`நாளையிலிருந்து கோழி இறைச்சி கிடைக்காதா?' - கோழி வணிகர்களின் கூட்டமைப்பு சொல்வது என்ன?
தஞ்சையில் கோழி வணிகர்கள் கூட்டமைப்பின் மாநில செயற்குழு கூட்டம் இந்த மாதத் தொடக்கத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் ஒரு வார காலத்திற்கு கோழி இறைச்சி விற்பனையை முழுமையாக நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட கோழி வணிகர்கள் கூட்டமைப்பு முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றியது. அந்த தீர்மானத்தில், `கோழிகள் விற்பனைக்கு வருவதற்கு 15 மணி நேரத்திற்கு முன்பாகவே, அவற்றுக்கு தீவனம் வழங்குவதை பண்ணையாளர்கள் மற்றும் வணிகர்கள் கைவிட வேண்டும். விற்பனைக்கு மிக அருகில் இருக்கும் நேரத்தில் கோழிகளுக்குத் தீவனம் வழங்குவதால், அவற்றின் உடல் எடை செயற்கையாக அதிகமாகக் காட்டப்படுகிறது.

இறுதி நேரத்தில் தீவனம் வழங்குவது வெறும் எடை ஏமாற்றுதல் மட்டுமல்லாமல், சுற்றுச்சூழல் பாதிப்புகளையும் ஏற்படுத்துகிறது. அதுமட்டுமின்றி, இதனால் பொதுமக்களுக்கு தேவையற்ற நோய் தொற்று பரவும் அபாயமும் ஏற்படுகிறது. எனவே, கோழிகள் விற்பனைக்கு வருவதற்கு 15 மணி நேரத்திற்கு முன்பே தீவனம் வழங்குவதை நிறுத்த வேண்டும் என்பதை ஒரு கட்டாய வழிகாட்டு நெறிமுறையாக அரசு அறிவிக்க வேண்டும்' என்றும், இதனைச் சட்டமாக்க வேண்டும் என்றும் வணிகர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இக்கோரிக்கையை வலியுறுத்தி, அரசு உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், தமிழ்நாடு முழுவதும் ஒரு வார காலத்திற்கு கோழி இறைச்சி விற்பனையை முழுமையாக நிறுத்தி போராட்டத்தில் ஈடுபடப் போவதாக வணிகர்கள் கூட்டமைப்பு எச்சரித்தது. அதைத் தொடர்ந்து, கறிக்கோழிக்கு தீவன கட்டுப்பாடு நெறிமுறைகளை பின்பற்றாததைக் கண்டித்து, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வரும் 31ம் தேதி முதல் கோழி இறைச்சி விற்பனையை நிறுத்த முடிவு செய்துள்ளதாக தமிழ்நாடு கோழி வணிகர்கள் கூட்டமைப்பு அறிவித்தது. இந்த நிலையில், கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு மற்றும் வணிகர்கள் இடையே உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, கறிக்கோழி விற்பனை கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டிருக்கிறது. வழக்கம்போல் நாளை சிக்கன் விற்பனை நடைபெறும் எனவும் தமிழ்நாடு கோழி வணிகர்களின் கூட்டமைப்பு அறிவித்திருக்கிறது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)