``நான் தமிழனே இல்லை; என் பெயர் திருமாவளவன் இல்லை எனப் பிரசாரம் செய்கிறார்கள்" - திருமாவளவன்

Jul 15, 2026 - 12:31
0
``நான் தமிழனே இல்லை; என் பெயர் திருமாவளவன் இல்லை எனப் பிரசாரம் செய்கிறார்கள்" - திருமாவளவன்

கடலூரில் விசிக சார்பில் தமிழ்த்தேசிய எழுச்சி மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் விசிக தலைவர் திருமாவளவன் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது, ``ஆரம்பக் காலத்தில் (90-களில்) விசிகவின் கருத்துக்கள் மீது போதிய ஊடக வெளிச்சம் விழவில்லை. பத்திரிகைகளிலோ, தொலைக்காட்சிகளிலோ கட்சியின் செய்திகள் வராது; எப்போதாவது ஒரு சிறு செய்தி அல்லது சில நொடிகள் காட்சி ஒளிபரப்பானால் கூட அதைப் பெருமகிழ்ச்சியோடு சேகரித்து வைத்த காலம் அது.

ஆனால் இன்றைக்கு, சிறுத்தைகளைப் பற்றிப் பேசாத ஊடக விவாதங்களே இல்லை என்கிற நிலை உருவாகியுள்ளது. "திருமாவளவன் ஏன் அமைதியாக இருக்கிறார்?", "ஏன் இப்படிப் பேசினார்?", "ஏன் இந்த முடிவை எடுத்தார்?" எனத் தொடர்ந்து பல நாள்களுக்கு விவாதங்கள் நடக்கின்றன.

திருமாவளவன்
திருமாவளவன்

இந்த அங்கீகாரமும் முக்கியத்துவமும் தானாக வந்துவிடவில்லை. இது தொய்வில்லாது, இடைவிடாது நாங்கள் நடத்திய தொடர் போராட்டத்தின் விளைச்சல் ஆகும்.

அரசியல் பகையாலும், சாதி வெறியாலும் அற்பர்கள் சிலர் என் மீது தொடர்ந்து அவதூறுகளைப் பொழிந்து வருகிறார்கள். நான் தமிழனே இல்லை என்றும், என் பெயர் திருமாவளவன் இல்லை என்றும் பொய் பிரசாரம் செய்கிறார்கள்.

கட்சியின் முன்னாள் மாவட்டச் செயலாளரான காலமாகிவிட்ட எனது ஆசிரியரின் மாணவர் 'திருமாவளவன்' என்பவரின் சாதி அடையாளத்தை என் மீது பலவந்தமாகத் திணித்து, பா.ம.க-வினர் போன்றோர் மேடைகளில் பேசி வருகிறார்கள்.

சாதியை ஒழிப்பதே மக்கள் விடுதலை என்று இயங்கும் நாங்கள், சமூக ஊடகங்களில் எங்களின் சாதிச் சான்றிதழைக் காட்டி நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. என்னை எவர் எந்தச் சாதிப் பெயரைச் சொல்லி அழைத்தாலும், எத்தனை முறை அவதூறு பரப்பினாலும் அதைப் பற்றி நான் கவலைப்படப் போவதில்லை.

திருமாவளவன்
திருமாவளவன்

ஏனென்றால், சாதியக் கட்டமைப்பில் எனக்கு உடன்பாடு கிடையாது. நாங்கள் 'ஆண்ட பரம்பரை' என்று போலிப் பெருமை பேசும் கும்பல் அல்ல.

நாங்கள் ஞான வம்சத்தைச் சார்ந்தவர்கள்; அறிவுப் பரம்பரையைச் சார்ந்தவர்கள். ஐயன் திருவள்ளுவரின் வழித்தோன்றல்களாகவும், கௌதம புத்தரின் கருத்தியல் வாரிசுகளாகவும் களத்தில் நிற்பவர்கள். சாதி ஒழிப்பைத் தூக்கிப் பிடிப்பவனுக்கு சாதியால் பெருமையும் இல்லை, சாதியால் இழிவும் இல்லை என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்." என்றார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User