திருச்செந்தூர்: சேவைக் கட்டணங்களை உயர்த்த கோயில் நிர்வாகம் முடிவு; பக்தர்கள் அதிர்ச்சி!

Jun 23, 2026 - 17:01
0
திருச்செந்தூர்: சேவைக் கட்டணங்களை உயர்த்த கோயில் நிர்வாகம் முடிவு; பக்தர்கள் அதிர்ச்சி!

திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் அபிஷேகம், சண்முகார்ச்சனை, தங்கத்தேர் உலா போன்ற கட்டண சேவைகளின் தொகையை அதிகரிக்க திருக்கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக  பக்தர்களிடமிருந்து கருத்து கேட்கப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிவிப்பில், “அதிகளவு உயர்ந்துள்ள விலைவாசியைக் கருத்தில் கொண்டும், திருக்கோயிலுக்கான வருவாய் குறைவை ஈடு செய்யும் வகையிலும், நிர்வாகத்தின் நலன் கருதியும் தக்கார் தீர்மானத்தின் அடிப்படையிலும் தற்போதுள்ள சேவைக் கட்டணங்கள் மற்றும் அபிஷேக, சிறப்புத் தரிசனக் கட்டணங்களை உயர்த்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது.  

திருச்செந்தூர்
திருச்செந்தூர்

தங்கரத உலா திட்டத்திற்கான ஒருநாள் கட்டணம் 2,500 ரூபாயில் இருந்து 5,000 ரூபாயாகவும், அதன் நிரந்தர வைப்பு நிதி 50,000 ரூபாயில் இருந்து 1 லட்ச ரூபாயாக உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதேபோல் சண்முகார்ச்சனைக்கான ஒருநாள் கட்டணம் 5,000 ரூபாயில் இருந்து 30,000 ரூபாயாகவும், மூலவர் அபிஷேகத்திற்கான ஒருநாள் கட்டணம் 1,500 ரூபாயில் இருந்து 10,000 ரூபாயாக உயர்த்தப்படுகிறது.

மேலும், ஒன்பது கால பூஜைக்கான ஒருநாள் கட்டணம் 1,500 ரூபாயில் இருந்து 6,500 ரூபாயாகவும், அதன் நிரந்தர வைப்பு நிதி 20,000 ரூபாயில் இருந்து 90,000 ரூபாயாகவும் அதிகரிக்கப்படுகிறது.

சந்தனக்காப்பு செய்வதற்கான ஒருநாள் அனுமதி கட்டணம் தற்போதுள்ள 100 ரூபாயில் இருந்து 1,000 ரூபாயாக உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதற்கான 1.5 கிலோ சந்தனக் கட்டை வழங்கும் நடைமுறையில் மாற்றமில்லை. அபிஷேக தரிசனக் கட்டணம் தற்போது சாதாரண நாட்களில் 500 ரூபாயாகவும், திருவிழா மற்றும் விசேஷ நாட்களில் 2,000 ரூபாயாகவும், இனி அனைத்து நாட்களுக்கும் பொதுவான முறையில் 2,500 ரூபாயாகவும் உயர்த்தப்பட உள்ளது.  

திருச்செந்தூர்

இந்தக் கட்டண உயர்வுகள் குறித்து பக்தர்கள் அல்லது பொதுமக்களுக்கு ஏதேனும் ஆட்சேபனைகள் இருந்தால், அவற்றை எழுத்துப்பூர்வமாக வரும் 07.07.2026 மாலை 05.45 மணிக்குள் திருச்செந்தூர் கோயில் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

திருக்கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில், வருவாய் குறைவைக் காரணம் காட்டி சேவைக்கட்டணங்கள் மற்றும் அபிஷேகக் கட்டணங்களைப் பல மடங்கு உயர்த்த திருக்கோயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக பக்தர்கள் கூறியுள்ளனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User