`தமிழக முதல்வர் விஜய்யைப் போல செய்வாரா முதல்வர் ரங்கசாமி?’ - கேட்கிறார் முன்னாள் முதல்வர் நாராயணசாமி

Jun 30, 2026 - 16:32
0
`தமிழக முதல்வர் விஜய்யைப் போல செய்வாரா முதல்வர் ரங்கசாமி?’ - கேட்கிறார் முன்னாள் முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர், ``தமிழகம், கேரளம், அசாம், மேற்கு வங்கம் உள்ளிட்ட நான்கு மாநிலங்களிலும் சட்டமன்றத் தேர்தல் முடிந்து, முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்கள் பதவியேற்று அரசுகள் சுறுசுறுப்பாகச் செயல்பட்டு வருகின்றன.

ஆனால் புதுச்சேரியில் மே 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், 13-ம் தேதிதான் முதல்வருடன் இரண்டு அமைச்சர்கள் பதவியேற்றனர். அதற்குப் பிறகு 15 நாள்கள் கழித்துதான் மீதமிருந்த மூன்று அமைச்சர்கள் பதவியேற்றனர்.

முழுமையான அமைச்சரவை அமைந்துவிட்ட பிறகும், அவர்களுக்கு இன்னும் இலாகாக்கள் ஒதுக்கப்படவில்லை. அதேபோல சபாநாயகர் தேர்தலையும் இன்னும் நடத்தவில்லை. எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பிற மாநில முதல்வர்கள்கூட சம்பிரதாயத்துக்காக பிரதமர் நரேந்திர மோடியையும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் சந்தித்துவிட்டனர்.

ரங்கசாமி, மோடி

ஆனால் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட யாரையும் இதுவரை சந்திக்கவில்லை. அதேபோல மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியையும், மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரேவையும் பலவீனப்படுத்தும் பா.ஜ.க-வால், புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமியை ஒன்றும் செய்ய முடியவில்லை.

பா.ஜ.க அவரைப் பார்த்து பயப்படுகிறது. பிரதமர் மோடிக்கு ரங்கசாமி சவால் விடுக்கிறார். கடந்த ஐந்து ஆண்டுக்கால ஆட்சியில் முதலமைச்சர் ரங்கசாமி பா.ஜ.க-வின் அடிமையாகச் செயல்பட்டார் என்று விமர்சனம் செய்திருந்தேன். இப்போது,  `இந்தமுறை என்னிடம் 11 எம்.எல்.ஏ-க்கள் இருக்கின்றனர். பா.ஜ.க-வுக்கு நான் அடிமையில்லை’ என்ற ரீதியில்தான் முதலமைச்சர் ரங்கசாமியின் செயல்பாடுகள் இருக்கின்றன.

சபாநாயகர் பதவி தங்களுக்கு வேண்டும் என்பதுடன், முக்கிய இலாகாக்களை கேட்டும் முதலமைச்சர் ரங்கசாமிக்கு அழுத்த கொடுக்கிறது பா.ஜ.க. ஆனால் அதை கண்டுகொள்ளாமல் நடந்துகொள்கிறார் முதல்வர் ரங்கசாமி. புதுச்சேரி பா.ஜ.க முதல்வர் ரங்கசாமியிடம் கெஞ்சிக் கொண்டிருக்கிறது.

இந்த நிலை நீடித்தால் புதுச்சேரி மாநிலத்துக்கு நல்ல விடிவுகாலம் வரும். சட்டப்பேரவைத் தலைவர் தேர்தல் தொடர்பாக முதலமைச்சர் ரங்கசாமி அனுப்பிய கோப்புக்கு அனுமதி கொடுக்காமல், கவர்னர் கைலாஷ்நாதன் திருப்பி அனுப்பியுள்ளதாகத் தெரிகிறது.

கவர்னர் கைலாஷ்நாதன் பா.ஜ.க-வுக்கு ஆதரவாக செயல்படுவதையே இது காட்டுகிறது. அத்துடன் தேர்வு செய்யப்பட்ட அரசு நிர்வாகத்தில் கவர்னர் தலையீடு இருப்பதையும் இது வெளிப்படுத்துகிறது. ஆனால் நிர்வாகத்தில் மக்கள் நலத் திட்டங்கள் முடங்கியுள்ளன. அனைத்துத் துறைகளிலும் ஊழல் மலிந்துள்ளது.

நாராயணசாமி | புதுச்சேரி காங்கிரஸ்
நாராயணசாமி | புதுச்சேரி காங்கிரஸ்

தமிழகத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் ஊழல் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார். அது போன்று சொல்வதற்குத் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தயாராக இருக்கிறாரா ? முதல்வர் ரங்கசாமி அரசு நிர்வாகத்தில் கவனத்தைச் செலுத்தாமல், வழக்கம்போல தனிப்பட்ட விஷயங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

இதனால் நிர்வாகம் ஸ்தம்பித்துள்ளது. கடந்த வாரம் நடந்த அரசு விழாவில் விமான நிலைய விரிவாக்கம், ரயில் திட்டங்கள், சாலைத் திட்டங்கள் குறித்துப் பேசியிருக்கிறார் கவர்னர் கைலாஷ்நாதன்.

ஆனால் அதெல்லாம் அரசின் கொள்கை முடிவுகள். தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் முதலமைச்சர்தான் அதுகுறித்துக் கூற வேண்டும். இதேநிலைதான் கிரண்பேடி கவர்னராக இருந்தபோதும் நீடித்தது. அதனால்தான் அப்போது நான் முதல்வராகப் போராடினேன்” என்றார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User