`ராஜகுருவாக இருந்தால் தனிப்பட்ட முறையில் வைத்துக்கொள்ள வேண்டும்!' - விஜய்க்கு பிரேமலதா நேரடி கேள்வி

May 13, 2026 - 11:31
0
`ராஜகுருவாக இருந்தால் தனிப்பட்ட முறையில் வைத்துக்கொள்ள வேண்டும்!' - விஜய்க்கு பிரேமலதா நேரடி கேள்வி

தவெக அரசு மீது நம்பிக்கைக் கோரும் தீர்மானம் சட்டமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சட்டசபையில் பேசிய தேமுதிக பொதுச்செயலாளரும், எம்எல்ஏ-வுமான பிரேமலதா விஜயகாந்த், "எதிர்கட்சிகளை எதிரிகட்சிகளாக நினைக்காமல் தலைவர்களை நேரில் சந்தித்து முதல்வர் அரசியல் மாண்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அதற்கு வாழ்த்துகள்.

முதல் அறிவிப்பில் பெண்களை பாதுகாக்க சிங்கப்படை அமைப்பு மற்றும் 717 மதுக்கடைகளை மூடியிருப்பது மக்களால் வரவேற்கப்பட்டிருக்கிறது. இதனை தேமுதிகவும் வரவேற்கிறது.

பிரேமலதா விஜயகாந்த்
பிரேமலதா விஜயகாந்த்

இருப்பினும் உங்களுடைய ஆட்சி வெளிப்படையாக இருக்கும். முன்னுதாரணமாக இருக்கும் என்று சொன்னீர்கள். ஆனால் இங்கு குதிரை பேரம் நடந்ததாக எதிர்கட்சிகள் அத்தனை பேரும் சொல்கிறார்கள்.

இதுவரைக்கும் இது தமிழ்நாட்டில் நடக்காத ஒரு விஷயம். இதை இந்த நாளில் சொல்வதில் நான் மனவேதனை அடைகிறேன்.

அதேபோல முதல்வர் அன்றைக்கு சொன்னார். இங்கு யாரும் முகம் மூடி செல்ல வேண்டிய அவசியம் இல்லை. அனைவருக்கும் வெளிப்படையான ஒரு ஆட்சி தான் செய்வோம் என்று சொன்னார்.

அப்படியிருக்கையில் முதல்வர் அவர்களை சந்திக்க யார் முகத்தை மூடிக்கொண்டு வாகனத்தில் சென்றார்கள் என்பதை வெளிப்படையாக மக்களுக்கு சொல்ல வேண்டும்.

அதற்கு காரணம் குதிரை பேரம் என்றால் இதைவிட ஒரு தலைக்குனிவு இந்த வரலாற்று சிறப்புமிக்க அவையில் வேறு எதுவும் இல்லை. நிச்சயம் முதல்வர் அதற்கு பதில் சொல்வார் என்று எதிர்பார்கிறேன்.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

அதேபோல அரசு குடும்பத்தில் இருந்து நான் வந்தவன் இல்லை என்று முதல்வர் சொல்லும்பொழுது அனைவரும் வரவேற்றார்கள்.

ஆனால் இன்றைக்கு அவரின் ராஜ குருவாக இருக்கும் ரத்தன் பண்டிட் என்பவரை அரசியல் சிறப்பு அதிகாரியாக அரசு வேலையில் அமர்த்தியதை ஒட்டுமொத்த தமிழக மக்கள் சார்பாக வன்மையாக் கண்டிக்கிறேன்.

அவர் உங்களுக்கு ராஜ குருவாக இருந்தால் அவரை நீங்கள் தனிப்பட்ட முறையில் வைத்துக்கொள்ள வேண்டும். இளைஞர்கள் உங்களுக்கு வாக்களித்திருக்கிறார்கள்.

அவர்களுக்கு என்ன முன்னுதாரணத்தை நீங்கள் காட்டுகிறார்கள் என்பதை நீங்கள் நிச்சயம் தெளிவுப்படுத்த வேண்டும். இந்த ஆட்சி மக்களுக்கான நேர்மையான ஆட்சியாக இருக்க வேண்டும்" என்று தெரிவித்திருக்கிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User