`தமிழகத்தில் விவசாயக் கடன் அதிகம்; தள்ளுபடி செய்யும் திட்டம் இல்லை!’ - மத்திய அமைச்சர் சொல்வதென்ன ?

Jul 27, 2026 - 18:32
0
`தமிழகத்தில் விவசாயக் கடன் அதிகம்; தள்ளுபடி செய்யும் திட்டம் இல்லை!’ - மத்திய அமைச்சர் சொல்வதென்ன ?

டெல்லியில் நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. ஜூலை 20-ம் தேதி தொடங்கிய இந்தக் கூட்டம் ஆகஸ்ட்13-ம் தேதி முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அந்தக் கூட்டத்தில், `விவசாயத் துறையில் நிலவும் நெருக்கடி மற்றும் கடன் சுமை அதிகரிப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பெறப்பட்ட விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்யுமாறு விவசாயிகள் விடுத்துள்ள கோரிக்கையை அரசு கவனத்தில் கொண்டுள்ளதா?

அப்படி என்றால் அதன் விவரங்கள் என்ன? தமிழ்நாடு உட்பட பல மாநில அரசுகள் கூட்டுறவுப் பயிர்க் கடன்களைத் தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ள நிலையில், பொதுத்துறை வங்கிகளில் நிலுவையில் உள்ள பயிர்க் கடன்களுக்கு அத்தகைய நிவாரணம் எதுவும் வழங்கப்படவில்லை என்பது உண்மையா? உண்மை என்றால் அதன் விவரங்கள் என்ன?

ரவிக்குமார் எம்.பி

31 மார்ச் 2026 நிலவரப்படி, தேசியமயமாக்கப்பட்ட, பொதுத்துறை வங்கிகளில் விவசாயிகளிடம் நிலுவையில் உள்ள மொத்த விவசாயக் கடன்களின் விவரங்களை மாநில வாரியாகத் தருக. அதேபோல சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு அத்தகைய கடன்களை ஒரே தவணையில் தள்ளுபடி செய்வது அல்லது மறுசீரமைப்பு செய்வது குறித்து பரிசீலிக்க அரசு உத்தேசித்துள்ளதா?’ என இன்று கேள்விகளை எழுப்பினார் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார்.

அதற்கு பதிலளித்த மத்திய நிதி அமைச்சகத்தின் இணை அமைச்சர் பங்கஜ் சௌத்ரி, ``கடன் நெருக்கடியில் உள்ள, கடன் பெற்றவர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் இந்திய ரிசர்வ் வங்கி 'அழுத்தத்திற்குள்ளான சொத்துக்களைத் தீர்வு காண்பதற்கான முதன்மை வழிகாட்டுதல்கள் - 2025'-ஐ வெளியிட்டுள்ளது.

இது கடன் வழங்குநர்கள் தங்கள் வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட கொள்கைகள் மற்றும் ஒழுங்குமுறை வழிகாட்டுதல்களின் அடிப்படையில், நெருக்கடியில் உள்ள கடன் பெற்றவர்களின் கடன்களை நிதி ரீதியாக மறுசீரமைப்பு செய்வதற்கான அதிகாரத்தை அவர்களுக்கு வழங்குகிறது.

தமிழ்நாட்டில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் நிலுவையில் உள்ள பயிர்க் கடன்களுக்கு, கடந்த மூன்று நிதியாண்டுகளில் எந்தவிதமான கடன் தள்ளுபடியும் வழங்கப்படவில்லை என்று தமிழ்நாடு மாநில அளவிலான வங்கியாளர்கள் குழு (SLBC) தெரிவித்துள்ளது.

நபார்டின் (NABARD) 'ENSURE' இணையதளத்தில் வங்கிகள் அளித்துள்ள தகவல்களின்படி, பொதுத்துறை வங்கிகளில் நிலுவையில் உள்ள விவசாயக் கடன்களின் மாநில வாரியான விவரங்கள் இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளன. சிறு மற்றும் குறு விவசாயிகளின் கடன்களை ஒரே தவணையில் தள்ளுபடி செய்வதற்கான எந்தவொரு முன்மொழிவும் தற்போது மத்திய அரசின் பரிசீலனையில் இல்லை” என்று பதிலளித்தார்.

நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

அதையடுத்து எம்.பி ரவிக்குமார் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், `பொதுத்துறை வங்கிகளில் கார்ப்பரேட் முதலாளிகள் பெற்ற கடன்கள் 12 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் ஒன்றிய அரசால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஆனால், விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்ய மத்திய அரசு மறுக்கிறது.

அமைச்சர் கொடுத்துள்ள பதிலில் உள்ள அட்டவணையில் பார்க்கும்போது தமிழ்நாட்டில் விவசாயிகள் பெற்ற கடன்தான் இந்தியாவிலேயே அதிகமாக உள்ளது. 31.03.2026 நிலவரப்படி தமிழ்நாட்டு விவசாயிகள் பெற்றுள்ள கடன் நிலுவைத் தொகை ரூ.3,44,996.64 கோடி (ரூபாய் மூன்று லட்சத்து நாற்பத்து நான்காயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஆறு கோடி)’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User