"அண்ணாமலை வருகை நல்லது; தவெகவினர் அம்புகுறிகள்; விரைவில் நான்..." - ராகவா லாரன்ஸ் பேசியது என்ன?

Jun 14, 2026 - 16:31
0
"அண்ணாமலை வருகை நல்லது; தவெகவினர் அம்புகுறிகள்; விரைவில் நான்..." - ராகவா லாரன்ஸ் பேசியது என்ன?

"நான் அரசியலுக்கு வரணுமா ? வேண்டாமா ? என்பதை மக்களே முடிவு செய்யட்டும். மக்கள் வருமாறு சொன்னால் நான் அரசியலுக்கு வருகிறேன். விரைவில் உங்கள் முடிவை சொல்லுங்கள். நான் ஆவலாகக் காத்துகொண்டு இருக்கின்றேன்" என்று நேற்று முன்தினம் ( ஜுன்.12) ராகவா லாரன்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய ராகவா லாரன்ஸ், “அரசியலுக்கு வரலாமா, வேண்டாமா எனக் கேட்டு சமீபத்தில் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தேன்.

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என்னை அரசியலுக்கு வருமாறு உரிமையோடு அழைக்கின்றனர். நான் ஒரு முடிவை எடுத்துள்ளேன்.

ராகவா லாரன்ஸ்
ராகவா லாரன்ஸ்

விரைவில் என் ரசிகர்களை அழைத்து, மேடையில் என் தாயை அமரவைத்து, அந்த நல்ல முடிவை அறிவிக்க உள்ளேன்.

தவெக அரசின் ஒரு மாத கால செயல்பாடு மிகச் சிறப்பாக உள்ளது. கோயில்கள், பள்ளிகள் அருகில் இருந்த மதுக்கடைகளை மூடும் முடிவு எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

புது இடத்தில், ஒரு வாடகை வீட்டுக்குச் சென்றாலே அங்கு பழக ஒரு மாதம் ஆகும். அந்த வீட்டில் எது பிரச்னை, அந்தத் தெருவில் உள்ள நாய்களை எப்படி நமக்குப் பழக்கப்படுத்துவது என்பதைத் தெரிந்து கொள்ளவே காலநேரம் தேவை.

ஒரு நாய்க்கோ, ஒரு வாடகை வீட்டுக்கோ நேரம் தேவை என்றால், புதிதாக ஆட்சிக்கு வந்தவர்களுக்கும் கால அவகாசம் கொடுப்பது நல்லது என நான் நினைக்கிறேன்.

இந்த ஆட்சி மீது சிலர் கடுமையான விமர்சனங்களை முன் வைக்க பொறாமைதான் காரணம். விமர்சனங்களை வைப்பதற்கு முன்பு, நாம் என்ன செய்தோம் என்று யோசனை செய்துவிட்டு விமர்சனம் வைத்தால் நன்றாக இருக்கும்.

ராகவா லாரன்ஸ்
ராகவா லாரன்ஸ்

திருச்சி கிழக்கில் போட்டியிடுகிறேனா என்பதை விரைவில் ரசிகர்கள் முன்பு அறிவிப்பேன். ரஜினியின் ஆசிர்வாதம் இல்லாமல் நான் எதையும் செய்வதில்லை. அவரின் ஆசியோடுதான் எல்லாவற்றையும் செய்வேன்.

அண்ணாமலை நன்றாகப் படித்தவர், அரசியல் புரிதல் உள்ளவர். அவரைப் போன்ற புதியவர்கள் அரசியலுக்கு வருவது நல்லதுதான். தவெகவினரை தற்குறி என விமர்சனம் செய்கிறார்கள். ஆனால் அவர்கள் தற்குறி இல்லை அம்புக்குறிகள்.

நான் பணம் சம்பாதிக்கவோ, வெறுப்பு அரசியல் செய்யவோ அரசியலுக்கு வரமாட்டேன். இப்போது நூறு பேருக்கு உதவி செய்தால், அரசியலுக்கு வந்தால் லட்சம் பேருக்கு உதவி செய்வேன். மனிதன் எப்படி வாழ்ந்தான், எப்படி மறைந்தான் என்பதே முக்கியம். நான் மறையும்போது இந்த ஊரே அழும்” என்று பேசியிருக்கிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User