Doctor Vikatan: வெயிலில் சென்றால் உடனே தலைவலி வருவது ஏன்... தவிர்க்க என்ன வழி?

Jun 06, 2026 - 08:31
0
Doctor Vikatan: வெயிலில் சென்றால் உடனே தலைவலி வருவது ஏன்... தவிர்க்க என்ன வழி?

Doctor Vikatan: வெயிலில் வெளியே சென்று வரும்போது ஒவ்வொரு முறையும் கடுமையான தலைவலிக்கு உள்ளாகிறேன்.

வெயில் இல்லாத நேரங்களில் இப்படி ஆவதில்லை. வெயிலுக்கும் தலைவலிக்கும் என்ன தொடர்பு...  இந்த வகை தலைவலியைத் தவிர்க்க என்ன செய்வது?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, பொது மருத்துவர் அருணாசலம்

பொது மருத்துவர் அருணாசலம்
பொது மருத்துவர் அருணாசலம்

வெயிலில் அலைந்துவிட்டு போதிய அளவு தண்ணீர் குடிக்காமல் இருந்தால், உடலுக்குள் ஏற்படும் நீரிழப்பு (Dehydration) காரணமாக முதலில் ரத்தம் அடர்த்தியாகும் (Concentrated blood).

இதன் விளைவாக தலைவலி ஏற்படும். வெயிலில் செல்லும்போது, சூரியனின் அதிகப்படியான வெப்பம் கண் பார்வை மூலமாக உள்வாங்கப்படும்போதும் தலைவலி வரலாம்.

வெப்பம் அதிகமாக இருக்கும்போது, மூளையின் ரத்தக் குழாய்கள் விரிவடைந்து அதன் மூலமாகவும் தலைவலி ஏற்பட வாய்ப்புள்ளது. பொதுவாக, மிக அதிக வெப்பம் மற்றும் காற்றில் ஈரப்பதம் (Humidity) அதிகமாக இருக்கும் சூழலில், உடலின் வெப்பத்தை வியர்வை மூலமாக வெளியேற்றி சருமத்தைப் பாதுகாக்கும் உடலின் பாதுகாப்பு மெக்கானிசம் (Protection mechanism) செயலிழந்து போகலாம்.

அந்த நேரத்தில், உடலின் உட்பகுதியில் உள்ள ரத்தக் குழாய்கள் (Deeper blood vessels) விரிவடைந்து, அதன் காரணமாக மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் குறைவதாலும் தலைவலி ஏற்படலாம்.

ஒற்றைத் தலைவலி  (Migraine) பிரச்னை உள்ளவர்களுக்கு, அந்தத் தலைவலியைத் தூண்டக்கூடிய காரணிகளில் (Trigger points) வெயிலும், அதிகப்படியான வெப்பமும் மிக முக்கியமாக இருக்கின்றன.

கடுமையான வெயிலில் இருந்துவிட்டு, திடீரென ஏசி அறைக்குள் நுழையும்போதோ அல்லது குளிர்ந்த நீரை அதிகம் குடிக்கும்போதோ மூளையின் ரத்தக் குழாய்கள் சட்டென்று சுருங்கி விரிவடைவதால் தலைவலி ஏற்படும்.  

காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வெளியே செல்வதைத் தவிர்ப்பது நல்லது.

தலைவலி வராமல் தடுக்க, தாகம் எடுக்கும் வரை காத்திருக்காமல், வெயிலில் செல்லும்போது அரை மணி நேரத்திற்கு ஒருமுறை சிறிதளவாவது தண்ணீர் குடிக்க வேண்டும். வெறும் தண்ணீருக்குப் பதிலாக இளநீர், மோர், எலுமிச்சைப்பழச் சாறு அல்லது ஓஆர்எஸ் (ORS) போன்ற எலக்ட்ரோலைட் நிறைந்த பானங்களைக் குடிப்பது உடலின் உப்புத்தன்மையைச் சமமாக வைத்திருக்கும்.

காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வெளியே செல்வதைத் தவிர்ப்பது நல்லது. தவிர்க்க முடியாத பட்சத்தில் குடை,  கூலிங்கிளாஸ் (Sunglasses) உபயோகிப்பது, காட்டன் ஆடைகளை அணிவது போன்றவற்றைப் பின்பற்ற வேண்டும். இவை வெப்பத்தின் தாக்கத்திலிருந்து ஓரளவு பாதுகாப்பு தரும். 

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User