'பத்திரிகைக்காரங்களாம் வெளிய போய்டுங்க.!' - முதல்வர் விஜய் கூட்டத்தில் அடாவடி காட்டிய கரூர் போலீஸ்!

Jul 10, 2026 - 12:31
0
'பத்திரிகைக்காரங்களாம் வெளிய போய்டுங்க.!' - முதல்வர் விஜய் கூட்டத்தில்  அடாவடி காட்டிய கரூர் போலீஸ்!

முதல்வர் விஜய் கரூரில் தவெக கட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் உரையாற்றவிருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் செய்தி சேகரிக்க பத்திரிகையாளர்களுக்கு கடும் கெடுபிடிகளை விதித்து காவல்துறை அடாவடி காட்டி வருகிறது.

CM Vijay
CM Vijay

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்துக்கு பிறகு முதல் முறையாக முதல்வர் விஜய் கரூருக்கு செல்கிறார். இந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் பிரமாண்டமாக செய்யப்பட்டிருந்தன. ஆனால், நிகழ்வில் செய்தி சேகரிக்க சென்றிருக்கும் பத்திரிகையாளர்கள் அடாவடியாக நடத்தியிருக்கின்றனர்.

முதல்வரின் மக்கள் சந்திப்பு நடக்கும் அரங்குக்குள் நின்ற பத்திரிகையாளர்களை 'முதல்வரின் பாதுகாப்பு கருதி உங்களுக்கு இங்கே இடம் கிடையாது. அரங்குக்கு வெளியே இருக்கும் கூடாரத்தில் போய் அமருங்கள்' என வலுக்கட்டாயமாக கூறியிருக்கின்றனர். 'நிகழ்வு நடக்கும் இடத்தில் இருந்தால்தான் செய்தி சேகரிக்க முடியும். அரங்குக்கு வெளியே இருந்தால் எப்படி செய்தி கொடுக்க முடியும்?' என பத்திரிகையாளர்கள் தங்கள் தரப்பு வாதத்தை முன்வைத்த போதும், அதை துளியும் சட்டை செய்து கொள்ளத காவல்துறையினர் பத்திரிகையாளர்களை வெளியே அனுப்புவதிலேயே குறியாக இருந்திருக்கின்றனர்.

அரங்குக்கு வெளியே அனுப்பப்பட்ட பத்திரிகையாளர்கள்
அரங்குக்கு வெளியே அனுப்பப்பட்ட பத்திரிகையாளர்கள்

இத்தனைக்கும் செய்தி சேகரிக்கவிருக்கும் பத்திரிகையாளர்கள் ஒரு ஹோட்டலில் வந்து நிகழ்ச்சிக்கான பாஸை வாங்கிக் கொள்ளலாம் தவெகவின் அதிகாரப்பூர்வ மீடியா வாட்ஸ் அப் க்ரூப்பில் செய்தி சொல்லப்பட்டிருந்தது. அது காவல்துறை ஆய்வு செய்து வழங்கிய பாஸூம் கூட. இரவோடு இரவாக பாஸ் வாங்கிவிட்டுதான் பத்திரிகையாளர்கள் நிகழ்வு நடக்கும் இடத்துக்கு சென்றிருக்கின்றனர். 'பாஸ் இருந்தாலும் பரவாயில்லை வெளியே போங்க...' என காவல்துறையினர் பத்திரிகையாளர்களை அடாவடியாக வெளியேற்றியிருக்கின்றனர்.

பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்ட பாஸ்
பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்ட பாஸ்

விஜய் தவெக தலைவராக இருந்தபோதும் சரி, முதல்வரான பிறகும் சரி ஊடகங்களுக்கு வழங்க வேண்டிய அடிப்படை மரியாதையை கூட அவரது சகாக்கள் வழங்குவதில்லை. அதை முதல்வர் விஜய்யும் கண்டும் காணாமல் இருப்பது ஜனநாயகத்துக்கும் பத்திரிகை சுதந்திரத்துக்கும் இழைக்கப்படும் அநீதி.!

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User