Doctor Vikatan: டீன் ஏஜிலேயே எட்டிப் பார்க்கும் நரைமுடிகள்... ரிவர்ஸ் செய்ய முடியுமா?

May 12, 2026 - 08:01
0
Doctor Vikatan: டீன் ஏஜிலேயே எட்டிப் பார்க்கும் நரைமுடிகள்...  ரிவர்ஸ் செய்ய முடியுமா?

Doctor Vikatan: இந்தக் காலத்தில் டீன் ஏஜிலேயே பல பிள்ளைகளுக்கும் நரை முடிகள் அதிகரிப்பதைப் பார்க்கிறோம். இது இளநரை என்றும் ரிவர்ஸ் செய்துவிடலாம் என்றும் சொல்கிறார்களே....

டீன் ஏஜில் ஏற்படுகிற நரை முடிப் பிரச்னைக்கு என்ன காரணம்.... இதை உணவு, இயற்கை வழிகளில் சரி செய்ய முடியுமா?  

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, கூந்தல் சிகிச்சை  மருத்துவர் தலத் சலீம்.

சருமம், கூந்தல் சிகிச்சை சிறப்பு மருத்துவர் தலத் சலீம்
சருமம், கூந்தல் சிகிச்சை சிறப்பு மருத்துவர் தலத் சலீம்

ஹேர் ஃபாலிக்கிள் எனப்படும் கூந்தலின் நுண்ணறைகளில் உள்ள மெலனோசைட்ஸ் எனும் செல்கள் மெலனின் என்ற நிறமியை உற்பத்தி செய்கின்றன. இவைதான் நம் கூந்தலுக்கு கருமை நிறத்தைக் கொடுக்கின்றன. மெலனோசைட்ஸ் செல்கள் மெலனின் உற்பத்தி செய்வதைக் குறைக்கும்போது கூந்தல் நரைக்கத் தொடங்கும்.

மெலனின் உற்பத்தி குறையக் கீழ்க்காணும் விஷயங்கள் காரணமாகலாம். நரை முடி வந்துவிட்டால், அதை ரிவர்ஸ் செய்ய முடியாது. ஆனால், அதிகரிக்காமல் தடுக்கலாம். அதற்கு வாழ்வியல் மாற்றங்கள் மற்றும் உணவியலில் கவனம் செலுத்த வேண்டும்.

வைட்டமின் பி12, இரும்புச்சத்து, தாமிரச்சத்து, அயோடின் மற்றும் வைட்டமின் டி போன்ற சத்துகள் குறைவாக இருப்பது.

மன அழுத்தம் அதிகரிக்கும்போது கூந்தலுக்குப் போதிய ஊட்டச்சத்து கிடைப்பது குறைந்து, முடி நரைக்கத் தொடங்குகிறது.

குடும்பத்தில் யாருக்காவது இளம் வயதில் நரை இருந்தால், உங்களுக்கும் அது வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

தைராய்டு பாதிப்பு

ஃபேஷன் என்ற பெயரில் இளம் வயதிலேயே கூந்தலுக்கு கலரிங் செய்வது, இளநரையை ஏற்படுத்தலாம். ஹேர் கலர்களில் உள்ள ரசாயனங்கள் முடியைப் பலவீனமாக்கி, நரையை ஏற்படுத்தும்

அதிக நேரம் வெயிலில் இருப்பது கூந்தலை நிறமிழக்கச் செய்யலாம். சருமத்துக்கு சன்ஸ்கிரீன் உபயோகிப்பது மாதிரி, வெயிலில் போகும்போது தலைக்கு தொப்பி, ஸ்கார்ஃப் அணிய வேண்டும்.

போதுமான தூக்கம் இல்லாததால் ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு குறைந்து, கூந்தல் வலுவிழந்து, நிறம் மாறுகிறது.

கறிவேப்பிலை பயன்கள்
கறிவேப்பிலை மெலனின் உற்பத்தியை அதிகரிக்கும் தன்மை கொண்டது.

இளவயதிலேயே உணவு விஷயத்தில் கூடுதல் அக்கறை செலுத்தினால், இப்படி நரை முடி அதிகரிப்பதைத் தவிர்க்கலாம்.  ஒரு கைப்பிடி கறிவேப்பிலையை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து, மறுநாள் காலையில் கொதிக்கவிட்டு வடிகட்டி, அந்த நீரை வாரத்தில் மூன்று நாள்களுக்கு ஒரு கப் குடித்து வந்தால், இளநரையைத் தவிர்க்கலாம்.

கறிவேப்பிலை மெலனின் உற்பத்தியை அதிகரிக்கும் தன்மை கொண்டது. அசைவம் சாப்பிடுபவர்கள் வாரம் இரண்டு அல்லது மூன்று முறை ஆட்டு ஈரல் சாப்பிட்டு வந்தால், இளநரை வருவது தள்ளிப்போகும். ஈரலில் வைட்டமின் பி12 நிறைந்துள்ளது. 

சிறிதளவு தயிரில் ஒரு டீஸ்பூன் ஈஸ்ட்டை கலந்து, தினமும் காலை உணவுக்கு முன்பு குடித்து வந்தால் இளநரை தடுக்கப்படும். வைட்டமின் ஹெச் நிறைந்த முட்டை, சீஸ், வெங்காயம், வெள்ளரி, பாதாம் போன்றவற்றை உங்கள் உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ள வேண்டும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User