Gauri Spratt: `ரூ.40 கோடி சாம்ராஜ்யம்; தனக்கென ஒரு அடையாளம்!' - ஆமீர் கானை மணந்த கௌரி ஸ்ப்ராட் யார்?

Jul 06, 2026 - 15:32
0
Gauri Spratt: `ரூ.40 கோடி சாம்ராஜ்யம்; தனக்கென ஒரு அடையாளம்!' - ஆமீர் கானை மணந்த கௌரி ஸ்ப்ராட் யார்?

பாலிவுட்டின் 'மிஸ்டர் பெர்ஃபெக்ஷனிஸ்ட்' ஆமீர் கான் வாழ்வில் ஒரு புதிய அத்தியாயம். ஆனால், இது வெறும் இன்னொரு நட்சத்திரத் திருமணம் அல்ல. பல ஆண்டுகளாக ஊடகங்களின் கண்களில் இருந்து சாமர்த்தியமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு உறவின் அடுத்தக்கட்டம். இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த காதலுக்குப் பிறகு, ஆமீர் கானும், தொழிலதிபர் கௌரி ஸ்ப்ராட்டும் ஜூலை 5 அன்று மும்பை பாந்த்ராவில் உள்ள தங்களது இல்லத்தில் திருமணம் செய்துகொண்டனர்.

சுமார் 150 நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்ட இந்த நிகழ்வு, பல ஆச்சரியங்களை ஏற்படுத்தியுள்ளது. யார் இந்த கௌரி ஸ்ப்ராட்? ஆமீர் கானின் மனைவி என்ற ஒற்றை அடையாளத்திற்குள் அவரை அடக்கிவிட முடியுமா?

முடியாது என்பதே நிதர்சனம்.

ஏனெனில், அவர் வெறும் நட்சத்திரத்தின் மனைவியாக மட்டுமல்ல, சுமார் 24 கோடி முதல் 40 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு வர்த்தக சாம்ராஜ்யத்தின் ராணியாகத் திகழ்கிறார்.

கேமரா வெளிச்சத்திற்கு வருவதற்கு முன்பே, இந்தியாவின் அழகு மற்றும் பராமரிப்புத் துறையில் கௌரி ஒரு தவிர்க்க முடியாத பெயர். தனது தாயின் வழியைப் பின்பற்றி அழகுத் துறையில் நுழைந்த இவர், 2007-ஆம் ஆண்டிலிருந்தே இந்தியாவின் முன்னணி ஹேர் கேர் பிராண்டான 'BBlunt'-ன் பங்குதாரராகவும், இயக்குநராகவும் இருந்து வருகிறார். இன்று மும்பையில் ஒரு பிரம்மாண்ட BBlunt சலூனை இயக்கி வருவதுடன், ஆமீர் கான் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டுள்ளார்.

அவரது அடையாளம் இத்துடன் முடிந்துவிடுவதில்லை. அவரது தாய் ரீட்டா, பஞ்சாபி-ஐரிஷ் வம்சாவளியைச் சேர்ந்தவர். தந்தை ராபர்ட் ஸ்ப்ராட், தமிழ்-பிரிட்டிஷ் வம்சாவளியைச் சேர்ந்தவர். ஆச்சரியமூட்டும் விதமாக, கௌரியின் தாத்தா ஒரு பிரிட்டிஷ் வம்சாவளி எழுத்தாளர்.

1920-களில் இந்தியாவுக்குக் குடிபெயர்ந்த அவர், இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு ஆதரவாகக் குரல் கொடுத்தவர். இப்படிப்பட்ட ஒரு வரலாற்றுப் பின்னணியில் இருந்து வருகிறார் கௌரி. ஊட்டியின் ப்ளூ மவுண்டன் பள்ளியில் தனது பள்ளிப் படிப்பை முடித்த அவர், லண்டன் கலைப் பல்கலைக்கழகத்தில் ஃபேஷன் டிசைன் மற்றும் போட்டோகிராஃபியில் உயர்கல்வி பெற்றார்.

ஆமீர் கானுடன் தனது வாழ்க்கையைத் தொடங்குவதற்கு முன்பு, கௌரிக்குத் திருமணமாகி க்வின் என்ற மகன் உள்ளார். ஆமீர் - கௌரி திருமணத்தில் க்வின் கலந்துகொண்டது, இந்த உறவின் முதிர்ச்சியையும், புரிதலையும் வெளிச்சம் போட்டுக் காட்டியது.

தனியுரிமையைப் பேணுவதில் கௌரி காட்டிய கவனம் அபாரமானது. ஆமீர் கான் இதுபற்றி குறிப்பிடும்போது, "நான் பரபரப்பில் இருந்து விலகி இருந்ததாலும், கௌரி தனது வாழ்க்கையை ஊடக வெளிச்சத்தில் இருந்து தள்ளியே வைத்திருந்ததாலும் எங்கள் உறவை ரகசியமாக வைத்திருக்க முடிந்தது" என்றார்.

இந்த பிரம்மாண்ட பின்னணிக்கு மத்தியில்தான், ஜூலை 5 அன்று பாந்த்ராவில் உள்ள அவர்களது இல்லத்தில், இயக்குநர் அசுதோஷ் கவாரிகர் உள்ளிட்ட நெருங்கிய நண்பர்கள் சூழ திருமணம் நடைபெற்றது.

இருவரும் சமீபத்தில் குடியேறியுள்ள இந்த கடலை நோக்கிய பிரம்மாண்ட அடுக்குமாடிக் குடியிருப்பு வீட்டின் மதிப்பு மட்டும் சுமார் 60 முதல் 70 கோடி ரூபாய் என மதிப்பிடப்படுகிறது.

பெங்களூருவின் ஒயிட்ஃபீல்டில் ஒரு சொகுசு வீடு, தொழில் நிறுவனத்தின் தலைமையகம் என கௌரிக்குச் சொந்தமான சொத்துக்களின் பட்டியலும் நீள்கிறது. ஆக, ஆமீர் கானின் கரம்பிடித்திருப்பது ஒரு சாதாரண பெண் அல்ல; மாறாக, தனக்கென ஒரு தனி சாம்ராஜ்யத்தைக் கட்டி, தனது அடையாளத்தை ஆழமாகப் பதிவு செய்த ஒரு பெண்மணி.!

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User