TVK: உட்கட்சி பூசல், பேருந்து நிலைய சர்ச்சை; கைகொடுத்த ஹோலோகிராம் விஜய்; கும்பகோணத்தை வென்ற தவெக!

May 05, 2026 - 09:31
0
TVK: உட்கட்சி பூசல், பேருந்து நிலைய சர்ச்சை; கைகொடுத்த ஹோலோகிராம் விஜய்; கும்பகோணத்தை வென்ற தவெக!

கும்பகோணம் சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க-வில் சாக்கோட்டை அன்பழகன், அ.தி.மு.க கூட்டணியில் த.மா.கா-வைச் சேர்ந்த அசோக்குமார், நா.த.க-வில் மோ.ஆனந்த், த.வெ.க-வில் வினோத் போட்டியிட்டனர்.

தொடர்ந்து மூன்று முறை தொகுதியைத் தக்க வைத்திருந்த சாக்கோட்டை அன்பழகன் நான்காவது முறை போட்டியிட்டு அதிர்ச்சி தோல்வியைத் தழுவியிருக்கிறார்.

தொடர்ந்து 30 ஆண்டுகள் தி.மு.க வசம் இருந்த தொகுதியைக் கைப்பற்றி வெற்றி வாகை சூடி கவனம் ஈர்த்துள்ளார் வினோத்.

வெற்றி சான்றிதழ் பெறும் வினோத்
வெற்றி சான்றிதழ் பெறும் வினோத்

இதுகுறித்து சிலரிடம் பேசினோம். ''சாக்கோட்டை அன்பழகன் மீது தொகுதிக்குள் எவ்விதமான அதிருப்தியும் இல்லை. நல்லது, கெட்டது என்று எல்லாவற்றிலும் கலந்து கொள்வார். எப்போதும் மக்களுடன் நெருக்கமாக இருப்பார். யார் நிகழ்ச்சிக்கு அழைத்தாலும் சென்று விடுவார்.

உதவி கேட்டு செல்பவர்களும் வெறுங்கையுடன் திரும்ப மாட்டார்கள். அவருக்கென மக்களிடத்தில் தனிப்பட்ட செல்வாக்கு உள்ளது. இப்படியான சூழலில் கும்பகோணத்தில் த.மா.கா போட்டியிடுகிறது என்றதுமே அன்பழகன் எளிதாக வெற்றி பெற்று விடுவார் என்று தான் பரவலாகப் பேசப்பட்டது.

ஆனால் தவெக வினோத் தொகுதிக்குள் வித்யாசமான முறையில் முன்னெடுத்த பிரசாரம் பலரது கவனத்தையும் ஈர்த்ததுடன் அன்பழகன் வெற்றியைக் கேள்விகுறியாக்கியது. ஹோலோகிராம் தொழில் நுட்பத்தின் மூலம் விஜய் தன் அருகே நின்று பேசுவது போல் வினோத் மேற்கொண்ட பிரசாரம் வரவேற்பைப் பெற்றது.

தவெக தலைமையே இது நல்ல ஐடியாவா இருக்கேனு வினோத்தைப் பாராட்டியது குறிப்பிடதக்கது. சாக்கோட்டை அன்பழகன் தன் ஊரான சாக்கோட்டைக்கு அருகில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கு முன்னெடுப்பை மேற்கொண்டதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியது.

பழைய நிலையில் அன்பழகன் இருந்தால் மக்கள் எதிர்க்கும் எந்தவொரு விஷயத்தையும் செய்ய மாட்டார். ஆனால் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான ஆரம்பகட்ட பணிகள் தொடங்கப்பட்டன.

வினோத்
வினோத்

இது சாக்கோட்டை அன்பழகன் மீதான அதிருப்திக்கு முக்கிய காரணமானது. இதே போல் தொடர்ந்து இவருக்கே வாய்ப்பளிக்கபடுவதால் கட்சிக்குள் ஒருவித சலசலப்பு கிளம்பியது. உட்கட்சி பூசலால் நகரப்பகுத்திக்குள் திமுக-வினர் முறையாக வேலை செய்யவில்லை.

வினோத் வீடு வீடாகச் செய்த பிரச்சாரம், 30 ஆண்டுகளாக தொகுதி திமுக வசம் உள்ளது. ஆனால் நகரம் போதிய வளர்ச்சியடையவில்லை என்பதை முன்வைத்தார். திமுக-வினர் கொடுத்த ரூ.8,000 மாடல் கூப்பனை வினோத் தடுத்த போது இருதரப்புக்கும் பிரச்னையானது.

இது சமூக ஊடகங்களில் வைரலானது. இவையெல்லாம் அன்பழகனுக்குப் பின்னடைவைத் தந்தன. நகரப்பகுதிக்குள் விஜய்க்கு என இருந்த செல்வாக்கு, கவனம் ஈர்க்கும் பிரசாரம் போன்றவற்றால் வினோத் வாகை சூடியிருக்கிறார்'' என்றனர்.

இது குறித்து வினோத் கூறுகையில், ''தளபதியால் இது சாத்தியமாகியிருக்கிறது. 30 ஆண்டுகளாக மாற்றமின்றி இருந்த அரசியல் கோட்டையை உடைத்து புதிய வரலாறு படைத்துள்ளோம். உங்கள் அன்பும், நம்பிக்கையும் தான் இந்த வெற்றிக்கான அடித்தளம்.

இது சாதாரண வெற்றி அல்ல. இது மாற்றத்திற்கான உறுதியான குரல். நம்பிக்கை பொய்க்காமல் தொகுதியின் வளர்ச்சிக்காக பாடுபடுவேன்'' என்றார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User