"எனது சொந்தக்காரர் 100 கோடிக்கு நிலம் வாங்கினாரா?" - பத்திரப்பதிவு சர்ச்சைக்கு அமைச்சர் விளக்கம்!

Jul 14, 2026 - 19:32
0
"எனது சொந்தக்காரர் 100 கோடிக்கு நிலம் வாங்கினாரா?" - பத்திரப்பதிவு சர்ச்சைக்கு அமைச்சர்  விளக்கம்!

பழனி அடிவாரத்தில் உள்ள தண்டபாணி சுவாமிகள் மடத்திற்குச் சொந்தமான 100 கோடி மதிப்பிலான 1.40 ஏக்கர் நிலம் கடந்த ஜூலை 6-ஆம் தேதி தனிநபர்கள் இருவரின் பெயர்களில் வெறும் ரூ. 2 கோடிக்கு முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற பின்பு இந்தச் சம்பவம் நடந்துள்ளதால், தவெக அரசு மீதும், இந்து அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் மீதும் பக்தர்கள் மற்றும் இந்து அமைப்புகள், எதிர்க்கட்சிகள் கடும் அதிருப்தியையும் குற்றச்சாட்டுகளையும் முன்வைத்து வருகின்றனர்.

பழனி
பழனி

குறிப்பாக தண்டபாணி சுவாமி மடத்துக்கு சொந்தமான நிலத்தை அமைச்சர் ரமேஷ் உறவினர்கள் வாங்கியதாக தகவல் வெளியானது. மேலும் அமைச்சர் ரமேஷ்க்கும் இதில் தொடர்பு உள்ளதாக கூறப்பட்டது.

இந்நிலையில் அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்திருக்கிறார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், " கோயில் விவகாரத்தில் உண்மை தெரியாமல் பேசுகின்றனர். அரசின் மீது ஊழல் கரையை ஏற்படுத்த சிலர் முயற்சி செய்து வருகின்றனர்.

எனது சொந்தக்காரர் ஒருவர் ரூ.100 கோடிக்கு நிலம் வாங்கியதாக பொய் செய்தி பரப்புகின்றனர். அப்படி ஒரு சொந்தக்காரர் இருப்பதே நீங்கள் சொல்லித்தான் தெரியும்.

அரசு மீது ஊழல் கரையை சுமத்த எதிர்க்கட்சிகள் முயற்சி செய்கின்றனர். இதெல்லாம் பொய், புரட்டு, வேண்டும் என்றே கங்கணம் கட்டிக்கொண்டு வன்மத்துடன் இப்படியெல்லாம் பொய் பரப்புகின்றனர்.

அமைச்சர் ரமேஷ்
அமைச்சர் ரமேஷ்

நிலத்தை பதிவு செய்த சார் பதிவாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கோயில் நிலங்களில் ஒரு இன்ச் நிலத்தை கூட யாருக்கும் கொடுக்க எங்களுக்கு விருப்பம் கிடையாது. பொய், புரட்டு பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என்று பேசியிருக்கிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User