"நான் எந்தக் குற்றமும் செய்யாதவன்; நீதிமன்றத்தில் நீதியை எதிர்பார்த்து நிற்கிறேன்" - எ.வ.வேலு பேச்சு

Jul 15, 2026 - 19:31
0
"நான் எந்தக் குற்றமும் செய்யாதவன்; நீதிமன்றத்தில் நீதியை எதிர்பார்த்து நிற்கிறேன்" - எ.வ.வேலு பேச்சு

சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தில் திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது.

இந்தப் புகார் விசாரணைக்காக சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலக்கத்தில் நேரில் ஆஜரானார் எ.வ.வேலு.

விசாரணைக்குப் பிறகு பத்திரிகையாளரிடம் பேசியவர், "இன்று சென்னை உயர் நீதிமன்றம் காவல்துறைக்கு நான் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று ஆணையிட்டிருந்தது. அந்த அடிப்படையில், காவல்துறை உதவி சூப்பரண்ட் அவர்கள் இன்று விசாரணைக்கு வர வேண்டும் என்று எனக்குக் கடிதம் கொடுத்தார்கள்.

எ.வ.வேலு
எ.வ.வேலு

அதனால், இன்று காலை விசாரணைக்கு வந்தேன். என்னை பொறுத்தவரை முழுமையாக ஒத்துழைக்கின்ற அடிப்படையில், என் மனதிற்குப் பட்ட உண்மைகளை அவர்களுக்குப் பதிலாக அளித்திருக்கிறேன்.

என்னுடைய பதில் என்பது 100 சதவீதம் உண்மையை உள்ளடக்கியது. அதில் எந்தவிதமான கலப்படமும் இல்லை. அந்த அடிப்படையில் அந்தப் பணியை நான் நிறைவு செய்துவிட்டு வந்திருக்கிறேன். காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்திருக்கிறேன். நீதிமன்றத்தின் ஆணையை ஏற்று எனது பதிலைச் சொல்லியிருக்கிறேன்.

`மீண்டும் எப்பொழுது இது சம்பந்தமாக என்னை அழைத்தாலும் நான் முழு ஒத்துழைப்பு தருவேன்; மீண்டும் கூப்பிட்டால் நான் வருவேன்' என்று அதிகாரியிடம் கூறிவிட்டு வந்திருக்கிறேன்.

'மடியில் கனம் இல்லை, வழியில் பயம் இல்லை' என்றொரு பழமொழி உண்டு. நான் எந்தவிதமான குற்றமும் செய்யாதவன். அரசாங்கம் திட்டமிட்டு என்னை இதில் இணைத்திருக்கிறார்கள். தற்போது நீதிமன்றத்தில் வழக்கு இருக்கின்ற காரணத்தினால், இதற்கு மேல் விரிவாக எதையும் நான் சொல்ல முடியாது.

வருகின்ற 28-ஆம் தேதி வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர இருக்கிறது. நீதிமன்றத்தில் நான் நீதியை எதிர்பார்த்து நிற்கிறேன். காவல்துறைப் பொறுத்தவரை நான் முழு ஒத்துழைப்பு கொடுக்கத் தயாராக இருக்கிறேன். மீண்டும் அழைத்தால் நான் வருவேன் என்று சொல்லிவிட்டு வந்திருக்கிறேன்" என்று கூறினார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User