக்கு கும்பகோணத்தில் மூன்று நகை கடைகள் உள்ளதாகவும், ரியல் எஸ்டேட் தொழில் செய்வதாகவும் சொல்லப்படுகிறது. வினோத்தும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளார்.

கடந்த 2011ல் விஜய் மக்கள் இயக்கத்தில் தன்னை இணைத்து கொண்டு இயக்க பயணத்தை ஆரம்பித்தார். தகவல் தொழில் நுட்ப பிரிவு, இளைஞர் அணி மாவட்ட துணை தலைவர், கும்பகோணம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். தொடர்ந்து 15 ஆண்டுகளாக எந்த சர்ச்சைகளிலும் சிக்காமல் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

ரோட்டரி சங்கத்தில் உறுப்பினராக இருந்ததால் பல மட்டத்தில் இவருக்கான தொடர்பு நீண்டது. கஜா புயல், கொரோனா உள்ளிட்ட பேரிடர் காலங்களில் மக்களுக்காக களத்தில் நின்று பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்தவர். குறிப்பாக கொரோனா சமயத்தில் தொடர்ந்து ஆறு மாதம் உணவு வழங்கினார். ரத்ததான முகாம் உள்ளிட்ட தலைமை அறிவித்த அனைத்தையும் அக்கறையுடன் செயல்படுத்தியவர்.

முதல்வர் ஜோசப் விஜய்
முதல்வர் ஜோசப் விஜய்

போராட்டங்கள் முன்னெடுத்தமைக்காக வினோத் மீது சுமார் 7 வழக்குகள் உள்ளதாக சொல்லப்படுகிறது. வெற்றி பெற்றதும் வினோத், `தளபதியால் இது சாத்தியமானது. 30 ஆண்டுகளாக மாற்றமின்றி இருந்த அரசியல் கோட்டையை உடைத்து வரலாறு படைத்துள்ளோம். தளபதி தான் இந்த வெற்றிக்கான அடித்தளம். இது சாதாரண வெற்றி அல்ல. இது மாற்றத்தின் குரல். மக்கள், தொகுதியின் வளர்ச்சிக்காக பாடுபடுவதே என் குறிக்கோள். இதுவரை இருந்தவர்கள் செய்ய தவறியதை அறிந்து அதில் கவனம் செலுத்தி எவ்வித குறையும் இல்லாத தொகுதியாக மாற்றுவேன்' என்றார்.

தற்போது அமைச்சராகவும் பொறுப்பேற்றிருக்கிறார். `பிரச்சாரத்தில் வித்யாசமான முறையை கையாண்டது போல் கும்பகோணத்தையும் மாற்றுவார் என்கிற நம்பிக்கை மக்களிடம் உள்ளது' என்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User