பாஜக டு தவெக அமைச்சர்: 'ஜோசப் விஜய்' அமைச்சரவையில் சி.டி.ஆர். நிர்மல் குமார் இடம்பிடித்தது எப்படி?

May 10, 2026 - 11:01
0
பாஜக டு தவெக அமைச்சர்: 'ஜோசப் விஜய்' அமைச்சரவையில் சி.டி.ஆர். நிர்மல் குமார் இடம்பிடித்தது எப்படி?

'ஜோசப் விஜய் எனும் நான்...' எனத் தமிழகத்தின் 18 வது முதல்வராகப் பதவியேற்றிருக்கிறார் விஜய். அவரோடு சேர்ந்து 9 அமைச்சர்களுக்கும் ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைத்திருக்கிறார்.

விஜய் முதலில் டிக் அடித்திருக்கும் 9 அமைச்சர்களில் சி.டி.ஆர் நிர்மல் குமாரும் ஒருவர். அவர் எப்படி அமைச்சரவையில் இடம்பிடித்தார்?

சி.டி.ஆர் நிர்மல் குமார் பாஜகவின் ஐ.டி.விங்கில் முக்கிய பொறுப்பில் இருந்தார். அந்தச் சமயத்தில் சில பொய்த் தகவல்களைப் பரப்பி சர்ச்சைகளிலும் சி.டி.ஆர் சிக்கியிருக்கிறார்.

பாஜகவிலிருந்து வெளியேறியவர் அதிமுகவில் இணைந்தார். ஆனால், அங்கேயும் அவரால் நீண்ட காலம் நீடிக்க முடியவில்லை. கட்சி ஆரம்பித்து சரியாக ஒரு வருடம் கழித்து ஆதவ் அர்ஜுனா தவெகவில் இணைந்தார். அப்போதுதான் நிர்மல் குமாரும் தவெகவில் இணைந்தார். அப்போதே அவருக்கு ஐ.டி.விங்கின் துணைப் பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டது.

பனையூரில் சி.டி.ஆர் நிர்மல் குமார்
பனையூரில் சி.டி.ஆர் நிர்மல் குமார்

விஜய்யின் கூட்டங்களுக்கு காவல்துறையின் அனுமதி வாங்குவது, எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு பத்திரிகையாளர் சந்திப்புகளில் பதில் சொல்வது போன்ற முக்கியமான பணிகள் நிர்மல் குமாருக்கு வழங்கப்பட்டிருந்தன.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் விஜய் எந்தக் கருத்தையும் பேசாமல் இருந்தது விமர்சனத்துக்குள்ளானது. கட்சி சார்பில் அந்த விவகாரத்தில் ஒரு நிலையை அறிவிக்க வேண்டும் எனும் போது சி.டி.ஆரை அனுப்பிதான் விஜய் பத்திரிகையாளர்களைச் சந்திக்க வைத்தார்.

லாவகமாகப் பதிலளித்து சமாளிக்கும் திறன் படைத்தவர் என்பதால் விஜய்யின் நம்பிக்கையைப் பெற்றார். ஆட்சியமைக்க முடியுமா எனச் சந்தேகம் நிலவிய நிலையில், கம்யூனிஸ்டுகளிடம் பேசி ஆதரவைப் பெறவும் தவெக முகாம் நிர்மல் குமாரையே நேரில் அனுப்பி வைத்தது.

மதுரையைச் சேர்ந்தவர் என்பதால் முதலில் உசிலம்பட்டி தொகுதியில் போட்டியிடலாம் என முடிவெடுத்தார். மாவட்டச் செயலாளர் உசிலம்பட்டியில் நிற்க ஆசைப்படவே நிர்மல் திருப்பரங்குன்றத்துக்கு நகர்ந்தார்.

நிர்மல் குமார் - விஜய்
நிர்மல் குமார் - விஜய்

அங்கே கட்சிக்குப் பெரிய கட்டமைப்பே கிடையாது. திருப்பரங்குன்றம் விவகாரம் பற்றி எரிந்தபோது அங்கே தவெகவுக்கு மாவட்டச் செயலாளரே கிடையாது. அப்படியிருக்க, திருப்பரங்குன்றம் தூணை வைத்து திமுகவும் அதிமுக + பாஜகவும் திட்டமிட்டு நாடகம் நடத்துகிறார்கள் எனப் பிரசாரம் செய்தார்.

விஜய் கட்சி சார்ந்து தனிப்பட்ட முறையில் பேசும் 6-7 நபர்களில் நிர்மல்குமாரும் ஒருவர். வென்றால் அமைச்சர் பதவி உறுதி என்பது ஏற்கனவே தெரிந்த விவகாரமே.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User