பெயர் மாறிய 'தாயுமானவர்' திட்டம்? 'நான் முதல்வன்', 'விடியல்' வரிசையில் தவெக அரசின் அடுத்த மாற்றம்?

Jul 21, 2026 - 18:02
0
பெயர் மாறிய 'தாயுமானவர்' திட்டம்? 'நான் முதல்வன்', 'விடியல்' வரிசையில் தவெக அரசின் அடுத்த மாற்றம்?

திமுக ஆட்சியில் அப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்ட 'நான் முதல்வன்' திட்டத்தை தவெக அரசு 'திறன் தமிழ்நாடு' எனப் பெயர் மாற்றம் செய்தது நினைவிருக்கலாம். அதேபோல மகளிர் இலவசமாகப் பயணம் செய்ய வழி வகுத்த மகளிர் விடியல் பயணம் என்ற திட்டத்திலிருந்து 'விடியல்' என்கிற வார்த்தை தூக்கப்பட்டு விட்டது.

அந்த வரிசையில் தற்போது நியாய விலைக் கடைகள் மூலம் முதியவர்களுக்கு இல்லம் தேடிச் சென்று பொருள்கள் வழங்கி வந்த 'தாயுமானவர்' திட்டத்தின் பெயரையும் மாற்றி உத்தரவிட்டிருக்கிறார்கள்.

இது தொடர்பாக கூட்டுறவுத் துறையிலிருந்து நியாயவிலைக் கடை பணியாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை ஆகஸ்ட் மாதத்திலிருந்து 'தாயுமானவர்' திட்டம் 'வீடு தேடி பொருட்கள் வழங்கும் திட்டம்' எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

ரேஷன் கடை
ரேஷன் கடை

நியாயவிலைக் கடைப் பணியாளர்கள் சிலரிடம் பேசிய போது,

''இப்போதைய முதலமைச்சர் தேர்தலுக்கு முன் புதுச்சேரியில் பிரசாரத்தில் பேசியபோது அங்குள்ள ரேஷன் சிஸ்டம் குறித்துப் பேசினார். அதேபோல முதலமைச்சராகப் பதவியேற்ற அந்த மேடையிலும் பல துறைகளிலும் சீர்திருத்தங்களை மேற்கோள்ளவிருப்பதாகப் பேசியபோது ரேஷன் குறித்தும் குறிப்பிட்டுப் பேசினார். ஜெயிச்ச பிறகு முதன் முதலா தொகுதிக்கு வந்தப்ப கூட ஒரு ரேஷன் கடைக்கு விசிட் வந்தார்.

இதையெல்லாம் பாக்குறப்ப எழை மக்களுடன் தொடர்புடைய பொது விநியோகத் திட்டத்தின் மீது அவர் ரொம்ப கவனம் செலுத்துவார்னு தோணுது.

இதுல‌ உள்ளபடியே எங்களுக்கு மகிழ்ச்சிதான். அதேநேரம் பொதுவிநியோகத் திட்டத்தைச் செயல்படுத்தறதுல முதல் படியில நிற்குற நியாயவிலைக் கடைப் பணியாளர்களுக்குக் காலங்காலமா இருக்கிற பிரச்னைகள்லயும் முதலமைச்சர் கவனம் செலுத்தணும்.

TVK Vijay
TVK Vijay

இப்ப இருக்கிற ரேஷன் பணியாளர்கள் எல்லாருமே ஒரே வேலையைத்தான் செய்றாங்க. ஆனா உணவு வழங்கல் துறை கட்டுப்பாட்டில் வருகிற ரேஷன் கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் கூட்டுறவுத் துறை நடத்தும் ரேஷன் கடைகளில் பணிபுரியும் ரேஷன் ஊழியர்களூக்கும் சம்பளத்தில் பெரிய வித்தியாசம் இருக்கு.

அதாவது கூட்டுறவுத் துறை ரேஷன் ஊழியர்களுக்கு சம்பளம் மிகவும் குறைவு. பெரும்பாலான நியாயவிலைக் கடைகள் வாடகைக் கட்டிடங்களில் இயங்கி வரும் சூழலில் விற்பனையாளர்கள் இயற்கை உபாதைகளைகளுக்கு ரொம்பவே சிரமப்படுகின்றனர்.

எனவே கழிவறை வசதியுடன் சொந்தக் கட்டிடத்தில் நியாயவிலைக் கடை இயங்க நடவடிக்கை தேவை. ரேஷன் சீர்திருத்தம் செய்ய முன்வரும்போது எங்களுடைய இந்தக் கோரிக்கைகளையும் முதலவர் கனிவுடன் பரிசீலிக்கணும்'' என்கின்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User