மே வங்கம்: `திரிணாமுல் தலைவர்கள்மீது முட்டை வீச வேண்டுமென்பது அரசு உத்தரவு'- பாஜக கவுன்சிலர் சர்ச்சை

Jul 10, 2026 - 13:31
0
மே வங்கம்: `திரிணாமுல் தலைவர்கள்மீது முட்டை வீச வேண்டுமென்பது அரசு உத்தரவு'- பாஜக கவுன்சிலர் சர்ச்சை

மேற்கு வங்கத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் தோல்வியடைந்த பிறகு அக்கட்சியின் தலைவர்கள் மக்களின் எதிர்ப்புகளுக்கு ஆளாகி வந்தனர். அவர்கள் செல்லும் இடமெல்லாம் பொதுமக்கள் முட்டை மற்றும் தக்காளிகளை கொண்டு வீச ஆரம்பித்தனர். திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் மீது மக்களுக்கு இவ்வளவு நாள்களும் இருந்த கோபம் வெளிப்படுவதாக மாநில பா.ஜ.க முதல்வர் சுவேந்து அதிகாரி குறிப்பிட்டு இருந்தார். ஆனால் அவரின் கருத்துக்கு நேர் மாறாக திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் மீது முட்டை வீசச் சொன்னதே அரசுதான் என்று பா.ஜ.க நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மிட்னாபூரில் பாஜக பஞ்சாயத்து தலைவர் ஒருவர், மூத்த திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகிகள் மீது முட்டைகளைத் வீசிவிட்டு, இது அரசு உத்தரவு என்று கூறும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கிட்டத்தட்ட இரண்டு நிமிடங்கள் ஓடும் அந்த வீடியோவில், பொதுப்பணித்துறையைக் கவனித்து வந்த 70 வயதைக் கடந்த முன்னாள் திரிணாமுல் பஞ்சாயத்து உறுப்பினரான மனாஸ் தாஸை, ராம்நகர் II தொகுதி பாஜக பஞ்சாயத்து எதிர்க்கட்சித் தலைவரான சுப்ரதா ஜனா முட்டைகளால் தாக்கினார்.

தாக்குதலுக்கு உள்ளான அபிஷேக் பானர்ஜி

ஒரு முதியவரை ஏன் தாக்குகிறீர்கள் என்று உள்ளூர் மக்கள் கேள்வி எழுப்பியபோது, தனது செயல்கள் அனைத்தும் சர்க்கார் (அரசாங்க) உத்தரவின் கீழ் தான் செய்யப்படுகின்றன என்றும், தானே இதற்குப் பொறுப்பாளர் என்றும் ஜனா மீண்டும் மீண்டும் உறுதியாகக் கூறினார். இக்கருத்து பெரிய அளவில் வைரலானவுடன், தான் மாநில அரசைக் குறிப்பிடவில்லை என்று சுப்ரதா ஜனா மறுத்தார். சர்க்கார் என்ற பெங்காலி வார்த்தைக்கு மந்திரவாதி பி.சி.சர்க்கார் என்றுகூட பொருள் இருந்திருக்கலாம் என அவர் விளக்கமளித்துள்ளார்.

கடந்த மே மாதம் முதல் திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகிகளை குறிவைத்து நடத்தப்படும் இது போன்ற முட்டை வீச்சு சம்பவங்கள் கல்கத்தா உயர் நீதிமன்றத்தின் கடுமையான விமரிசனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. இது மனிதநேயமற்ற செயல் என்று தெரிவித்த நீதிமன்றம், இதனைத் தடுப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வழங்குமாறு மாநில அரசுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து காளிகாட் மற்றும் போஸ்டா ஆகிய பகுதிகளில் நடந்த இது போன்ற இரு சம்பவங்களில் ஈடுபட்டவர்களை அரசு கைது செய்துள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User