’கோவை தவெக-வில் உட்கட்சிப் பூசலா?’ – சூலூர் எம்.எல்.ஏ சுகுமார் விளக்கம்!

Jul 16, 2026 - 15:02
0
’கோவை தவெக-வில் உட்கட்சிப் பூசலா?’ – சூலூர் எம்.எல்.ஏ சுகுமார் விளக்கம்!

கோவை மாவட்டம் சூலூர் சட்டமன்ற  உறுப்பினர் சுகுமார் நேற்றிரவு கணியூர் பகுதியில், தேர்தலில் தனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்த பொதுமக்களுக்கு வாகனத்தில் சென்றபடி நன்றி தெரிவித்தார். அப்போது அங்கு திரண்ட த.வெ.க-வினர்  சட்டமன்ற உறுப்பினர் சுகுமாருக்கு மாலை அணிவிக்க முயன்றனர். அக்கட்சியை சேர்ந்த வசந்தி என்ற நிர்வாகியை, த.வெ.க-வை சேர்ந்த மற்றொரு தரப்பு நிர்வாகிகளே மாலை அணிவிக்க விடாமல் தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் சட்டமன்ற உறுப்பினர் சுகுமார் முன்னிலையிலேயே இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இது தொடர்பாக சூலூர் சட்டமன்ற உறுப்பினர் சுகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “நேற்று கணியூர் பகுதியில் எனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி சொல்லிவிட்டு சென்றுவிட்டேன். 5 கி.மீ. தூரம் தாண்டி சென்ற பிறகுதான், கணியூரில் பிரச்னை என்றார்கள்.  இது தொடர்பாக யாரும் எழுத்துப்பூர்வமாக போலீசில் புகார் அளிக்கவில்லை. இச்சம்பவத்தில் தாக்கப்பட்டதாக கூறிய வசந்தியிடம் பேசினேன். அவர் நன்றாக இருப்பதாகவும், இரண்டு நாளில் என்னை வந்து சந்திப்பதாகவும் கூறினார். என்னுடன் வந்தவர்கள் யாரும் அவரை தள்ளிவிடவில்லை. அவரை தள்ளிவிட்டவர் அவருடன் வந்தவர் தான். த.வெ.க-வில் உட்கட்சி பிரச்னை இல்லை. ஏதொவொரு அழுத்தம் காரணமாக வசந்தி புகார் கூறியுள்ளார்.

சுகுமார் எம்.எல்.ஏ
சுகுமார் எம்.எல்.ஏ

அங்கு நடந்தவை எல்லாம் எதேச்சையாக நடந்தது. திட்டமிட்டு பழிவாங்க நடக்கவில்லை. என்னை பிடிக்காதவர்கள் காழ்ப்புணர்ச்சி காரணமாக, என்னைப் பற்றி தவறான கருத்துகளை பரப்புகிறார்கள். யாரையும் நான் எதிரியாக பார்க்கவில்லை. அனைத்து கட்சியில் இருப்பவர்களுக்கும், கட்சிக்குள் சின்ன மனக்கசப்பு இருக்கத்தான் செய்யும். த.வெ.க-விலும் சிலருக்கு மனக்கசப்பு இருக்கலாம். ஆனால் மனக்கசப்பு என்பது வேறு, குழுவாக செயல்படுதல் என்பது வேறு. இங்கு யாரும் குழுவாக செயல்படவில்லை. புதிய மாவட்டச் செயலாளர் யார் என்பதை தலைமை அறிவிக்கும்.

புதிதாக வருபவர்களால் தங்களது இடத்திற்கு பாதிப்பு வருமோ என்ற பயம் பழையவர்களுக்கு இருக்கத்தான் செய்யும். கட்சியில் உள்ள அனைவரிடமும் ஒற்றுமையை ஏற்படுத்தியுள்ளேன். கட்சியினர் சண்டை போட வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளேன். வேலை செய்தால் பதவி தானாக வரும். புதிய தண்ணீர் வந்தால் தான் குளம் நன்றாக இருக்கும். அதுபோல புதியவர்கள் வந்தால் தான் கட்சி நன்றாக இருக்கும்” என்றார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User