கேரள சிவசேனா செயலாளர் கொலை வழக்கு; குமரியில் இருவர் கைது; 3 பேரை தேடும் போலீஸ்!
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை தாமிரபரணி ஆற்றில் கண்ணகோடு பகுதி அருகே இறந்த நிலையில் ஒருவரின் உடல் மிதப்பதாக பொதுமக்கள் கடந்த 31-ம் தேதி மார்த்தாண்டம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸார் அங்கு சென்று உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். அந்த உடலில் பல இடங்களில் சிவசேனா கட்சி சம்பந்தமாக பச்சை குத்தியிருந்தது. மேலும் சில இடங்களில் காயங்களும் காணப்பட்டன். அதன் அடிப்படையில் நடத்திய விசாரணையில் இறந்தவர், கொல்லங்கோடு அருகே கேரள பகுதியான செங்கவிளையை சேர்ந்த சதீசன் மகன் அதுல் (32) என்பது தெரியவந்தது. அதுல் சிவசேனா கட்சியின் கேரள மாநில செயலாளராக இருந்துவந்தார். இதையடுத்து கேரள மாநில சிவசேனா கட்சி நிர்வாகிகள் மார்த்தாண்டம் வந்து டி.எஸ்.பி-யிடம் குற்றவாளிகளைக் கைது செய்ய கோரிக்கை வைத்தனர். போலீஸார் அதுலின் உடலை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். பிரேத பரிசோதனையில் அதுலின் தலையில் ஆழமான காயம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் ஆயுதங்களால் தலையில் தாக்கியதில் அதுல் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. குற்றவாளிகளைக் கைது செய்யும் வரை அவரது உடலைப் பெற மாட்டோம் என சிவசேனா கட்சியினரும், உறவினர்களும் கூறியதால், அதுலின் உடல் ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து மார்த்தாண்டம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சிவசேனா பிரமுகரின் கார் சென்ற வழித்தடங்களில் உள்ள சி.சி.டி.வி பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தனர். சி.சி.டி.வி காட்சிகளின் அடிப்படையில் உண்ணாமலைக்கடை ஆர்.சி தெருவைச் சேர்ந்த நிதீஷ் (29) மற்றும் மாங்கரை கம்பளார் பகுதியைச் சேர்ந்த பெர்லின் ஜியோ (27) ஆகியோரை தனிப்படை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில், சம்பவத்தன்று அதுலும், குழித்துறை கல்லுகெட்டி பகுதியைச் சேர்ந்த தந்தை, மகன் உட்பட 4 பேர் சேர்ந்து குழித்துறையில் ஒரு பாருக்கு சென்று மது அருந்தியதாகவும். பின்னர் கல்லுகெட்டி சென்றதாகவும். அங்கு வைத்து ஏதோ பிரச்னை காரணமாக அதுல் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. பின்னர் அதுலின் உடலை மூன்று பேருமாக காரில் கொண்டுசென்று, மார்த்தாண்டத்தை அடுத்த கண்ணகோடு ரயில்வே மேம்பாலத்திலிருந்து உடலை ஆற்றில் வீசியுள்ளனர்.

பின்னர் அதுலின் காரை சிதறால் மலைக்கோவில் அருகில் கொண்டு விட்டுவிட்டு மாங்கரை பகுதியைச் சேர்ந்த பெர்லின் ஜியோவை வரவழைத்து அவரது காரில் ஏறி தப்பிச் சென்று உள்ளனர். இதில், கொலையாளிகள் தப்பிச் செல்ல உதவிய பெர்லின் ஜியோ மற்றும் கொலை குற்றவாளிகளுக்கு உதவியதாக நிதீஷ் என்பவரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். கொலையில் நேரடியாக தொடர்புடைய தந்தை, மகன் மற்றொருவர் என மூவரின் விபரங்கள் போலீஸாருக்கு கிடைத்துள்ளதாகவும், மூவரும் கேரளாவிற்கு தப்பிச் சென்றிருக்கலாம் எனவும் தனிப்படை போலீஸார் சந்தேகிக்கின்றனர். அவர்கள் மூவரும் சிக்கினால்தான் கொலைக்கான காரணம் மற்றும் கொலை நடந்த விதம் குறித்து தெரிய வரும் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)