‘முதலமைச்சர் விஜய்யை தற்போது விமர்சிப்பது சரியாக இருக்காது’ – மத்திய இணையமைச்சர் சுரேஷ் கோபி

May 26, 2026 - 17:02
0
‘முதலமைச்சர் விஜய்யை தற்போது விமர்சிப்பது சரியாக இருக்காது’ – மத்திய இணையமைச்சர் சுரேஷ் கோபி

கோவை விமான நிலையத்தில் மத்திய இணையமைச்சர் சுரேஷ் கோபி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “பெட்ரோல் விலை உயர்வு எல்லா இடத்திலும் பாதிப்பு ஏற்படுத்தும் என தெரியும். முடிந்த அளவிற்கு கட்டுப்படுத்திக் கொண்டு இருக்கிறோம். இரண்டு மூன்று மாதத்திற்கு அரசுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இப்பொழுது விலை உயர்த்துவதை தவிர வேறு  வழி இல்லை. நம்ம ஊர் மக்கள் இந்த விலை உயர்வு பற்றி தெரிந்தவுடன் முடிந்த அளவுக்கு செலவுகளை கட்டுப்படுத்தி கொள்கின்றனர். எவ்வளவு நாட்களுக்குள் யுத்தம் முடியும் என்று சொல்ல முடியுமா? எல்லோரும் பிரார்த்தனை செய்கின்றோம். எப்படியாவது முடியட்டும்.

150 ரூபாய் வரை விலை ஏறுமா என்றெல்லாம் பயமுறுத்தாதீர்கள். அதை கட்டுப்படுத்துவதற்குதான் முயற்சிகள் எடுத்துக் கொண்டு இருக்கிறோம். இந்த விலை உயர்வை ஏற்றாமல் இருந்தால், ஒரு வாரத்திற்குள் ஸ்டாக் இல்லாமல் போய், கச்சா எண்ணெய் வாங்க முடியாமல் போகும் நிலை வந்தால் என்ன ஆகும்? அனைத்தையும் இந்த அரசு பேலன்ஸ் செய்து வருகிறது. மாநிலங்களின் வழியாக அடுத்த மாநிலத்திற்கு எண்ணெய் பொருட்களை எப்படி கொண்டு செல்வது என்பது குறித்து இன்று ஆய்வு நடக்கிறது.

சுரேஷ் கோபி
சுரேஷ் கோபி

முதல்வர் விஜய் வேலை செய்யட்டும். வேலை செய்து நிரூபிக்கட்டும். அதற்குள் விமர்சிப்பது சரியாக இருக்காது. மக்கள் வாய்ப்பு கொடுத்திருக்கின்றனர். நன்றாக பணி செய்யட்டும். தமிழக வெற்றிக் கழகம் கேரளாவில் துவங்கினால் என்ன பிரச்னை? ரஜினிகாந்த் இதயத்தில் இருப்பதை நாம் தோண்டி பார்க்க முடியாது. அவர் வருவதாக இருந்தால் வரட்டும். எந்த அரசியலுக்கும் வரட்டும். எல்லோரும் வந்து உலகத்திற்கும் தமிழ் மக்களுக்கும் பயன்படட்டும்” என்றார்.

தமிழகத்தில் பா.ஜ.க வளரவில்லையே என்ற கேள்விக்கு, “இந்த உலகத்தில் பா.ஜ.க வளர நேரம் கொடுங்கள். அது வந்துதான் ஆக வேண்டும். இயற்கையாக வளர்வதற்கு நாட்களாகும். கேரளாவில் 1-ல் இருந்து ஜீரோவுக்கு சென்றோம். இப்பொழுது 3 வந்திருக்கிறது. இது 30 ஆக வரும். எங்களுக்கு தெரியும் படிப்படியாக வளர்கிறோம்” என பதிலளித்தார். காக்ரோச் ஜனதா  பார்ட்டி குறித்த கேள்விக்கு, ”இது குறித்து பேசக்கூடிய ஆள் அல்ல நான். காக்ரோச் ஜனதா பார்ட்டி எங்கிருந்து வருகிறது? யாருக்காக வருகிறது? வந்தால் என்ன ஆகும் என பார்க்க வேண்டும். காக்ரோச் ஜனதா பாட்டி வெளிநாட்டு சதியாக இருந்தால், அதை டீல் பண்ணுவதற்கு நம்மிடம் வசதி இருக்கிறது. ஜனங்களுக்கும் அறிவு இருக்கின்றது. தலைவர்கள் மீது வைத்துள்ள நம்பிக்கை வீண் போகாது” என பதிலளித்தார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User