”2 ஊற்று கிணறுகள், 300 பனை மரங்கள் அழிப்பு; யாரும் ஓட்டு கேட்டு வராதீர்கள்!"- போராடும் மீனவ கிராமம்!
பேராவூணி அருகே சரபேந்திரராஜன் பட்டினம் பஞ்சாயத்தில் மனோரா சுற்றுலாதளம் அமைந்துள்ளது. இங்கு சின்னமனை, மனோரா மீனவர் காலனிகள் உள்ளன. இங்கு 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். மீன்பிடி முக்கிய வாழ்வாதாரம். மனோராவில் கடல்பசு பாதுகாப்பு மையம் அமைக்கும் பணிகள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. மனோரா மீனவ காலனி மக்கள் இரண்டு ஊற்று கிணறுகளில் குடிநீர் எடுத்து பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், வனத்துறையினர் மணல் கொண்டு ஊற்று கிணறை மூடி விட்டனர். மேலும், சுடுகாட்டுப் பாதை, மீன் வலை, கருவாடு உலர்த்துவதற்கும் தடை வித்துள்ளனர். இவற்றின் மூலம் நெருக்கடி கொடுத்து அங்குள்ள மக்களை அந்த இடத்திலிருந்து காலி செய்ய வைக்கும் முயற்சி நடப்பதாக அப்பகுதி மீனவர்கள் தெரிவித்து வந்தனர். 
இது தொடர்பாக கடந்த மாதம் அனைத்து அதிகாரிகளிடமும் மனு அளித்தனர். அப்போது, ``எங்களது வாழ்வாதார பிரச்னைக்கு தீர்வு காணாமல், கடல்பசு பாதுகாப்பு மையத்திற்கான கட்டுமானப் பணிகளை செய்து வருகின்றனர்" எனக் கூறினர். ஆனால் அதன் பிறகும் மாவட்ட நிர்வாகம், ஆட்சியாளர்கள், உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் இதை கண்டு கொள்ளவில்லை என சொல்லப்படுகிறது. இதையடுத்து அதிருப்தியடைந்த மக்கள், தயவு செய்து 2026 சட்டமன்ற தேர்தலுக்கு ஓட்டு கேட்டு யாரும் ஊருக்குள் வர வேண்டாம் என்று அச்சிட்டு கிராமம் முழுவதும் கருப்புக் கொடியுடன் ஃப்ளக்ஸ் வைத்துள்ளனர்.
இதனால் வேட்பாளர்கள் யாரும் இதுவரை அப்பகுதிக்கு பிரசாரம் செய்ய செல்லவில்லை. இது குறித்து கிராம மக்கள் கூறியதாவது, ``கடந்த 1970ம் ஆண்டு கட்டப்பட்ட வீடுகள், சுனாமிக்கு பின் கட்டப்பட்ட வீடுகள் இங்கு உள்ளன. 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கிறோம். எங்களின் குடிநீர் தேவை ஊற்றுகளின் மூலமாகவே எடுத்து வந்தோம். மீன்வலை, கருவாடு காயவைக்க பயன்படுத்திய இடத்தை வனத்துறை கடல்பசு மையம் அமைக்க எடுத்துக்கொண்டது. பள்ளி, ஆரம்ப சுகாதார நிலையம், கழிப்பறை வசதி போன்ற அடிப்படை தேவைகளுக்காக இன்னும் போராடி வருகிறோம். 
எங்களால் பாதுகாக்கப்பட்ட 300 பனைமரங்களை வனத்துறையினர் வெட்டி சேதப்படுத்தினர். சில பனை மரங்களை மறுநடவு செய்கிறோம் என்ற பெயரில் வேறு இடத்தில் நட்டனர். முறையான பராமரிப்பு இல்லாததால் பனைமரம் காய்ந்து வருகிறது. இப்படியாக சுற்றுச்சூழலை சேதப்படுத்தி, கடல்பசு மையம் அமைக்கப்படுகிறது. இதற்காக தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று எங்களை, நாங்கள் வாழ்ந்த இடத்தில் இருந்து வெளியேற்ற முனைப்பு காட்டுகிறது.
கடல் பசு பாதுகாப்பு மையம் அமைக்க நாங்கள் எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை. பட்டா கேட்டு பல ஆண்டுகளாக போராடி வருகிறோம். அது குறித்து யாரும் கண்டுக்கொள்ளவில்லை. இதற்காக எங்கள் வாழ்வாதாரத்தை பலிகொடுக்க மாட்டோம். தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் முறையீடு செய்வது, வழக்கு தொடர்ந்து சட்டப்பூர்வமான போராட்டங்களை முன்னெக்க தயாராகி விட்டோம். எங்களை யாரும் கண்டுகொள்ளவில்லை. இதனால் ஓட்டு கேட்டு யாரும் வர வேண்டாம் என்று எங்களுடைய எதிர்ப்பை காட்டுகிறோம்" என்றனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0