"சீக்கிரத்தில் அண்ணன் ஸ்டாலின் முதல்வராக வந்து விடுவார்" - என்ன சொல்கிறார் அனிதா ராதாகிருஷ்ணன்?
திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட குருகாட்டூர் பகுதியில் சமுதாய நலக் கூடம் கட்டிட திறப்பு விழா நடைபெற்றது. இதில் முன்னாள் தி.மு.க அமைச்சரும், திருச்செந்தூர் தொகுதியின் எம்.எல்.ஏவுமான அனிதா ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு சமுதாய நலக்கூடத்தைத் திறந்து வைத்தார்.
அப்போது பேசிய அவர், “இந்தக் குருகாட்டூர் பகுதியில் எனக்கு மட்டும் 430-க்கும் மேற்பட்ட வாக்குகள் விழுந்துள்ளது. பா.ஜ.கவுக்கு 148 ஓட்டு விழுந்துள்ளது. இந்தத் தொகுதியில் த.வெ.க சார்பில் நின்ற யாரென்றே தெரியாத நபருக்கு 400-க்கும் மேற்பட்ட வாக்குகள் விழுந்துள்ளது. முந்தைய தி.மு.க ஆட்சியில் முதல்வர் ஸ்டாலின் தமிழக மக்களுக்காக என்னவெல்லாம் செய்துள்ளார்.

உங்களுக்காக அனைத்தும் செய்த முதல்வரை மறந்து விட்டீர்கள். என்னை மறந்து விட்டீர்கள். எங்களது கனிமொழி எம்பி-யை மறந்து விட்டீர்கள். என்னைவிட அவருக்குக் குறைவாகத்தான் போட்டு உள்ளீர்கள். ஆனால், என்ன காரணத்திற்காக அவருக்கு இவ்வளவு வாக்குகள் போட்டீர்கள்? பா.ஜ.கவிற்கு ஓட்டுப் போட்டது கூட பரவாயில்லை. ஜோசப் விஜய் என்பவர் முழங்கால் போட்டு நடந்ததற்காக அவருக்காக வாக்கு போட்டீர்களா? நாங்கள் உங்களை ஏமாற்றி விட்டோமா?
இதை நேரில் கேட்பதற்காகவே நான் இங்கு வந்தேன். மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் ஏழை மக்களுக்கு வாரி கொடுத்தார். தனது சொந்த பணத்தைக் கொடுத்தார். ஆனால், தற்போதுள்ள முதல்வர் விஜய் மக்களுக்காக 100 பைசா அதாவது ஒரு ரூபாயாவது தனது சொந்த செலவைச் செய்திருப்பாரா? திருமணத்திற்கு ஒரு பவுன் நகையும், பட்டு சேலையும் கொடுப்பேன் என்று கூறினாரே, அதை நிறைவேற்ற முடிந்ததா?

விசிலுக்கு வாக்கு செலுத்தியதால் தற்போது நீங்கள் அனைவரும் இரவில் முழித்து கொண்டே இருக்கிறீர்கள். ஏன் இந்த விசிலுக்கு வாக்கு போட்டோம் என்று மக்கள் கேட்கிறார்கள். சீக்கிரத்தில் அண்ணன் ஸ்டாலின் முதல்வராக வந்து விடுவார். போன முறைதான் எங்களை ஏமாற்றினீர்கள். இனி வரும் தேர்தலில் உங்களது ஆதரவைத் தர வேண்டும். எங்களை இந்தப் பாடு படுத்தினால் என்ன அர்த்தம்? இனிவரும் காலங்களிலாவது எங்களைக் காப்பாற்றுங்கள்” என்று பேசினார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)