'நம் விவசாயிகளை கைது செய்த மகாராஷ்டிர அரசிடம் விளக்கத்தை முதல்வர் கேட்க வேண்டும்'- உதயநிதி

Aug 03, 2026 - 10:01
0
'நம் விவசாயிகளை கைது செய்த மகாராஷ்டிர அரசிடம் விளக்கத்தை முதல்வர் கேட்க வேண்டும்'- உதயநிதி

காவிரி நீர் பிரச்னை மற்றும் மேகதாது அணை விவகாரத்தில் தமிழகத்திற்கு இழைக்கப்படும் அநீதிகளைக் கண்டித்து டெல்லியில் போராட்டம் நடத்துவதற்காக ரயிலில் சென்ற தமிழக காவிரி டெல்டா பாசன விவசாயிகளை மகாராஷ்டிர மாநில காவல்துறை நாக்பூர் ரயில் நிலையத்தில் தடுத்து நிறுத்தி இறக்கியுள்ளது.

மத்திய நீர்வள அமைச்சகத்தின் ஒரு சார்பான நிலைப்பாட்டைக் கண்டித்தும், டெல்லியில் போராடவிருந்த விவசாயிகளைப் பாதியிலேயே தடுத்து நிறுத்தி வலுக்கட்டாயமாகத் திரும்ப அனுப்பியதற்கு அரசியல் தலைவர்கள் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

உதயநிதி கண்டனம்
உதயநிதி கண்டனம்

அந்தவகையில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினும் தனது கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் எக்ஸ் தளப்பக்கத்தில், " மேகதாது அணை கட்டுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று டெல்லியில் முற்றுகைப் போராட்டம் நடத்துவதற்காக ரயிலில் சென்ற தமிழ்நாட்டு விவசாயிகளை நாக்பூரில் கைது செய்துள்ள மகாராஷ்டிரா மாநில காவல்துறையை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

மேகதாது விஷயத்தில் தொடக்கம் முதலே கர்நாடகாவுக்கு ஆதரவாக ஒருதலைபட்சமாக செயல்படும் நீர்வளத்துறையின் போக்கை கண்டித்துதான் தமிழ்நாட்டு விவசாயிகள் முற்றுகைப் போராட்டத்தை அறிவித்தனர்.

ஆனால், அவர்கள் ரயிலில் சென்று கொண்டிருக்கும் போதே நடுவழியில் இறங்க வைத்து, தமிழ்நாட்டுக்கே திரும்பிச் செல்லுங்கள் என கட்டாயப்படுத்தி உள்ளது மகாராஷ்டிர காவல்துறை.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

நாக்பூரில் கைது செய்யப்பட்டுள்ள நம் விவசாயிகளை உடனே விடுவிக்க தமிழ்நாடு முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நம் விவசாயிகளை கைது செய்த மகாராஷ்டிர அரசிடம் அதற்கான விளக்கத்தைக் கேட்பதுடன், இனி இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருப்பதற்கான உறுதியைப் பெற வேண்டும்.

டெல்லி சென்று போராட அவர்களை ஒன்றிய அரசு அனுமதிக்க வேண்டும். ஜனநாயக வழியில் போராடும் உரிமையைப் பறிக்கக் கூடாது" என்று பதிவிட்டிருக்கிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User