அதிமுக: ``எடப்பாடி அச்சப்பட வேண்டாம், தைரியமாக இருங்கள்!" - சொல்கிறார் சி.வி.சண்முகம்

May 19, 2026 - 15:30
0
அதிமுக: ``எடப்பாடி அச்சப்பட வேண்டாம், தைரியமாக இருங்கள்!" - சொல்கிறார் சி.வி.சண்முகம்

அ.தி.மு.கவின் தொடர் தேர்தல் தோல்விகள் மற்றும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தலைமைத்துவ முறை குறித்து, கட்சியின் முக்கிய நிர்வாகிகளிடையே கருத்துவேறுபாடு நிலவுகிறது. தவெக ஆதரவுப்போக்கு தொடர்பாக எடப்பாடி பழனிசாமிக்கும் சி.வி. சண்முகம் தரப்புக்கும் இடையே கடுமையான வார்த்தைப்போர் நடந்துவருகிறது.

அதன் தொடராக சி.வி.சண்முகம் இன்று அவரின் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ``சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி தலைமையிலான அதிமுக படுதோல்வியை சந்தித்திருக்கிறது. இது 2019-ம் ஆண்டிலிருந்து தோல்வி தொடர்கிறது. அதனால் வாக்கு வங்கி சரிவை நோக்கிச் சென்றுக்கொண்டிருக்கிறது.

எடப்பாடி பழனிசாமி

இது இந்த இயக்கத்துக்கு பெரும் அச்சுறுத்தல், இந்த தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்து, இயக்கத்தை புத்துயிரூட்ட வேண்டும் என நாங்கள் எடப்பாடியிடம் கோரிக்கை வைத்தோம். 2024-ல் நாடாளுமன்றத் தேர்தல் தோல்வியின்போதே இது குறித்து ஆலோசித்தோம். அப்போதே இந்த கட்சியிலிருந்து பிரிந்துசென்றவர்களை இணைக்க வேண்டும் எனக் கூறியபோது அவர் புறக்கணித்தார். தோல்விக்கான காரணத்தையும் மாவட்டச் செயலாளர் கூட்டத்திலும் ஆய்வு செய்யவில்லை. ஒருவேளை அப்போதே இது நடந்திருந்தால் கட்சியை காப்பாற்றியிருக்கலாம்.

கட்சியிலிருந்து பிரிந்தவர்களை இணைக்கவும், வலுவான கூட்டணியை அமைக்கவும் தவறிவிட்டார். தவெக தேர்தலுக்கு முன்பே நம்முடன் கூட்டணி வைக்க பேசினார்கள். அவர்களை தவிர்த்தார். என்.டி.ஏ கூட்டணியையும் இணைக்க ஆரம்பத்தில் மறுத்தார். இப்படி யாரையும் அரவணைக்காமல் தான் மட்டுமே என கருதினார்.

ஓ.பி.எஸ் மன்னிப்புக் கேட்டு, உறுப்பினராகக் கூட சேர்த்துக்கொள்ளுங்கள் எனக் கேட்டார். அதைக்கூட எடப்பாடி பழனிசாமி மறுத்தார். இன்று ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில், 'கட்சிக்கு துரோகமிழைத்தவர்கள் திருந்தினால் அவர்களை தாயுள்ளத்துடன் அரவணைக்கத் தெரியும். அவர்களின் வழிகாட்டுதலின்படியே செயலாற்றி வருகிறோம்.' எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

சி.வி.சண்முகம் அணி
சி.வி.சண்முகம் அணி

அவரின் பதவியைத் தக்கவைக்க இப்படி பேசியிருக்கிறார். இதை முன்பே கூறியிருந்தால் தமிழ்நாட்டின் முதல்வராகவோ, அல்லது அவர் தலைமையிலான கூட்டணி அரசோ அமைந்திருக்கும். இப்போது அவர் தன்னை நல்லவர்போல காண்பித்துக்கொள்கிறார். நாங்கள் யாரைப்பற்றியும் குறைகூறவில்லை. யாரையும் தனிப்பட்ட முறையில் விமர்சிக்கமாட்டோம்.

ஆனால் எங்களைப்பற்றி துரோகி எனக் கூறுகிறார். எங்கள் குடும்பத்தைப்பற்றி பேசுகிறார் என்றால், இதுதான் தலைமைத்துவமா? எங்களுக்கும் பேசத் தெரியும். ஆனால் பேசமாட்டோம். எனவே, ஒருங்கிணைந்த அனைத்துத் தலைவர்களையும் இணைந்த அதிமுக கட்டமைக்கப்படவேண்டும்.

பொதுக்குழுவை கூட்டுங்கள். அதில் எடுக்கப்படும் முடிவை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். இவர் மீது தவறு இல்லாததைப் போன்ற பிம்பத்தை உருவாக்க முயற்சிக்கிறார். ஒருபக்கம் பேசித் தீர்க்கலாம் எனக் கூறிவிட்டு, இன்னொருபக்கம் கட்சியின் நிர்வாகிகளை நீக்குகிறார். இந்த நடவடிக்கை சட்டத்துக்குப்புறம்பானது, செல்லாது. இப்போது யாரெல்லாம் பொறுப்பில் இருக்கிறார்களோ அவர்கள்தான் பிரமாணப் பத்திரிகையில் கையெழுத்துப்போடவேண்டும்.

தேர்தல் ஆணையத்திலும் நாங்கள்தான் கையெழுத்திடவேண்டும். இவர் எப்படி தேர்வு செய்யப்பட்டார்... அம்மா இறந்தபோது, யார் யாரெல்லாம் நிர்வாகத்தில் இருந்தார்களோ, அவர்கள்தான் எடப்பாடியை நியமித்தார்கள். இப்போதும் அதுதான் நடக்கிறது. எடப்பாடி அச்சப்பட வேண்டாம். தைரியமாக இருங்கள். உங்கள் பதவி உங்களிடம்தாம் இருக்கும்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User