"அம்மா, நான் திரும்பி வருவேனானு தெரியாது!" - போர் பதற்றத்திற்கு இடையே 169 இந்தியர்களை மீட்ட விமானி!

Mar 12, 2026 - 11:32
 0
"அம்மா, நான் திரும்பி வருவேனானு தெரியாது!" - போர் பதற்றத்திற்கு இடையே 169 இந்தியர்களை மீட்ட விமானி!

மத்திய கிழக்கில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தவித்த 169 இந்தியர்களைப் பாதுகாப்பாக தாயகம் அழைத்து வந்து சாதனை படைத்துள்ளார் 23 வயது இளம் விமானி தீபிகா அதானா.

ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தின் திகான் பகுதியைச் சேர்ந்தவர் தீபிகா. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸில் விமானியாகப் பணியாற்றும் தீபிகாவுக்கு, மார்ச் 6-ம் தேதி காலை திடீரென ஒரு அவசர உத்தரவு வந்தது. ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ராஸ் அல் கைமா பகுதிக்குச் சென்று, அங்குள்ள இந்தியர்களை மீட்க வேண்டும் என்பதே அந்தப் பணி.

போர்க்களம் போன்ற சூழல் நிலவியதால், புறப்படுவதற்கு முன் தனது தாயிடம் பேசிய தீபிகா, "அம்மா, பை பை. நான் மீண்டும் உயிருடன் வருவேனா என்று எனக்குத் தெரியவில்லை" என்று கூறிவிட்டுப் புறப்பட்டுள்ளார்.

தீபிகா அதா
தீபிகா அதா

முதலில் இந்த விமானத்தை தீபிகாவின் தோழி இயக்குவதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் தீபிகா அந்தப் பொறுப்பை ஏற்றார். கேப்டன் ஜஸ்விந்தர் கவுர், தீபிகா அதானா மற்றும் நான்கு பெண் பணியாளர்கள் என முழுவதுமே பெண்களைக் கொண்ட குழுவினர் இந்த ஆபத்தான மீட்புப் பணியில் ஈடுபட்டனர். போர் பயம் இருந்தாலும், உரிய பாதுகாப்பு குறித்த நம்பிக்கையுடன் அவர்கள் விமானத்தைச் செலுத்தினர்.

பிற்பகல் 2 மணிக்கு ராஸ் அல் கைமா விமான நிலையத்தில் தரை இறங்கிய விமானம், 169 இந்தியப் பயணிகளை ஏற்றிக்கொண்டு 3:30 மணிக்கு டெல்லிக்குப் புறப்பட்டது. அப்போது ஒரு இக்கட்டான சூழலாக, விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறையுடனான (ATC) தொடர்பு சிறிது நேரம் துண்டிக்கப்பட்டது. இதனால் குழுவினர் பெரும் பதற்றமடைந்தனர். இருப்பினும், சில நிமிடங்களில் தொடர்பு மீட்கப்பட்டு, விமானம் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பாகத் தரையிறங்கியது.

பாதுகாப்பாகத் தாயகம் திரும்பிய பயணிகள், கண்ணீர் மல்க இந்த வீரப் பெண்மணிகளுக்குத் தங்களது நன்றிகளைத் தெரிவித்து வருகின்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0