ஏசி தண்ணீரில் சமையல்: வளைகுடா, ஹார்மூஸ் ஜலசந்தியில் தவிக்கும் இந்திய கப்பல் மாலுமிகள்

May 11, 2026 - 07:32
0
ஏசி தண்ணீரில் சமையல்: வளைகுடா, ஹார்மூஸ் ஜலசந்தியில் தவிக்கும்  இந்திய கப்பல் மாலுமிகள்

ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே மோதல் தொடங்கியதில் இருந்து வளைகுடா மற்றும் ஹார்மூஸ் ஜலசந்தி பகுதியில் சரக்கு கப்பல் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஈரான் தனது நாட்டிற்கு அருகில் இருக்கும் ஹார்மூஸ் ஜலசந்தியை மூடி இருக்கிறது. மற்றொரு புறம் ஈரானுக்குள் எந்த கப்பலும் செல்ல விடாமல் அமெரிக்கா முற்றுகை செய்துள்ளது. ஈரான் துறைமுகத்திற்குள் செல்லும் கப்பல்களை அமெரிக்க கடற்படையினர் பறிமுதல் செய்து வருகின்றனர். ஹார்மூஸ் ஜலசந்தி வழியாக ஈரான் அனுமதி இன்றி செல்லும் ஆயில் மற்றும் சரக்கு கப்பல்கள் மீது ஈரான் கடற்படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இதனால் உலக அளவில் கச்சா எண்ணெய் விநியோகம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. ஈரான் மற்றும் அமெரிக்காவின் இந்த செயல்களால் வளைகுடா மற்றும் ஹார்மூஸ் ஜலசந்தி அருகில் ஆயிரக்கணக்கான சரக்கு மற்றும் எண்ணெய் கப்பல்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அந்த கப்பல்கள் மாதக்கணக்கில் அங்கு நின்றுகொண்டிருக்கிறது. இதில் பெரும்பாலான கப்பல்களில் மாலுமிகளாக பணியாற்றுபவர்கள் இந்தியாவை சேர்ந்தவர்கள் ஆவர். அவர்கள் எப்போது தங்களுக்கு என்ன நடக்குமோ என்று தெரியாமல் சரியாக உணவு மற்றும் மருந்து போன்ற அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கின்றனர்.

ஒவ்வொரு நாளும் அவர்களது கப்பலுக்கு மேலே ட்ரோன்களும், ஏவுகணைகளும் பறந்து செல்வதை பார்த்து எப்போது தங்களது கப்பல் மீது விழுமோ என்ற அச்சத்தில் அவர்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்தியாவை சேர்ந்த 20 ஆயிரத்திற்கும் அதிகமான கப்பல் மாலுமிகள் வளைகுடா மற்றும் ஹார்மூஸ் ஜலசந்தி பகுதியில் இருப்பதாக இந்திய மாலுமிகள் சங்கம் தெரிவித்துள்ளது. வளைகுடாவிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் இயங்கும் கப்பல்கள் இப்போது ஏவுகணை மற்றும் ட்ரோன் அச்சுறுத்தல்கள், செயல்பாட்டுக் கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றனர்.

தொழில்நுட்ப ரீதியாக ஹார்முஸ் ஜலசந்தி திறந்திருந்தாலும் அதில் பயணம் செய்வது ஆபத்து மிகுந்ததாக மாறி இருக்கிறது.

இது குறித்து இந்திய கப்பல் மாலுமிகள் சங்கத்தின் செயலாளர் மிலிந்த் கூறுகையில்,'' கப்பல் மாலுமிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் இடையே அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு இதில் உடனடியாக தலையிட்டு அவர்களை மீட்க உதவவேண்டும். இந்த மாலுமிகள் உலக வர்த்தகம் மற்றும் இந்தியாவின் பொருளாதார பாதுகாப்பிற்கு மிகவும் கடினமான சூழ்நிலையில் வேலை செய்கிறார்கள். பல இந்திய கடற்படையினர் வெளிநாட்டுக் கப்பல்களில் பணிபுரிகின்றனர்.
அவர்களை பாதுகாக்கவேண்டியது அவசியம். நிலைமை மோசமடைந்தால், நூற்றுக்கணக்கான கப்பல்கள் சிக்கிக்கொள்ளலாம், பணியாளர்கள் மாற்றங்கள் முற்றிலும் நிறுத்தப்படலாம், உணவு மற்றும் மருத்துவப் பொருட்கள் கிடைப்பது கடினமாகலாம். தகவல் தொடர்பு அமைப்புகள் உடைந்து போகலாம்"என்றார்.

இதுவரை மே 7 ஆம் தேதி நிலவரப்படி இந்தியாவை சேர்ந்த 2,999 மாலுமிகள் பாதுகாப்பாக இந்தியா வந்து சேர்ந்துள்ளனர் என்று துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகம் தெரிவித்துள்ளது. தற்போது இந்திய கப்பல்களை கண்காணிக்க கடற்படையிடனர் கப்பல்களை நிறுத்தி இருக்கின்றனர். மோதல் நீடித்தால் கண்காணிப்பு மட்டும் போதாது என்று மாலுமிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கேப்டன் ராமன்

கடந்த சில மாதங்களாக ஹார்மூஸ் ஜலசந்தி பகுதியில் டேங்கர் கப்பலில் சிக்கிக்கொண்டுள்ள இந்திய மாலுமி கேப்டன் ராமன் கபூர் அளித்துள்ள பேட்டியில்,''நாங்கள் ஆறு மாதங்களாக கப்பலில் இருக்கிறோம். எங்களுடன் இருக்கும் சக மாலுமிகள் 24 மணி நேரமும் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை கண்காணித்துக் கொண்டிருக்கின்றனர். அதோடு அவர்களுக்கு மனச்சோர்வு ஏற்படக்கூடாது என்பதற்காக மாலை நேரத்தில் டேபிள் டென்னிஸ் போன்ற விளையாட்டுக்களை விளையாடுகிறோம்.

நாங்கள் யாரையும் தனிமையில் விடுவது கிடையாது. ஈரான் முதலில் எங்களை உள்ளே வர அனுமதித்துவிட்டு பிறகு மனதை மாற்றிக்கொண்டது'' என்றார். கப்பலில் தண்ணீர் பிரச்னையால் ஏர் கண்டிசனரில் இருந்து வரும் தண்ணீரை எடுத்து துணி துவைப்பது மற்றும் சமையல் செய்வது போன்ற வேலையில் ஈடுபடுகின்றனர். மொத்தம் 2 ஆயிரத்திற்கும் அதிகமான கப்பல்கள் ஹார்மூஸ் பகுதியில் இருக்கிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User