செட்டிநாடு: ரூ.800 கோடி முறைகேடு? – கருப்பன் செட்டிக்கு எதிரான வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவு!

Jun 02, 2026 - 14:32
0
செட்டிநாடு: ரூ.800 கோடி முறைகேடு? –  கருப்பன் செட்டிக்கு எதிரான வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவு!

செட்டிநாடு குடும்பத்தைச் சேர்ந்த கல்வியாளர் மற்றும் சமூக சேவகர் மீனா முத்தையா மறைவுக்கு பின்னர், அவரது நெருங்கிய பணியாளரான கே.டி.ஆர். ராஜா கருப்பன் செட்டி எனும் கருப்பையா மீது எழுந்துள்ள ₹800 கோடி நிதி முறைகேடு குற்றச்சாட்டுகளை விசாரிக்க சென்னை காவல் ஆணையருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிபதி முகமது ஷபீக் பிறப்பித்த உத்தரவின்படி, கருப்பன் செட்டி மீது அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மீனா முத்தையாவின் நம்பிக்கையை பெற்று அந்த தொடர்பை பயன்படுத்தி, செட்டிநாடு குடும்பத்துக்குச் சொந்தமான சுமார் ₹800 கோடி மதிப்பிலான சொத்துகள் மற்றும் நிதிகளை முறைகேடாக கையகப்படுத்தியதாக அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு, குமார ராஜா முத்தையா பாரம்பரிய கலை மற்றும் கைவினைப் பள்ளியின் உறுப்பினர் வி. பழனியப்பன் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் விசாரணைக்கு வந்தது. இப்பள்ளி சென்னையில் இயங்கும் செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியை நிர்வகித்து வருவதால், மாணவர்களின் நலனும் இந்த விவகாரத்துடன் தொடர்புடையதாக நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

மீனா முத்தையா
மீனா முத்தையா


மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜே. ரவீந்திரன், கருப்பன் செட்டி மீது குற்றச்சதி, மோசடி, ஆவண மோசடி, ஏமாற்றுதல், நம்பிக்கை மோசடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

புகாரின் படி, ஆரம்பத்தில் சாதாரண வீட்டு உதவியாளராக பணியில் சேர்ந்த கருப்பன் செட்டி, காலப்போக்கில் மீனா முத்தையாவின் நம்பிக்கையை பெற்று குடும்ப நிர்வாகம், தகவல் பரிமாற்றம் மற்றும் சொத்து விவகாரங்களில் முழுமையான கட்டுப்பாட்டைப் பெற்றதாக கூறப்படுகிறது.

மேலும், மீனா முத்தையாவின் வயது மற்றும் உடல்நிலை பலவீனத்தை பயன்படுத்தி, அவரை உறவினர்களிடமிருந்து தனிமைப்படுத்தியதுடன், தனது குடும்ப உறுப்பினர்களையும் செட்டிநாடு குடும்ப அறக்கட்டளைகளில் இணைத்து, அவர்களது பெயர்களில் சொத்துகளை சேர்த்ததாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செட்டிநாடு குடும்பத்தின் தொண்டு நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட வேண்டிய நிதிகளை அவர் எவ்வாறு முறைகேடாக எடுத்தார் என்பதும், குடும்பத்தின் தொண்டு நோக்கங்களை எவ்வாறு பாதித்தார் என்பதும் வெளிச்சத்துக்கு வரும் எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அறக்கட்டளையின் கணக்குகள் மற்றும் நிர்வாக கட்டுப்பாட்டை, உயர் நீதிமன்றம் கடந்த மாதம் இடைக்கால நிர்வாகியாக நியமித்த தொழிலதிபர் பி. விஜயகுமார் ரெட்டியிடம் ஒப்படைக்காததோடு, வங்கிக் கணக்குகளில் இருந்து தொடர்ந்து பணம் எடுத்துவருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இந்த குற்றச்சாட்டுகள் குறித்து விரிவான விசாரணை நடத்தி, உண்மை நிலையை கண்டறிய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User