ஆவின் விற்பனையைக் குறைத்த நிர்வாகம்; தட்டுப்பாடு ஏற்படும் நிலையா? பாதிக்கப்படும் பால் முகவர்கள்
"நிதி இழப்பைக் காரணம் காட்டி மீண்டும் 10 சதவிகித பால் விநியோகத்தைக் குறைத்த ஆவின் நிர்வாகத்தின் உத்தரவால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கும் நிலையும், பொதுமக்களுக்கு பால் தட்டுப்பாடு ஏற்படும் சூழலும் ஏற்பட்டுள்ளது" எனப் பால் முகவர்கள் தெரிவிக்கிறார்கள்.

இதுகுறித்து தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க நிறுவன தலைவர் சு.ஆ.பொன்னுசாமி பேசும்போது, "தமிழ்நாடு அரசு ஆவினுக்கான பால் கொள்முதல் விலையைக் கடந்த வாரம் உயர்த்திய நிலையில், அதற்கேற்ப விற்பனை விலையை உயர்த்தாமல் கடந்த திமுக ஆட்சியில் செய்த அதே தவறைச் செய்வது ஆவினுக்கு பன்மடங்கு நிதியிழப்பை ஏற்படுத்தும்.
காரணம், பால் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டும் ஆவினுக்கான பால் வரத்து அதிகரிக்காததால் அண்டை மாநிலக் கூட்டுறவு பால் நிறுவனமான நந்தினியிடம் கூடுதல் விலைக்கு பால் கொள்முதல் செய்தும், வடமாநிலங்களிலிருந்து வெண்ணெய், பால் பவுடர் கொள்முதல் செய்தும் பால் பாக்கெட் உற்பத்தி செய்யும் நிலை தொடர்வதால், ஆவினில் ஏற்படும் கடும் நிதியிழப்பைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு முழுவதும் ஆவின் பால் விற்பனையைக் குறைக்க நிர்வாக இயக்குநரும், பொது மேலாளர்களும் வாய்மொழி உத்தரவுகளைப் பிறப்பித்து செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்கி, அரசுக்கு அவப்பெயரை உருவாக்கி வருகின்றனர்.
குறிப்பாக, குமரி மாவட்டத்தில் ஆவின் நிறை கொழுப்பு பால் உற்பத்தியும், விற்பனையும் கடந்த சில வாரங்களுக்கு முன் முற்றிலுமாக நிறுத்தப்பட்டதோடு, ஈரோடு, சேலம், மதுரை, திருச்சி, தஞ்சை, கோவை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் ஆவின் பால் விநியோகம் பலமடங்கு குறைக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்குத் தேவையான பாலினைத் தொடர்ந்து விநியோகம் செய்ய முடியாமல் திணறி வரும் பால் முகவர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து, பால் விநியோகத்திற்கான வாகன எரிபொருள், பணியாளர்கள் சம்பளம், கடை வாடகை, மின்சார கட்டணம் உள்ளிட்ட செலவினங்களைக் கட்டுப்படுத்த முடியாமல் விழி பிதுங்கி நிற்கின்றனர்.
மேலும், சென்னை பெருநகரில் தினசரி ஆவின் பால் விற்பனை சுமார் 16.5 லட்சம் லிட்டருக்கு மேல் இருந்த நிலையில், கடந்த 6 மாதங்களில் மட்டும் 25 சதவிகிதத்திற்கும் மேல் பால் விநியோகம் குறைக்கப்பட்ட சூழலில் தற்போது மேலும் 10 சதவிகிதம் வரை விநியோகத்தைக் குறைக்க மீண்டும் வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 15.09.2026 முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஆட்சியாளர்கள் ஆவினை வாக்கு வங்கி அரசியலுக்கான ஆயுதமாகப் பயன்படுத்தி வந்த நிலையில் ஜோசப் விஜய்யாவது மாற்றத்தைக் கொண்டு வந்து ஆவினை மீட்டெடுப்பார் எனப் பல்வேறு ஆலோசனைகளை பால்வளத்துறை அமைச்சர் விஜயலட்சுமியைச் சந்தித்து அதற்கான தரவுகளை அளித்து பேசியும், முதலமைச்சருக்கு மின்னஞ்சல் அனுப்பியும் எந்த முயற்சியும் இதுவரை முன்னெடுக்கவில்லை.

4 ஆண்டுகளுக்குப் பிறகு ஆவினுக்கான பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ. 6 வரை உயர்த்தப்பட்ட நிலையில் பல்லாயிரம் கோடி ருபாய் நிதி இழப்பு ஆவினை முடக்கி விடாது. அதேநரம், மாநில அரசின் நிதி பங்களிப்போடு செயல்படும் கூட்டுறவு நிறுவனம் என்பதால் அந்த இழப்பு பொதுமக்கள் தலையில் வேறு வகையில் திணிக்கப்படும்.
ஆனால், தனியார் பால் நிறுவனங்கள் பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கினாலும், அதற்கேற்ப விற்பனை விலையை உயர்த்தும் வாய்ப்பு உள்ளது.
ஆவின் மற்றும் தனியார் பாலுக்குமான விற்பனை விலை லிட்டருக்கு ரூ. 19 முதல் 24 வரை வித்தியாசம் உள்ள நிலையில் தனியார் நிறுவனங்களின் பால் விற்பனை விலை மேலும் உயர்த்தப்படும்பட்சத்தில், விலை குறைவாக உள்ள ஆவினை நோக்கி பொதுமக்கள் திரும்பும் நிலை ஏற்படும். ஏற்கனவே கடுமையான தட்டுப்பாடு நிலவி வரும் சூழலில் கூடுதல் தட்டுப்பாடு ஏற்பட்டு புதிய அரசுக்கு அவப்பெயரே பரிசாகக் கிடைக்கும்.
எனவே, தமிழ்நாடு அரசின் கூட்டுறவு பால் நிறுவனமான ஆவின் காப்பற்றப்பட வேண்டும், பொதுமக்களுக்குத் தங்குதடையற்ற பால் விநியோகம் தொடர வேண்டும் என்றால் பால் கொள்முதல் விலை உயர்விற்கேற்ற விற்பனை விலையை உடனடியாக மாற்றியமைக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
மக்களின் எதிர்ப்பைச் சம்பாதிக்க வேண்டியிருக்கும் என்பதை விட எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பைச் சந்திக்க வேண்டியதிருக்கும் என்பதால் ஆவின் பால் விற்பனை விலையை உயர்த்தாமல் காலம் தாழ்த்துவது என்பது பொதுமக்கள் மத்தியில் தவெக அரசுக்கு மேலும், மேலும் அவப்பெயரையே ஏற்படுத்தும்" என்று தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)