`கடன் நெருக்கடி; மன உளைச்சல்' - தீவிர திமுக விசுவாசியான அசோக்குமார் MLA தவெகவில் இணைகிறாரா?

Jun 20, 2026 - 15:01
0
`கடன் நெருக்கடி; மன உளைச்சல்' - தீவிர  திமுக விசுவாசியான அசோக்குமார் MLA தவெகவில் இணைகிறாரா?

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி சட்டமன்ற தொகுதி திமுக எம்.எல்.ஏ அசோக்குமார். இவர் தவெக-வில் இணைய இருப்பதாக பேசப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக-வில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ-க்கள் சிலர் தங்களது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெக-வில் இணைந்துள்ளனர். அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ உள்ளிட்டோர் தவெக-வில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பேராவூரணி திமுக எம்.எல்.ஏ அசோக்குமார்

இதனிடையே, தவெக ஆட்சியை கவிழ்ப்பதற்காக பத்து தவெக எம்.எல்.ஏக்களை தங்கள் பக்கம் இழுப்பதற்கான முயற்சியில் திமுக தலைமை காய் நகர்த்தி வருவதாக அரசியல் வட்டத்தில் பேசப்படுகிறது. இந்நிலையில் அதிமுக உள்ளிட்ட மாற்றுக் கட்சியினரை சேர்த்து வந்த தவெக திமுக-வினரை தவெகவுக்கு இழுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாக சொல்கிறார்கள். இதற்காக அதிருப்தி, நிதி நெருக்கடியில் இருக்கும் திமுக எம்.எல்.ஏக்களுக்கு வலை வீசும் முயற்சியில் தவெக இறங்கியிருப்பதாக சொல்கிறார்கள்.

பேராவூரணி திமுக எம்.எல்.ஏ அசோக்குமார் கடும் நிதி நெருக்கடியில் இருக்கிறார். தேர்தலுக்கு கணக்கு பார்க்காமல் செலவு செய்ததால் பல கோடி கடனில் இருக்கிறார் என்கிறார்கள். இதனால் அசோக்குமாரை தங்கள் பக்கம் இழுத்து திமுக-வுக்கு அதிர்ச்சி கொடுக்க தவெக தலைமை அமைச்சர் ஒருவர் மூலம் முயற்சி செய்வதாக பேசப்படுகிறது. இந்த விவகாரம் டெல்டா அரசியலில் பேசு பொருளாகியிருக்கிறது.

திமுக-வினருடன் அசோக்குமார்

இதுகுறித்து உள்விபரங்கள் அறிந்த பலரிடம் பேசினோம்,

`திமுக-வின் தீவிர விசுவாசி அசோக்குமார். தொகுதிக்குள் தனக்கென தனி செல்வாக்குடன் வலம் வந்தவர். பல்வேறு பதவிகளை கட்சியில் வகித்தவர் பேராவூரணி பேரூராட்சி சேர்மனாகவும் இருந்திருக்கிறார். 2016 சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமை பேராவூரணியில் அசோக்குமாரை களமிறக்கியது. செலவுக்கு தலைமை எதிர்பார்க்காமல் 7 ஸ்வீட் பாக்ஸ் வரை செலவு செய்தவர், சொற்ப வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார்.

2021ல் தேர்தலின் மீண்டும் போட்டியிட்டார். அப்போதும் தலைமை இவருக்கு செலவுக்கு பணம் கொடுக்கவில்லை என்கிறார்கள். அப்போது பல ஸ்வீட் பாக்ஸ் வரை செலவு செய்து வெற்றி பெற்றார். திமுக ஆளும் கட்சியானது பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைப்பெற்றது. இந்நிலையில் நடந்து முடிந்த2026 தேர்தலிலும் திமுக தலைமை இவரையே நிறுத்தியது.

இம்முறை ஒவ்வொரு வேட்பாளருக்கும குறிப்பிட்ட தொகையை தலைமை வழங்கியது. இதில் இவருக்கு தலைமை கொடுத்த பணம் முழுமையாக கைக்கு வரவில்லை என்கிறார்கள். களமும் கடினமாக இருந்தது. இதனால் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் கடன் வாங்கி செலவு செய்கின்ற நிலைக்கு ஆளானார். கடந்த தேர்தல்களை விட அதிக செலவு செய்தார். திமுக ஆளும்கட்சியாக வந்து விடும் சமாளித்து விடலாம் என்பது அவரின் எண்ணம்.

ஸ்டாலின் - திமுக
ஸ்டாலின் - திமுக

ஆனால் திமுக எதிர்கட்சியாகி விட்டது. அவரது எண்ணமும் பொய்த்து விட்டதால் எதுவும் செய்ய முடியாத நிலைக்கு ஆளாகி விட்டார் அசோக்குமார். பொதுவாக அசோக்குமார் கணக்கு வழக்கு பார்க்காமல் செலவு செய்யக்கூடியவர். கொடுத்து சிவந்த கர்ணன் என அவரால் பலன் பெற்றவர்கள் அவரை சொல்வதுண்டு.

நன்கொடை கேட்டு யார் சென்றாலும் வெறுங்கையுடன் திருப்பி விட மாட்டார். எம்.எல்.ஏ-வாக முதல் இரண்டு வருடங்கள் அடக்கி வாசித்தவர் மீண்டும் களமிறங்க முடிவெடுத்த, பின்னர் யோசிக்காமல் செலவு செய்தார்.

எம்.எல்.ஏ-வாக இருக்கும் போதே அதிமுக முன்னாள் அமைச்சர் ஒருவரிடம் தனது தென்னந்தோப்பை விற்று செலவு செய்தார். இப்படியாக கட்சிக்கும், தேர்தலுக்கும் ஏகபோகமாக செலவு செய்தவருக்கு தற்போது கடும் கடன் இருக்கிறது என்கிறார்கள்.

கடன் கொடுத்தவர்கள் வேறு நெருக்கடி கொடுக்கின்றனர். சமீபத்தில் தனக்கு சொந்தமான நிலத்தை எம்.ஓ.டி செய்து கொடுத்து கடன் வாங்கி கொஞ்சம் நிலமையை சமாளித்தார். எப்போதும் கொடுத்து பழக்கப்பட்டவர் என்பதால் அவரது வீட்டுக்கு நன்கொடை கேட்டு பலரும் சென்றார்கள். இக்கட்டான நிலையில் இருக்கும் அவரால் எதுவும் தர முடியாத நிலை. இப்படியான சூழலில் அவரது வீட்டில், நன்கொடை கேட்டு யாரும் வர வேண்டாம் என்று அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

இதில் அசோக்குமாருக்கு விருப்பமில்லை, அவரது குடும்பத்தினர் வைத்திருப்பதாக சொல்கிறார்கள். கடனால் நிதி நெருக்கடியோடு சேர்ந்து மன உளைச்சலுக்கும் ஆளாகியிருக்கிறார். தன் நிலையை தனக்கு நெருக்கமான பலர்கிட்ட சொல்லி புலம்பியிருக்கிறார்.

அவருடைய நலம் விரும்பிகள் பலர் அசோக்குமார் நிலையை எண்ணி எப்படி இருந்த மனுஷன் இப்படி கலங்கி நிக்குறாறேனு கவலைப்படுகின்றனர். தன்னோட கடன் நிலை குறித்து உதயநிதி ஸ்டாலின் தரப்பை இருமுறை சந்தித்து வெளிப்படையாக பேசியிருக்கிறார். ஆனால் உதயநிதி தரப்பில் முறையாக எதுவும் சொல்லாததால் அப்செட்டில் இருக்கிறார்.

இதனிடையே தஞ்சாவூரில் புதிய மாவட்ட ஆட்சியராக ரேவதி பொறுப்பேற்றார். திமுக முன்னாள் அமைச்சர் கோவி.செழியன் தலைமையில் திமுக எம்.எல்.ஏக்கள் உள்ளிட்ட பலர் மாவட்ட ஆட்சியரை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். உடல் நிலை சரியில்லாததால் அசோக்குமாரால் அப்போது செல்லமுடியவில்லை.

இந்நிலையில் தவெக அரசில் கொறடாவாக இருக்கும் சபரிவாசன் பேராவூரணியை பூர்வீகமாக கொண்டவர். நிகழ்ச்சி ஒன்றிற்காக பேராவூரணி வந்தார் சபரிவாசன். அதே நிகழ்சிக்கு அசோக்குமாரும் சென்றார். அப்போது இருவரும் மரியாதை நிமித்தமாக பரஸ்பரம் பேசிக் கொண்டனர்.

உதயநிதி

இவற்றையெல்லாம் சேர்த்து அசோக்குமாருக்கு வேண்டாதவர்கள் அவர் தவெக-வில் இணையப் போவதாகவும், இதற்காக பெரும் தொகை கேட்டுள்ளார் என்றும் வதந்தியை பரப்புகின்றனர். பெரும் கடன் அசோக்குமார் கழுத்தை நெறிப்பது உண்மை. அதிலிருந்து வெளிபட முடியாமல் சிலந்தி வலையில் சிக்கியவராக தவிக்கிறார். தன் நிலையை வெளிப்படையாக பேச முடியவில்ல்லை. திமுக தன்னை காப்பாற்றும் என்ற முழு நம்பிக்கையில் இருக்கிறார்.

ஸ்டாலின், உதயநிதி ஆகியோர் இதில் தலையிட்டு கட்சிக்காக உழைத்த அவரை காக்க வேண்டும் என்பதுதான் பலரது எண்ணமாக உள்ளது. கடனில் இருந்து அசோக்குமார கரை சேரவில்லை என்றால், திமுக அவரை காக்கவில்லை என்றால் அவர் முடிவு என்னவாக இருக்கும் என்று தெரியவில்லை' என்றனர்.

தனக்கு அடையாளம் கொடுத்தது தன்னை ஆளாக்கியது திமுக. ஒரு போதும் அசோக்குமார் மாற்றுக் கட்சிக்கு செல்லமாட்டார். அவர் கடனில் இருப்பது உண்மை தான், இதற்காக உதயநிதியை சந்தித்து பேசியிருப்பதும் உண்மையே என அவரது தரப்பில் தெரிவித்தனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User