”விவசாயிகளை ஏமாற்றிய வறண்ட வெற்று வேளாண் பட்ஜெட் இது” - தவெக அரசுக்கு எதிராக கொதிக்கும் விவசாயிகள்
பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும், டெல்டா மாவட்ட குறுவை சாகுபடிக்காக தண்ணீர் இல்லாததால் காவிரி திறக்கப்படாமல் வறண்டு கிடக்கிறது. எனவே டெல்டாவை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என அரசியல் கட்சிகள், விவசாய சங்கத்தினர், விவசாயிகள் உள்ளிட்டோர் தவெக அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இந்தச் சூழலில் தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு வேளாண்மைக்கான முதல் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் வினோத் வேளாண் பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார்.

இந்நிலையில் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசின் முதல் வேளாண் பட்ஜெட்டை அரசியல் கட்சிகள் மற்றும் விவசாய சங்கத்தினர் விமர்சித்து வருகின்றனர்.
இது குறித்து தமிழ்நாடு காவிரி உழவர்கள் பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் சுவாமிமலை விமல்நாதன் நம்மிடம், ''இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் பெயரில் கும்பகோணத்தில் உயிர்ம பட்டயக் கல்வி நிலையம் அமைப்பது பற்றிய அறிவிப்பை மகிழ்ச்சியுடன் நன்றியுடன் வரவேற்கிறோம்.
அதே நேரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் தனது தேர்தல் பரப்புரையில் அளித்த வாக்குறுதிகளில் நெல் குவிண்டாலுக்கு ரூ.3,500, கரும்பு டன்னுக்கு ரூ.4,500 விலை தருவேன். பாலின் கொள்முதல் விலையை உயர்த்தி தருவேன். 20 லட்சம் புதிய வேளாண் மின் இணைப்புகள் தரப்படும், அனைத்து நியாய விலை அங்காடிகளில் சத்துணவுக்கூடங்களில் பாமாயிலுக்கு மாற்றாக சமையலுக்கு தேங்காய் எண்ணெய் தருவேன் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் அளித்திருந்தார்.
தேர்தல் பரப்புரைகளில் அளித்த வாக்குறுதிகளில் எதனையும் இன்றைய நிதிநிலை அறிக்கையில் நிறைவேற்றவில்லை.

தேர்தல் நேரத்தில் அறிவித்த பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்தில் கூட தொடர் குளறுபடிகள் நீடித்துக் கொண்டே இருக்கின்றன. சமீபத்தில் மகாராஷ்டிரா மாநிலம் வேளாண் கடன் தள்ளுபடி திட்டத்தில் அம்மாநிலத்தில் உள்ள உழவர்கள் நலன் கருதி ரூ.36,000 கோடி தள்ளுபடி செய்து அரசாணை வெளியிட்டு செயல்படுத்திவிட்டது.
வேளாண் கடன் தள்ளுபடி திட்டத்தில் தமிழ்நாடு அரசு தெளிவு பெறாமல் தொடர்ந்து குழப்ப நிலையில் இருப்பதால் விவசாயிகள் நெல், கரும்பு உள்ளிட்ட வேளாண் விளைப் பொருட்களுக்கு தேர்தல் கால வாக்குறுதியின் படி விலைகள் வழங்க கோரி விரைவில் தமிழ்நாடு தழுவிய போராட்டங்கள் நடைபெற இருக்கின்றன.
தமிழ்நாடு அரசு நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற நிதிநிலை அறிக்கை கூட்டத்தில் திருத்தப்பட்ட வேளாண் நிதி நிலை அறிக்கையை அறிவிப்பாகச் செய்து நெல், கரும்பு, பால் கொள்முதல் விலையை உயர்த்தி தர வேண்டும்.
வேளாண்மைக்கான புதிய மின் இணைப்புகள் வழங்கப்பட வேண்டும். பட்ஜெட்டில் இவை இல்லாததால் இது விவசாயிகளை ஏமாற்றிய வறண்ட வெற்று வேளாண் நிதிநிலை அறிக்கையாக உள்ளது. புதிய திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கை அவசியம் தேவை'' என்றார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)