Dharman: 'கே.எஸ். ரவிக்குமார், சுந்தர்.சி, சிபி சக்ரவர்த்தி படங்கள் நடக்காதது ஏன்?' - ரஜினி பதில்

Jun 24, 2026 - 11:31
0
Dharman: 'கே.எஸ். ரவிக்குமார், சுந்தர்.சி, சிபி சக்ரவர்த்தி படங்கள் நடக்காதது ஏன்?' - ரஜினி பதில்

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அந்தப் படத்திற்கு 'தர்மன்' என்று தலைப்பிட்டிருக்கிறார்கள்.

ராஜ்கமல் நிறுவனம் சார்பில் கமல்ஹாசன் மற்றும் மகேந்திரன் தயாரிக்கும் இப்படத்தில் சிம்ரன், ராஷி கன்னா முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இப்படத்தின் டைட்டில் வெளியீட்டு விழா இன்று சென்னை ராஜ்கமல் அலுவலகத்தில் நடைபெற்றது.

Dharman - Rajinikanth - Ashwath Marimuthu
Dharman - Rajinikanth - Ashwath Marimuthu

ரஜினிகாந்த், "நான் பேசினாலே பிரச்னைதான் (சிரித்துக் கொண்டே...). பேசினால், 'இதை ஏன் பேசினார்' என்பார்கள். பேசவில்லை என்றால், 'ஏன் பேசவில்லை. வாயில் கொழுக்கட்டை வைத்திருக்கிறாரா?' என்பார்கள்.

நம்மைப் பிடிக்காதவர்களுக்கு எது செய்தாலும் பிடிக்காது. நம்மைப் பிடித்தவங்களுக்கு எது செய்தாலும் பிடிக்கும் என நினைப்பது முட்டாள்தனம் என்பதைப் புரிந்துக் கொண்டேன்.

ராஜ்கமலின் புதிய அலுவலகத்தைத் திறக்கும்போது என்னிடம் கமல், 'ரஜினி ஆபீஸைப் பெரியதாகத் தொடங்கிவிட்டேன். எனக்கு ஒரு படம் பண்ணுங்கள்' என்றார்.

இந்தப் ப்ராஜெக்ட்டிற்கு அஸ்வத் மாரிமுத்து நான்காவது டைரக்டர். முதலில் ரவிக்குமாரை ஃபிக்ஸ் செய்திருந்தோம். பிறகு, சுந்தர்.சி. அவருக்கும் வேறொரு படம் இருந்தது. அதனால் தாமதமாவதாக இருந்தது. அதனால் விலகிக் கொள்ளலாம் என முடிவு செய்தோம். பிறகு சிபி சக்ரவர்த்தி.

அவரிடம் கதையெல்லாம் கேட்டேன். அது ரொம்பவே சென்சிடிவ் சப்ஜெக்ட். அது அணு விஞ்ஞானி பற்றிய கதை. ஷூட்டிங் ஆப்கானிஸ்தான், ரஷ்யா போன்ற இடங்களில் படப்பிடிப்பை நடத்த வேண்டும்.

அதுமட்டுமல்லாமல், அந்த சென்சிடிவ் சப்ஜெக்டை ஜாக்கிரதையாகவும் செய்ய வேண்டும். அதனால், அதை பிறகு செய்து கொள்ளலாம் என முடிவு செய்தோம். கமல் என்னிடம், 'ரஜினி நான் கதையைக் கேட்க மாட்டேன். அனைத்தையும் உங்களிடம் விட்டுவிட்டேன். நீங்கள் சொல்வதை நான் செய்கிறேன்' என்றார்.

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்

அதுதான் எனக்கு கூடுதல் பரபரப்பைத் தந்தது. பெரிய பொறுப்பு எனக்கு வந்துவிட்டது. நிச்சயமாக படம் நல்லா வரும் என நம்பிக்கை இருக்கிறது. அஸ்வத் மாரிமுத்துவின் 'டிராகன்' படம் எனக்கும் ரொம்பவே பிடித்திருந்தது" என்றவர், "கமல் எனக்குச் செய்ததை என்னவென்று சொல்வது எனக்குத் தெரியவில்லை.

நான் நடித்த 'இளமை ஊஞ்சல் ஆடுகிறது' படத்தில் முதலில் ஜெய்கணேஷ் நடிப்பதாக இருந்தது. அப்போது நான் தெலுங்கு, கன்னட படங்களில் நடித்து வந்தேன். அப்போது என்னிடமும் டேட் கிடையாது.

பிறகு கமல், அப்படத்தின் இயக்குநரான ஸ்ரீதர் சாரிடம் என்னை வைத்து இயக்கச் சொல்லியிருக்கிறார். பிறகு இயக்குநரே என்னை அழைத்து, 'ரஜினி இந்தப் படத்தைப் பண்ணுங்க. நான்கூட டேட்டை தள்ளி வைக்கிறேன்' என்றார்.

அந்தப் படம் எனக்கு வந்ததற்குக் காரணம் கமல்ஹாசன்தான். 'பேட்ட' படத்திற்குப் பிறகு சிம்ரனுடன் நான் நடிக்கிறேன். 'தர்மன்' நல்ல எண்டர்டெயினிங் சினிமாவாக இருக்கும்" என்றார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User