அரசு கேபிளில் மீண்டும் ஒளிபரப்பாகும் பாலிமர், நியூஸ் தமிழ், தமிழ் ஜனம் - சர்ச்சைக்கு முடிவா ?
தமிழ்நாடு அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனத்தின் ஒளிபரப்பில் இருந்து பாலிமர் நியூஸ், நியூஸ் தமிழ் மற்றும் தமிழ் ஜனம் ஆகிய மூன்று செய்தி சேனல்கள் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை முதல் நீக்கப்பட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே இந்த பிரச்னை ஏற்பட்டதாக தமிழக அரசு விளக்கம் அளித்திருந்தாலும் எதிர்க்கட்சிகள், ஊடக அமைப்புகள் மற்றும் பத்திரிகையாளர் சங்கங்கள் இதனை கடுமையாக விமர்சித்தன.
இந்த விவகாரத்தில் அண்ணாமலை, எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் தவெக அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர். சென்னை பத்திரிகையாளர் மன்றமும் கருத்துச் சுதந்திரம் மற்றும் ஊடக சுதந்திரம் தொடர்பாக கண்டனத்தை தெரிவித்து அறிக்கை வெளியிட்டு அரசின் நடவடிக்கை மீது கேள்வி எழுப்பியது.

சர்ச்சை தீவிரமடைந்த நிலையில், தகவல் மற்றும் மக்கள் தொடர்புத் துறை (DIPR) இயக்குநர் அருண் தம்புராஜ் ஐஏஎஸ் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராக கூடுதல் பொறுப்பாக நியமிக்கப்பட்டார்.
அரசு தரப்பில் அரசு கேபிளின் செட்-டாப் பாக்ஸ் செயல்பாடுகளை கையாளும் மந்த்ரா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தொழில்நுட்ப பிரச்னையால் இந்த ஒளிபரப்பு பாதிப்பு ஏற்பட்டதாகவும் அதை உடனடியாக சரிசெய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் மூன்று சேனல்கள் ஒளிபரப்பு நிறுத்தம் தொடர்பாக அமைச்சர்கள் மற்றும் சேனல்களின் செய்தி ஆசிரியர்கள் இடையே நேற்று மாலை நடைபெற இருந்த ஆலோசனைக் கூட்டம் இறுதி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. அதே நேரத்தில் இன்று காலை முதல் பாலிமர் நியூஸ், நியூஸ் தமிழ் மற்றும் தமிழ் ஜனம் ஆகிய மூன்று சேனல்களும் மீண்டும் அரசு கேபிள் தளத்தில் முழுமையாக ஒளிபரப்பாக தொடங்கியுள்ளன. தொழில்நுட்ப கோளாறு என அரசு கூறிய விளக்கத்தை உறுதிப்படுத்தும் வகையிலா அல்லது எழுந்த எதிர்ப்புகளின் விளைவாக அரசின் பின்வாங்கலா என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகிறது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)