’தவெக பெரும்பான்மை பெற மற்ற கட்சிகளின் ஆதரவு கிடைக்குமா?’ – செங்கோட்டையன் பதில்

May 05, 2026 - 08:02
0
’தவெக பெரும்பான்மை பெற மற்ற கட்சிகளின் ஆதரவு கிடைக்குமா?’ – செங்கோட்டையன் பதில்

கோவை விமான நிலையத்தில் த.வெ.க. உயர்மட்ட நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் நேற்றிரவு செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர், “தவெக தலைவர் விஜய்க்குக் கிடைத்திருக்கும் வெற்றிக்கு, மக்கள் வைத்திருக்கும் அன்பும், ஆதரவும்தான் காரணம். ஒரு இயக்கம் வளர வேண்டும் என்றால், தியாகம் செய்ய வேண்டும். தியாகத்தின் அடிப்படையில்தான் ஒரு இயக்கம் இருக்கும்.

அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா தியாகத்தால் வளர்த்த இயக்கம், தற்போது தடுமாறிக் கொண்டிருக்கிறது. எங்களைப் பொருத்தவரை தான் என்று ஒருவன் நினைத்தால், தெய்வம் தான் என்று காட்டிவிடும். தெய்வத்தால் ஆகாது என ஒன்றும் இல்லை. தெய்வத்தால் விஜய் ஆட்சி கட்டிலில் அமர இருக்கிறார். இது மக்கள் சக்தியாக மாறியிருக்கிறது.

இந்தியாவில் முதல் முறையாக ஒரு ரூபாய் கூட செலவு செய்யாமல் முதல் தேர்தலில் மாபெரும் வெற்றி என்பது சரித்திர வரலாறாக மாறியிருக்கிறது. மக்கள் வாழ்த்துகிறார்கள். மக்கள் நேசிக்கிறார்கள், உயிர் என நேசிக்கும் மக்களுக்கு என்றும் அவர் உறுதுணையாக இருப்பார்.

விஜயின் எண்ணங்கள், தொலைநோக்கு பார்வை, மனிதநேயம் அனைத்தும் இருப்பதால் ஆட்சி சிறப்பாக இருக்கும்” என்றார்.

த.வெ.க பெரும்பான்மை பெற மற்ற கட்சிகளின் ஆதரவு கிடைக்குமா என்ற கேள்விக்கு, ”நாளை அனைத்தையும் பார்க்கலாம்” எனப் பதிலளித்தார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User