கன்னியாகுமரி: "823 தபால் வாக்குகள் எண்ணப்படவில்லை" - வழக்கு தொடுக்க தயாராகும் திமுக வேட்பாளர் மகேஷ்

May 06, 2026 - 10:31
0
கன்னியாகுமரி: "823 தபால் வாக்குகள் எண்ணப்படவில்லை" - வழக்கு தொடுக்க தயாராகும் திமுக வேட்பாளர் மகேஷ்

கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட தளவாய் சுந்தரம் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

அதேசமயம் தேர்தல் அதிகாரிகள் 823 வாக்குகளை எண்ணவில்லை எனவும், இது சம்பந்தமாக மனு அளித்தும் அவர்கள் கண்டுகொள்ளாததால் வழக்கு தொடுக்க உள்ளதாகவும் தி.மு.க வேட்பாளர் மகேஷ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தி.மு.க வேட்பாளரும், கன்னியாகுமரி கிழக்கு மாவட்டச் செயலாளருமான மகேஷ் கூறுகையில், "கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதியின் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் நான். தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், உதயசூரியன் சின்னத்தில் நான் 74,831 வாக்குகளைப் பெற்றுள்ளேன்.

அதிமுக வேட்பாளர் தளவாய் சுந்தரம் 75,045 வாக்குகள் பெற்றுள்ளார். அதாவது, என்னை விட அவர் 214 வாக்குகள் கூடுதலாகப் பெற்றுள்ளதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார். ​இந்த அறிவிப்பு வந்தவுடன், நான் தேர்தல் அதிகாரியிடம் ஒரு கடிதத்தை வழங்கினேன்.

அதற்கு முக்கியக் காரணம், வாக்கு எண்ணிக்கையின் போது சுமார் எட்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) சரியாக வேலை செய்யவில்லை. அவை பழுதான இயந்திரங்கள் என்று கூறப்பட்டது.

பிறகு அவற்றை மீண்டும் எண்ணினார்கள். ​அதைவிட மிக முக்கியமான விஷயம், 823 தபால் வாக்குகள் (Postal Ballots) எண்ணப்படாமலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அந்த வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க வேட்பாளர் மகேஷ்
செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க வேட்பாளர் மகேஷ்

85 வயதிற்கு மேற்பட்டவர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் தபால் வாக்குகள் பெறப்பட்டபோது, அதிகாரிகள் சிலரது கைநாட்டுகளைப் பெற்றுள்ளனர். ஆனால், அந்த வாக்கின் வரிசை எண்களை (Serial Numbers) அதிகாரிகளே தவறாக மாற்றி எழுதி ஒரு குளறுபடியைச் செய்துள்ளனர்.

இது வாக்களித்த மக்களின் தவறு அல்ல, தேர்தல் அதிகாரிகளின் தவறு. ​இந்த 823 வாக்குகளையும் எண்ண வேண்டும் என்றும், வாக்குகளை மீண்டும் ஒருமுறை மறு எண்ணிக்கை (Recounting) செய்ய வேண்டும் என்றும் தேர்தல் அதிகாரியிடம் அந்த இடத்திலேயே கடிதம் கொடுத்தேன்.

இரண்டு பிரதிகளில் கையெழுத்திட்டுக் கொடுத்து, அதைப் பெற்றுக்கொண்டதற்கான 'ரிசீவ்டு' (Acknowledgment) கேட்டேன். ஆனால் அதிகாரிகள் தர மறுத்துவிட்டனர். இதோ அந்தக் கடிதம் என்னிடம் இருக்கிறது, நீங்கள் பார்க்கலாம். ​நானும் ஒரு வழக்கறிஞராகவும், மாவட்ட அரசு வழக்கறிஞராகவும் இருந்தவன் என்பதால் சட்ட நுணுக்கங்கள் எனக்குத் தெரியும்.

தி.மு.க வேட்பாளர் மகேஷ்
தி.மு.க வேட்பாளர் மகேஷ்

வெறும் 214 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்படும் போது, 823 தபால் வாக்குகளை எண்ணாமல் நிராகரிப்பது சட்டப்படி தவறானது. இது வாக்களித்த மக்களின் ஓட்டுரிமையைப் பறிக்கும் செயலாகும்.

​எனவே, இந்த விவகாரம் குறித்து எங்கள் கழகத் தலைமையுடன் ஆலோசித்து, சட்டப்பூர்வமான அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். முறையான அறிவிப்பு இன்றி, சட்டத்திற்குப் புறம்பாக இந்த வெற்றியை அறிவித்துள்ளனர் என்பதுதான் எனது கருத்து.

தபால் வாக்குகளில் நாங்கள்தான் முன்னிலையில் இருந்தோம். அந்த 823 வாக்குகளையும் சரியாக எண்ணினால், கண்டிப்பாக நானே வெற்றி பெறுவேன். இந்த 214 வாக்கு வித்தியாசத்தை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. தலைமையின் ஆலோசனைப்படி நிச்சயம் சட்ட நடவடிக்கை எடுப்போம்" என்றார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User