தஞ்சை மாவட்டம் திருப்பேணுப் பெருந்துறை மோனமுருகன்... பேச்சுத் திறன் சாவல் உடையவர்களுக்கான தலம்!

Apr 17, 2026 - 09:02
 0
தஞ்சை மாவட்டம் திருப்பேணுப் பெருந்துறை மோனமுருகன்... பேச்சுத் திறன் சாவல் உடையவர்களுக்கான தலம்!

கோயில்கள் ஒவ்வொன்றும் தனிச்சிறப்பு வாய்ந்தவை. சில தலங்கள் சென்று வழிபட்டால் சொந்த வீடு கிடைக்கும் என்பார்கள். சில தலங்கள் திருமணகூடிவர... சில தலங்கள் கடன் பிரச்னை தீர... சில ஆரோக்கியம் உண்டாக எனப் பல்வேறு தலங்கள் உள்ளன.

அப்படி ஒரு தலம் தான் திருப்பேணு பெருந்துறை திருக்கோயில் இந்தக் கோயிலுக்கு வந்து இங்கு அருள்பாலிக்கும் முருகப்பெருமானை வேண்டிக்கொண்டால் பேச்சு வராதவர்கள், பேச்சு சவால் உடையவர்களுக்குச் சரியாகும் என்கிறார்கள் பக்தர்கள். வாருங்கள் அந்த அற்புதத் தலத்தின் மகிமையை அறிந்துகொள்வோம்.

காவிரித் தென்கரைத் தலங்களில் இது 64-வது தலமாகத் திகழும் இந்த ஊர், கும்பகோணத்தில் இருந்து எரவாஞ்சேரி செல்லும் சாலையில், நாச்சியார் கோவில் என்ற தலத்துக்கு வடகிழக்கே 3 கிலோமீட்டர் தூரத்தில் அரசனாற்றங்கரையில் அமைந்துள்ளது.

திருப்பேணுப் பெருந்துறை மோனமுருகன் கோயில் ஈசன்
திருப்பேணுப் பெருந்துறை மோனமுருகன் கோயில் ஈசன்

மூன்று நிலை ராஜகோபுரத்துடன் கூடிய சிறிய, அழகிய திருக்கோயில் நன்கு பராமரிக்கப்படுகிறது. கோயிலுக்கு எதிரே ‘மங்கள தீர்த்தம்’ என்னும் திருக்குளம். அதன் அருகே, குக விநாயகர், சாட்சி விநாயகர் என்ற இரட்டைப் பிள்ளையார்கள் காட்சி தருகின்றனர். இவர்களை வணங்கிக் கோயிலுக்குள் செல்ல வேண்டும். தல விருட்சம் இரட்டை வன்னி மரம்.

மூலவர் அருள்மிகு சிவானந்தேஸ்வரர். ‘பிரணவேஸ்வரர்’ என்றும் அழைக்கப்படுகிறார். தெற்கு நோக்கிய அம்பாள் சந்நிதியில், அருள்மிகு மலையரசி எனப்படும் மங்களாம்பிகை வீற்றிருக்கிறாள். எங்கும் இல்லாத அதிசயமாக, இங்கே சுவாமி சந்நிதியில், முருகப்பெருமான் வடதிசை நோக்கி அருள்பாலிக்கிறார்.

கருவறைக்கு முன்பாக நமக்கு இடதுபுறம் முருகப்பெருமான் நான்கு அடி உயரத்தில் அர்ச்சாவதார மூர்த்தி. இந்த முருகப்பெருமானின் சிரசில் குடுமி அமைந்திருப்பது சிறப்பு. தலையில் குடுமியுடன், வலதுகை சின்முத்திரையில் இருக்க, இடதுகையில் தண்டம் ஏந்திய ஞான தண்டாயுத பாணியாக, கழுத்தில் மணிமாலை அணிந்து, காதுகள் நீண்டு தொங்க, கண் மூடி மவுனியாக, மோனத் தவத்தில் காட்சி தருகிறார் முருகன்.

திருப்பேணுப் பெருந்துறை மோனமுருகன் கோயில்
திருப்பேணுப் பெருந்துறை மோனமுருகன் கோயில்

மோனத் திருநிலையில் இருக்கும் முருகனுக்குப் பால், சந்தனம், தேன் போன்றவற்றை அபிஷேகம் செய்ய வேண்டும். பிறகு அபிஷேகம் செய்த தேனை வாங்கிச் சென்று, தினமும் நாக்கில் வைத்து வந்தால் சரியாகப் பேச்சு வராதவர்களுக்கு போன்றவற்றிலிருந்து விடுபடலாம் என்கிறார்கள் பக்தர்கள். ஒரு மண்டலம் தேனை நாக்கில் தடவிச் சாப்பிடுவதுடன், கோயிலில் கொடுக்கப்படும் பாடலையும் தினசரி படித்து முருகனைத் தியானிக்க வேண்டும். அவ்வாறு செய்துவர பிரச்னை தீர்ந்த பக்தர்கள் ஏராளம் என்கிறார்கள்.

திருஞானசம்பந்தர் இத்தலத்து இறைவனைப் போற்றி 11 பதிகங்கள் பாடியுள்ளார். ஸ்ரீபிரணவநாதரை வணங்குபவர்களுக்குத் திருமணம் கைகூடும்... உத்தியோகம் சிறப்படையும் என்கிறார்கள்.

சிறிய கோயில் என்பதால் ஒரே ஒரு பிராகாரம்தான். அதில் உள்ள சந்நதிகளில் காசி விஸ்வநாதர், விசாலாட்சி, நால்வர், விநாயகர்கள், பாணலிங்கம், தெய்வானை ஆகியோர் காட்சி தருகின்றனர். இடதுபுறம் ஸ்ரீலட்சுமி தேவியை மடியில் அமர்த்திய நிலையில் ஸ்ரீலட்சுமி நாராயணப் பெருமாளும் காட்சி தந்து, கடாட்சிக்கிறார்.

செங்கல் கோயிலாக இருந்த இதைக் கருங்கல் கோயிலாகத் திருப்பணி செய்து கட்டிய மன்னர் கரிகாலச் சோழனுக்கும் அவனது அரசிக்கும் சிலைகள் இருக்கின்றன. கோஷ்டத்தில் பிள்ளையார், பிரம்மா, லிங்கோத்பவர், விஷ்ணு துர்கை ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

திருப்பேணுப் பெருந்துறை மோனமுருகன் கோயில்
திருப்பேணுப் பெருந்துறை மோனமுருகன் கோயில்

இந்தக் கோயிலில் தட்சிணாமூர்த்தி சந்நிதிக்கு நேர் மேலே அமைந்திருக்கும் கருவறை விமானத்தில் பல சிவ விஷ்ணு ரூபங்கள் அழகுறச் செதுக்கப்பட்டுள்ளன. இவற்றுள் அற்புதமான இரண்டு குரு வடிவங்களான வீணா தட்சிணாமூர்த்தி மற்றும் அர்த்தநாரீஸ்வர ரூபமாக சிவசக்தி தட்சிணாமூர்த்தியும் காட்சி தருவது மிக அற்புதம்.

பிராகார வலம் வரும்போது விநாயகர், கஜலட்சுமி, சண்டிகேஸ்வரர் சந்நிதிகள்... நவகிரக சந்நதியிலும் ஒரு சிறப்பு... நடுநாயகராக விளங்கும் சூரிய பகவான் உஷா, பிரத்யுஷா தேவியருடன் தனி மேடையில் நின்ற கோலத்தில் காணப் படுகிறார்.

இங்கே முருகனுக்குரிய தைப்பூசம், வைகாசி விசாகம், கந்தசஷ்டி, திருக்கார்த்திகை போன்ற விழாக்களும் ஈசனுக்குரிய விழாக்களும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.

பேச்சு சவால் இருக்கும் குழந்தைகள், வார்த்தைகள் சரியாக வராமல் சிரமப்படுபவர்கள் இருந்தால், அவர்களை ஒரு முறை திருப்பந்துறைக்கு ஒருமுறை அழைத்துச் செல்லுங்கள். குமரக் கடவுளின் அருளால் மடை திறந்த வெள்ளம்போல் பேசுவார்கள் என்கிறார்கள் அந்த ஊர் பக்தர்கள்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0