"மேகதாது விவகாரத்தில் டி.கே.சிவக்குமார் பொறுப்பின்றி பேசுகிறார்"- அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல் குமார்
மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு தீவிர முயற்சி எடுத்து வருகிறது. மேகதாது அணை கட்டினால் தமிழகத்திற்கு வரவேண்டிய நீரின் அளவு பெருமளவு குறையும். இதனால் விவசாயம் கடுமையாகப் பாதிக்கப்படும்.
ஆனால் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார், ``மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம். விரைவில் பூமி பூஜை நடத்தப்படும். தமிழக அரசு என்ன வேண்டுமானாலும் செய்யட்டும்" என்று அணை கட்டுவதில் தீவிரம் காட்டி வருகிறார்.

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கும் தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார், "மேகதாதுவில் அணை கட்ட எந்தக் காலத்திலும் முதலமைச்சர் அனுமதிக்க மாட்டார்.
மேகதாதுவில் அணை கட்டுவதற்கான திட்ட வரைவை மட்டுமே தாக்கல் செய்யுமாறு கர்நாடகாவிற்கு உச்ச நீதிமன்றம் கூறியிருந்த நிலையில், அதை மீறி அவர்கள் பூமிப் பூஜை செய்வதாகக் கூறினார்கள்.
அதனால், அதை செய்யக் கூடாது என தேசிய பசுமை தீர்பாயத்தில் தமிழ்நாடு அரசு சார்பாக முறையிட்டுள்ளோம்.
அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கையை மட்டுமே உச்ச நீதிமன்றம் கேட்டுள்ளதால், இந்த இடைப்பட்ட சமயத்தில் அவர்கள் பூமிப் பூஜை செய்ய முடியாது.
தேவையில்லாமல் இரு மாநிலங்களுக்கு இடையே சட்டம் ஒழுங்கு பிரச்னையை கொண்டுவருவதற்கான முயற்சிகளை டி.கே.சிவக்குமார் மேற்கொள்கிறார். இரு மாநிலங்களுக்கும் அமைதி தேவை.

இரு மாநில மக்களிடையே தொழில் உறவுகளும் நிறைய உள்ளது. ஆனால், அரசியல் காரணங்களுக்காக தேவையில்லாமல் டி.கே.சிவக்குமார் இதுபோல் செய்துவருகிறார். இதுபோல் சர்ச்சையைக் கிளப்புவதை அவர் நிறுத்த வேண்டும்.
இரு மாநிலங்களுக்கும் தனித்தனியே கொள்கைகள் இருக்கின்றன. மாநிலங்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்ற வரையறை உள்ளது. ஆனால் மேகதாது விவகாரத்தில் டி.கே.சிவக்குமார் பொறுப்பின்றி பேசியிருக்கிறார்" என்றார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)