Doctor Vikatan: சித்த மருந்துகள் எடுக்கும்போது மலச்சிக்கல் ஏற்படுவது ஏன்?

May 08, 2026 - 08:01
0
Doctor Vikatan: சித்த மருந்துகள் எடுக்கும்போது மலச்சிக்கல் ஏற்படுவது ஏன்?

Doctor Vikatan: வயிற்றுப் பிரச்னை முதல், சளி, இருமல் என உடல்நலம் பாதிக்கப்படும்போதெல்லாம் நான் ஆங்கில மருந்துகள் எடுக்க மாட்டேன். சித்த மருந்துகள் எடுத்துச் சரியாக்கிக் கொள்வதுதான் வழக்கம். 

ஆனால், எப்போது சித்த மருந்துகள் சாப்பிட ஆரம்பித்தாலும் எனக்கு மலச்சிக்கல் பிரச்னையும் கூடவே வந்துவிடுகிறது. சித்த மருந்துகள் உடல் சூட்டைக் கிளப்புமா... மலச்சிக்கல் ஏற்படாமல் இருக்க என்ன செய்வது?

பதில் சொல்கிறார் திருப்பத்தூரைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் விக்ரம்குமார்

சித்த மருத்துவர் வி. விக்ரம்குமார்
சித்த மருத்துவர் வி. விக்ரம்குமார்

சித்த மருந்துகள் மலச்சிக்கலை உண்டாக்கும் என்பது  தவறான  கருத்து. பெரும்பாலான சித்த மருந்துகள் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றி, நோயைக் குணப்படுத்தும் தன்மை கொண்டவை என்பதுதான் உண்மை.

சித்த மருந்துகளை எடுத்துக் கொள்ளும்போது மலச்சிக்கல் ஏற்படுவதற்குப் பல காரணங்களைச் சொல்லலாம். உங்கள் கேள்வியைப் படிக்கும்போது, உங்களுக்கு உடல்நலமில்லாத போதெல்லாம் நீங்களாகவே சித்த மருந்துகள் வாங்கிப் பயன்படுத்துவீர்கள் என்று தெரிகிறது.

இப்படி முறையான மருத்துவ ஆலோசனை இன்றி, நீங்களாகவே மருந்துகளை எடுத்துக் கொள்வது முக்கிய காரணமாக இருக்கும். 

எந்தப் பிரச்னைக்கு எந்த மருந்தை, எந்த அளவில், எப்படி எடுக்க வேண்டும் என்று தெரியாமல், தவறான வீட்டு வைத்திய முறைகளைப் பின்பற்றுவது, பயிற்சி பெறாத, மருத்துவர்கள் அல்லாதவர்கள், பகிரும் மருத்துவக் குறிப்புகளைப் பார்த்துச் சுய மருத்துவம் செய்வது போன்றவையும் இதுபோன்ற விளைவுகளை ஏற்படுத்தலாம். 

பித்தம் அதிகமாக உள்ள உடல்வாகு கொண்டவர்களுக்கு, அதைக் கவனிக்காமல் சித்த மருந்துகளை எடுக்கும்போது மலச்சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.

சித்த மருத்துவத்தில் பரிந்துரைக்கப்படும் முக்கிய மருந்தான திரிபலா சூரணம், மலச்சிக்கலை குணமாக்கக்கூடியது.

சித்த மருத்துவத்தில் பரிந்துரைக்கப்படும் முக்கிய மருந்தான திரிபலா சூரணம், மலச்சிக்கலைக் குணமாக்கக்கூடியது. இது சிறந்த கழிவுநீக்கியாகச் செயல்பட்டு மலத்தை வெளியேற்றும். அதேபோல, சித்த மருத்துவத்தில் பரிந்துரைக்கப்படும் பெரும்பாலான லேகியங்களும் மலத்தை இளக்கி வெளியேற்றும் தன்மை கொண்டவை.

சித்த மருந்துகள் உடல் சூட்டைத் தணிக்கும் ஆற்றல் கொண்டவை, எனவே, அவை உடலைச் சூடாக்கும் என்பதும்  தவறான கருத்தாகும்.

சித்த மருந்துகளை எடுப்பதென முடிவு செய்தால், அவற்றை எப்படி உட்கொள்ள வேண்டும் எனத் தெரிந்திருக்க வேண்டியது அடிப்படை. மருந்துகளைச் சரியான அனுபானத்துடன் (துணை மருந்து) எடுத்துக் கொள்ள வேண்டும் என சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள்.

நோயாளியின் உடல்நிலை மற்றும் நாடித் துடிப்பைப்  பரிசோதித்து, வெந்நீர், பால், மோர், வெண்ணெய் அல்லது நெய் என ஏதேனும் ஒன்றோடு மருந்து எடுத்துக்கொள்ளப் பரிந்துரைக்கப்படும். வாதம், பித்தம், கபம் எப்படி இருக்கிறது என்பதையும் பார்த்தே மருத்துவர்கள் சிகிச்சை கொடுப்பார்கள்.  எனவே, சரியான மருத்துவ ஆலோசனையுடன் மருந்துகளை உட்கொள்ளும்போது  சிக்கல்கள் ஏற்படாது

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.   

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User