`அதிமுக-வை நிர்மூலமாக்க சிலர் முயற்சிக்கின்றனர்' - எடப்பாடி பழனிசாமி

Jul 06, 2026 - 16:31
0
`அதிமுக-வை நிர்மூலமாக்க சிலர் முயற்சிக்கின்றனர்' - எடப்பாடி பழனிசாமி

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில், தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகிகளுடன் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் மற்றும் கட்சியின் வளர்ச்சிப் பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் சட்டமன்றத் தேர்தல் தோல்வி, கட்சி மறுசீரமைப்பு, வரவிருக்கும் இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தல் பணிகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பல வெற்றி, தோல்விகளைக் கண்ட இயக்கம். தற்போதைய தேர்தல் வெற்றிக்கான காரணம் என்ன என்பதை ஆராய வேண்டிய அவசியமில்லை. மக்களை கவர்ந்த ஒரு மாயை உருவாக்கப்பட்டது. அந்தக் கவர்ச்சியை நம்பி மக்கள் வாக்களித்துள்ளனர். ஆனால் கடந்த ஒரு மாத காலத்திலேயே அதன் உண்மையை மக்கள் உணரத் தொடங்கியுள்ளனர்” என்றார்.

எடப்பாடி பழனிசாமி

மேலும், “தேர்தலில் வெற்றி, தோல்வி என்பது அரசியலில் சகஜமானது. பீனிக்ஸ் பறவையைப் போல அதிமுக மீண்டும் எழுச்சி பெற்று ஆட்சிக் கட்டிலில் அமரும். கட்சியில் இருந்து வெளியேறியவர்கள் உண்மையான விசுவாசிகள் அல்ல. பதவி சுகத்திற்காகவும், தங்களது பணத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவும் அவர்கள் மாற்றுக் கட்சிகளுக்கு சென்றுள்ளனர்” என்று விமர்சித்தார்.

அதிமுகவை பலவீனப்படுத்தவும், நிர்மூலமாக்கவும் சிலர் முயற்சித்து வருவதாக குற்றம்சாட்டிய அவர், “அது எப்போதும் நடக்காது. கட்சித் தொண்டர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்” என்றார்.

அதேபோல், இளைஞர் அணி, இளைஞர் பாசறை மற்றும் இளம் பெண்கள் பாசறை அமைப்புகளுக்கு மீண்டும் புத்துணர்வு அளித்து தீவிரமாக செயல்படுத்த மாவட்ட நிர்வாகிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User