"ஜந்தர் மந்தர் இளைஞர்களுடன் உங்களை ஒப்பிட்டுப் பார்க்கிறேன்" - நெல்லையில் ஆளுநர் அர்லேகர் பேச்சு

Jul 28, 2026 - 16:00
0
"ஜந்தர் மந்தர் இளைஞர்களுடன் உங்களை ஒப்பிட்டுப் பார்க்கிறேன்" - நெல்லையில் ஆளுநர் அர்லேகர் பேச்சு

நெல்லையில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். பின்னர் பேசிய அவர், "பட்டம் பெறும் அனைத்து மாணவர்களிடமும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்ள விரும்புகிறேன். ஏனெனில், உங்கள் அனைவரையும் இந்த அரங்கிற்குள் அமர வைக்க இயலவில்லை.

உங்களில் சிலர் அரங்கிற்கு வெளியே இருப்பதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டது. அதற்காக அனைவரிடமும் மன்னிப்பு கோருகிறேன். உங்கள் அனைவரையும் இங்கே அமர வைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்திருக்க வேண்டியது இந்தப் பல்கலைக்கழகத்தின் வேந்தராகிய எனது பொறுப்பாகும். எனவே, மதிப்பிற்குரிய துணைவேந்தரிடம் நான் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன்: அடுத்த முறை நாம் இன்னும் பெரிய அரங்கைப் பயன்படுத்த வேண்டும்.

நீங்கள் அனைவரும் நம் நாட்டின் எதிர்காலம் மட்டுமல்ல, நிகழ்காலமும்கூட. நமது இளம் தலைமுறையைப் பற்றி மக்கள் தவறாகப் பேசுகிறார்கள். இக்காலத்தில் அவர்களை 'ஜென்சி' என்று அழைக்கும் போக்குகூட காணப்படுகிறது. சமீபத்தில் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் நடந்த நிகழ்வுகளை நாம் பார்த்தோம்; அங்குள்ள தலைமுறையினரையும், எனது திறமையான இளம் மாணவர்களான உங்களையும் நான் ஒப்பிட்டுப் பார்க்கிறேன்.

பட்டம் பெறுவது வரையிலும், உங்கள் பொறுமைக்கான ஒரு சோதனையாக இருந்தது. நீங்கள் நீண்ட காலமாக இதற்காகக் காத்திருந்தீர்கள். பட்டத்தை வேந்தர் (Chancellor) உங்களுக்கு வழங்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்ப்பது தவறானதா? நிச்சயமாக இல்லை. அது உங்கள் உரிமை. நீங்கள் அதற்காகக் கடுமையாக உழைத்திருக்கிறீர்கள். படித்துத் தேர்ச்சி பெற்றிருக்கிறீர்கள். எனவே, வேந்தரால் நீங்கள் புறக்கணிக்கப்படக் கூடாது. உங்கள் முயற்சிகளை நான் ஒருபோதும் புறக்கணிக்க மாட்டேன்.

இந்த விழாவில் பங்கேற்கும் உங்கள் எண்ணிக்கை சுமார் 800 முதல் 900 வரை இருக்கும் என்று நினைக்கிறேன். இன்றைய இளம் தலைமுறையினர் மக்கள், பெற்றோர், ஆசிரியர்கள், சமூகம் மற்றும் நாடு ஆகியவற்றைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வது மிகவும் முக்கியம். உங்களை இங்கே வரவேற்பது எனக்குக் கிடைத்த பெரும் கௌரவம்; உங்களில் பலர் என்னிடம் 'வணக்கம்' என்றீர்கள்.

சிலர், 'உங்கள் கைகளால் பட்டம் பெறுவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்' எனத் தெரிவித்தீர்கள். இதை அனைவரும் பாராட்ட வேண்டும். இதில் அனைவரும் பெருமை கொள்ள வேண்டும். உங்களுக்குத் தேவையானவை மற்றும் நீங்கள் விரும்புபவை அனைத்தையும் உங்களுக்கு வழங்குவதே எனது முக்கிய கடமையாகும். உங்களைச் சந்தித்து, உங்களைப் புரிந்துகொள்வதே எனது நோக்கம்.

2047-ம் ஆண்டு என்பது இன்றிலிருந்து சரியாக 20 ஆண்டுகள் கொண்ட ஒரு காலக்கட்டம். அதற்குள் நமது பிரதமரின் கனவு மட்டுமல்லாமல் நம் அனைவரின் கனவும் நனவாகப் போகிறது. இதை நோக்கி நாம் எவ்வாறு முன்னேறுவது என்பது குறித்து நாம் சிந்திக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும. தாமதிக்காமல், நம் மக்கள் மற்றும் நம் நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டு நாம் செயல்பட வேண்டும். நாட்டுக்காக நான் என்ன செய்யப் போகிறேன் என்று நீங்களே முடிவு செய்யுங்கள். உங்களிடம் திறமை இருக்கிறது.

வெறும் தகவல்கள் மட்டுமல்லாமல் உண்மையான அறிவும் உங்களிடம் உள்ளது. எனவே, அதைச் செயல்படுத்த முயற்சி செய்யுங்கள். நம்மால் மட்டுமே இதைச் செய்ய முடியும். அதற்காகத்தான் நான் இன்று உங்களைச் சந்திக்க இங்கு வந்துள்ளேன். வெறும் பேச்சாக மட்டும் பேசுவதில் எனக்குத் திருப்தி இல்லை. உங்களுடன் ஒரு கலந்துரையாடலை மேற்கொள்ளவும், மீண்டும் நேரில் வந்து உங்களுடன் நாள் முழுவதும் பேசவும் நான் விரும்புகிறேன். காரணம் நீங்கள்தான் இந்த நாட்டின் எதிர்காலம்" என்று ஆளுநர் அர்லேகர் பேசினார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User