கரூர் சம்பவம்: `மக்களை தவிக்கவிட்டு ஓடிப்போனவர்கள் யார் என்பது..!'- விஜய் பேச்சுக்கு கனிமொழி பதிலடி

Jul 10, 2026 - 18:02
0
கரூர் சம்பவம்: `மக்களை தவிக்கவிட்டு ஓடிப்போனவர்கள் யார் என்பது..!'- விஜய் பேச்சுக்கு கனிமொழி பதிலடி

கரூர் பெருந்துயர் சம்பவத்திற்குப் பிறகு, தமிழக முதல்வர் விஜய் இன்று முதன் முறையாக கரூர் மாவட்டத்துக்குச் சென்றார். மக்கள் சந்திப்புக் கூட்டத்தில் திமுக மீது கடுமையான விமர்சனங்களை முதல்வர் விஜய் முன்வைத்தார்.

தவிர கரூர் துயர சம்பவம் குறித்துப் பேசிய விஜய், "என் வாழ்வில் என்னை அதிகம் காயப்படுத்தியது கரூர் சம்பவம். கரூரில் கூட்டம் அதிகமாக உள்ளது என்று போலீஸார் எங்களை அலர்ட் செய்து இருக்கலாம். எங்களிடம் கேட்காமல் அவர்கள் மீட்டிங்கை கேன்சல் செய்திருக்கலாம்.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

ஆனால் அப்படியெல்லாம் எதுவும் செய்யாமல் எங்களை அவர்களே அழைத்துச் சென்றார்கள். இந்த நாடகமெல்லாம் தெரியாமல் நன்றியெல்லாம் சொன்னேன். எனக்கு இப்படி ஒரு நாடகம் நடக்குமென தெரியாமல் போய்விட்டது.

காவல்துறை உரிய பாதுகாப்பு கொடுத்ததா? கரூர் சம்பவத்தின் பின்னணியில் யார்?" எனப் பேசியிருந்தார். இந்நிலையில் விஜய்யின் பேச்சுக்கு திமுக எம்.பி கனிமொழி பதிலடி கொடுத்திருக்கிறார்.

"எல்லாருக்கும் பொறுப்புணர்வு என்ற ஒன்று உள்ளது. அதனை புரிந்து கொள்ள வேண்டும். அதைப் பற்றி அதிகமாக நான் சொல்ல விரும்பவில்லை. கரூர் சம்பவம் விசாரணையில் இருக்கக்கூடிய ஒரு விஷயம். கரூர் சம்பவத்தில் மக்களோடு நின்றவர்கள் யார்?

மக்களுக்கு உதவி செய்தவர்கள் யார்? மக்களை தவிக்கவிட்டு அங்கிருந்து ஓடிப்போனவர்கள் யார்? என்பதை பற்றியெல்லாம் மக்களுக்கு நன்றாகத் தெரியும்" என விஜய்யின் பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ளார், கனிமொழி. மேலும் அவர், `இனிமேல் என் விஸ்வரூபத்தைப் பார்ப்பீர்கள்' என்று விஜய் சொன்னதற்கு, 'காத்திட்டு இருக்கோம்' என சிரித்துக்கொண்டே பதிலளித்திருக்கிறார்.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

தொடர்ந்து தவெக-வினர் பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகளில் ஆய்வு செய்வது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு, ``தொடர்ந்து அமைச்சர்கள், தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் எந்த இடங்களுக்கு போகக் கூடாதோ அங்கு சென்று அங்கிருக்கும் மக்களுக்கு சிரமங்களை உருவாக்குகிறார்கள்.

பள்ளிக்கூடங்களுக்குச் சென்று அங்குள்ள மாணவர்கள் மனம் புண்படும்படி பேசி மன உளைச்சலைத் தருகிறார்கள். இதையெல்லாம் கடந்து முதல்வரும் அதனை செய்யும் போது, இந்த ஆட்சி எதை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது என்ற கேள்வி எல்லார் மனதிலும் எழத் துவங்கியுள்ளது" என்று சாடியிருக்கிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User