``காசு வாங்கிக்கொண்டு வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுகிறார்" - விஜய் சேதுபதியைச் சாடும் கனிமொழி சந்தோஷ்

Sep 16, 2026 - 15:30
0
``காசு வாங்கிக்கொண்டு வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுகிறார்" - விஜய் சேதுபதியைச் சாடும் கனிமொழி சந்தோஷ்

பிக்பாஸ் 10-வது சீசனின் தொகுப்பாளராக இருக்கிறார் நடிகர் விஜய் சேதுபதி. கடந்த வார நிகழ்ச்சியில், பிக்பாஸ் வீட்டுக்குள் நடந்த நிகழ்வுகளை விமர்சிக்கும் வகையில் கருத்துகளை தெரிவித்திருந்தார். ஆனால், அது ஆளும் அரசை விமர்சிப்பதாக இருக்கிறது என்று சமூக ஊடகங்களில் தவெக-வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து, விஜய் டிவி, `தனிப்பட்ட முறையில் யாரையும் குறிப்பிடவில்லை. நிகழ்ச்சியில் நடந்த நிகழ்வு குறித்தே பேசப்பட்டது' என்ற ரீதியில் விளக்கமளித்திருந்தது. இந்த நிலையில், கோவையில் எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ``பிக்பாஸ் ஒரு கேளிக்கை நிகழ்ச்சி மட்டுமே. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'மகாராஜா' படத்தில் அவர் நடிப்பதற்கு முன்னால் அவர் எப்படி இருந்தார் என்பதை கட்டங்களைப் பார்த்து சொல்லியிருந்தேன். ரூ.20 கோடியில் எடுக்கப்பட்ட மகாராஜா திரைப்படத்தில் சம்பளம் வாங்காமல் நடித்தார் விஜய சேதுபதி.

விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி

படம் வெளியானப் பிறகு அதிலிருந்து ஒரு பங்கை ஊதியமாகப் பெற்றுக்கொண்டார். இப்போது இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ஜாக்பாட் அடித்திருக்கிறது. இந்த பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரூ.75 - ரூ80 கோடிவரை சம்பளம் வாங்கும் அவர், அதைவிடக் கூடுதலாக மாற்றுக்கட்சியினர் பணம் கொடுக்கும்போது, அவர் நடிகர் தானே... அவருக்கு வருமானம் வேண்டுமல்லவா? அதனால் கொடுத்ததற்காக அவர் பேசியிருக்கிறார். நிறையவே பேசிவிட்டார். இதற்கு விஜய் டிவி மறுப்பு தெரிவித்திருக்கிறது. ஆனால், விஜய் சேதுபதி வாழைப்பழத்தில் ஊசி ஏற்றும் வேலையை செய்திருக்கிறார்.

யார் வேண்டுமானாலும் அரசியல் விமர்சனம் செய்யலாம். அது அவர்களின் அரசியல், கருத்துரிமை. ஆனால் கொஞ்சம் பார்த்து பேசினால் நன்றாக இருக்கும். ஏனெனில் எங்கள் அரசு வெளிப்படைத் தன்மையுடன் இயங்குகிறது. அவர் சொல்வதால் எதுவும் மாறப்போவதில்லை. அவர் விமர்சிக்கும்போது எங்கள் தலைவரின் பெயரைச் சொல்லி பேசச் சொல்லுங்கள் பார்க்கலாம். அவருக்கு மக்களே பதில் சொல்வார்கள். எனவே, இந்த விமர்சனங்களை ஒரு பெரிய விஷயமாக பார்க்கவில்லை. அவர் தன் பிழைப்புக்காக செய்கிறார். பிக்பாஸ் பார்ப்பவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த இப்படியெல்லாம் செய்கிறார்கள். இத்துடன் நிறுத்தினால் நல்லது" என்றார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User