'வரலாறு படைத்த தீரஜ் பொம்மதேவரா' - வில்வித்தை உலகக்கோப்பையில் தங்கம் வென்று அசத்தல்!
2026 வில்வித்தை உலகக்கோப்பை இறுதிப்போட்டியானது, மெக்சிகோவின் சால்டிலோவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் ஆண்கள் தனிநபர் 'ரிகர்வ்' பிரிவில் இந்திய வில்வித்தை வீரர் தீரஜ் பொம்மதேவரா வெற்றி பெற்றார்.
'ஷூட்-ஆஃப்' மூலம் தீர்மானிக்கப்பட்ட மிகவும் பரபரப்பான தங்கப் பதக்கப் போட்டியில், 25 வயது நிரம்பிய தீரஜ் பொம்மதேவரா, ஜப்பானின் நகானிஷி ஜுன்யாவை 6-5 என்ற கணக்கில் வீழ்த்தி இந்த வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

ஆண்கள் தனிநபர் மற்றும் பெண்கள் தனிநபர் ஆகியோருக்கான இப்போட்டியில் 'ரிகர்வ்' மற்றும் 'காம்பவுண்ட்' பிரிவுகளில் தலா எட்டு வில்வித்தை வீரர்கள் பங்கேற்றனர். இந்தச் சீசனின் இறுதிப்போட்டியில் இந்தியாவின் சார்பாக தீரஜ் பொம்மதேவரா பங்கேற்றார்.
நடைபெற்ற ஐந்து சுற்றுகளில் தீரஜ் மற்றும் நகானிஷி ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவியது. முதல் சுற்றில் இருவரும் 28-28 எனச் சமநிலையில் இருந்தனர். இரண்டாவது சுற்றில் ஜப்பானிய வீரர் 29-28 என்ற கணக்கில் முன்னிலை பெற்றார்.
பின் தீரஜ் மூன்றாவது சுற்றை 29-28 என்ற கணக்கில் வென்றார். ஆனால், நான்காவது சுற்றில் மீண்டும் நகானிஷி 30-28 என்ற கணக்கில் வெற்றி பெற்று முன்னிலை பெற்றார்.
தொடர்ந்து, ஆட்டம் 'ஷூட்-ஆஃப்' நிலையை எட்டியது. ஐந்தாவது சுற்றில் வென்றே ஆக வேண்டும் என்ற சூழல் தீரஜ்க்கு நிலவியது. மிக கவனமாக ஆடி ஆட்டத்தை 5-5 எனச் சமன் செய்தார். அதன் பிறகு இரு வீரர்களும் மும்முரமாக அடுத்தடுத்து அம்புகளை எய்தனர். இதில் நகானிஷி 9 புள்ளிகளைப் பெற, தீரஜ் நேர்த்தியாகச் செயல்பட்டு 10 புள்ளிகளைப் பெற்றார்.
துருக்கியைச் சேர்ந்த ஒலிம்பிக் பதக்கம் வென்ற 'பெர்கிம் டுமரை' (Berkim Tümer) எதிர்த்து தனது பயணத்தைத் தொடங்கிய தீரஜ் 7-1 என்ற கணக்கில் காலிறுதிப் போட்டியில் அபார வெற்றி பெற்றார். இப்போட்டியில் அவர் ஒரே ஒரு 'செட் பாயிண்ட்' (Set point) மட்டுமே விட்டுக் கொடுத்தார்.

பின் இரண்டு முறை ஒலிம்பிக் வெள்ளிப் பதக்கம் வென்ற பிரான்சின் ஜீன்-சார்லஸ் வல்லாடோன்ட்டை (Jean Charles Valladont) 7-1 என்ற கணக்கில் வீழ்த்தி, அரையிறுதிப் போட்டியிலும் வெற்றி பெற்று தங்கப் பதக்கப் போட்டிக்கு முன்னேறினார்.
நான்காம் நிலை வீரரான நகானிஷி, காலிறுதிப் போட்டியில் இத்தாலியின் மௌரோ நெஸ்போலியை 6-5 என்ற கணக்கில் வீழ்த்தியிருந்தார். பின் அரையிறுதிப் போட்டியில், முதல் நிலை வீரரும் ஒலிம்பிக் சாம்பியனுமான துருக்கியின் மெட்டே கசோஸை 6-0 என்ற கணக்கில் வீழ்த்தி அதிர்ச்சி அளித்தார்.
2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற உலகக் கோப்பை இறுதிப் போட்டிகளில் பதக்கம் ஏதுமின்றித் திரும்பிய தீரஜ் பொம்மதேவரா, பின்னர் அந்தால்யாவில் நடைபெற்ற மூன்றாவது உலகக் கோப்பைப் போட்டியில் ஆடவர் தனிநபர் ரிகர்வ் பட்டத்தை வென்றதன் மூலம் இந்த சீசனின் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றார். அங்கு அவர் அங்கிதா பகத்துடன் இணைந்து கலப்பு அணிப் பிரிவிலும் தங்கப் பதக்கம் வென்றார்.
இந்த சீசனில் புவெப்லா, ஷாங்காய், அந்தால்யா மற்றும் மாட்ரிட் ஆகிய நான்கு வில்வித்தை உலகக் கோப்பைப் போட்டிகளிலும் இந்தியா ஏழு பதக்கங்களை வென்றுள்ளது. இதில் நான்கு தங்கப் பதக்கங்களும் அடங்கும். இருப்பினும், அந்தால்யாவில் பெற்ற வெற்றியின் மூலம் தீரஜ் பொம்மதேவரா நாட்டின் ஒரே தனிநபர் தங்கப் பதக்கத்தை வென்றவர் என்ற பெயரைப் பெற்றார்.

கடந்த ஆண்டு நடந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், மகளிர் 'காம்பவுண்ட்' பிரிவில் ஒரே வெள்ளிப் பதக்கம் ஜோதி சுரேகா வென்னம் மூலமாக இந்தியாவிற்குக் கிடைத்தது.
2007-ல் துபாயில் நடைபெற்ற போட்டியில் பெண்கள் 'ரிகர்வ்' பிரிவில் பட்டம் வென்ற 'டோலா பானர்ஜி'-க்குப் பிறகு, தங்கப் பதக்கத்தை வெல்லும் இரண்டாவது இந்திய வில்வித்தை வீரர் தீரஜ் பொம்மதேவரா என்பது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)