Houthi Vs சவுதி அரேபியா - மத்திய கிழக்கில் இன்னொரு மோதல்; உலக பொருளாதாரத்திற்கு மீண்டும் ஆபத்து?

Jul 27, 2026 - 15:02
0
Houthi Vs சவுதி அரேபியா - மத்திய கிழக்கில் இன்னொரு மோதல்; உலக பொருளாதாரத்திற்கு மீண்டும் ஆபத்து?

ஈரான், அமெரிக்கா போருக்கே இன்னும் விடை தெரியவில்லை. அதற்குள் செங்கடலில் இன்னொரு பெரிய பிரச்னை.

ஜூலை 20-ம் தேதி. சவுதி அரேபியா மீது முழுமையான கடற்படை முற்றுகை விதிக்கப்போவதாக ஹூதி கிளர்ச்சியாளர்கள் அமைப்பு அறிவித்தது. ஹூதி அமைப்பு ஈரான் ஆதாரவு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இது சவுதி அரேபியாவிற்கு தானே பிரச்னை என்று பார்த்தால், அது தான் இல்லை. ஹார்முஸ் நீர்ச்சந்தியை மூடிய போது, எண்ணெய் தட்டுப்பாட்டால் உலக நாடுகள் எப்படி பிரச்னையை சந்தித்ததோ, கிட்டத்தட்ட அதே அளவிலான பிரச்னை இதிலும் இருக்கிறது.

ஏமன்
ஏமன்

எண்ணெய் வர்த்தகம் பாதிப்பு

ஏமனில் செங்கடலின் தெற்கு முனையில் உள்ள பாப் அல்-மந்தேப் நீர்ச்சந்தியை ஒட்டியுள்ள பகுதியை தான் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது இந்த ஹூதி அமைப்பு.

உலக சந்தைகளுக்கு எண்ணெய் ஏற்றுமதி செய்ய சவுதி அரேபியா பயன்படுத்தும் பாதை இது தான்.

இதனால், சவுதி அரேபியா கப்பல்கள் தடுக்கப்பட்டால், சவுதி அரேபியா உடன் வர்த்தகம் செய்யும் அனைத்து உலக நாடுகளும் பாதிப்படையும்.

செங்கடலின் பாப் அல்-மந்தேப் நீர்ச்சந்தி பாதை வழியாக ஆண்டுக்கு 1 டிரில்லியன் டாலருக்கும் அதிகமான மதிப்புள்ள கடல் வர்த்தகம் நடக்கிறது. இது உலக அளவிலான கடல் வர்த்தகத்தின் 12 - 15 சதவிகிதம் ஆகும்.

ஹார்முஸ் நீர்ச்சந்தியை ஈரான் தான் மூடியிருக்கிறது. இன்னொரு பெரிய கடல் வர்த்தக பாதையான பாப் அல்-மந்தேப் நீர்ச்சந்தி பாதையும் ஈரான் ஆதரவு பெற்ற ஹூதிகளின் கையில் தான் உள்ளது.

ஹார்முஸ் நீர்ச்சந்தி
ஹார்முஸ் நீர்ச்சந்தி

ஏன் சவுதி அரேபியா?

இதன் மூலம் மத்திய கிழக்கில் நடக்கும் போரில் ஈரானுக்கு இது ஒரு முக்கியமான பொருளாதார அழுத்தப் புள்ளியாக மாறியுள்ளது.

இரு முக்கிய எரிசக்தி பாதைகள் முடக்கப்படும் போது, உலக அளவிலான எரிசக்தி சந்தை நெருக்கடியை சந்திக்க நேரிடும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

இதுவரை ஹூதியின் டார்க்கெட் - காசாவைத் தாக்கும் இஸ்ரேலாக தான் இருந்து வந்தது. இதனால், 2023-ம் ஆண்டில் இருந்து இந்தப் பாதை வழியாக செல்லும் இஸ்ரேலின் வர்த்தகம் மற்றும் கடற்படைக் கப்பல்களைத் தான் அவ்வப்போது தாக்கி வந்தது ஹூதி.

ஆனால், இப்போது திடீரென்று சவுதி அரேபியா பக்கம் திரும்ப காரணம்...

ஏமன் நாட்டு கட்டுப்பாடு குறித்து அந்த நாட்டு அரசுக்கும், ஹூதிக்கும் தொடர்ந்து போர் நடந்துகொண்டே தான் இருந்தது. இது 2022-ம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் போர் நிறுத்தம் மூலம் 'ஓரளவு' கட்டுப்படுத்தப்பட்டது. இங்கே 'ஓரளவு' என்று குறிப்பிட்டிருப்பது, அந்தப் போர் நிறுத்தம் முழுமையாக நிலைமையைக் கட்டுப்படுத்திவிடவில்லை என்பதற்காக தான்.

இந்தப் போர் நிறுத்தத்தின் போது, ஏமன் நாட்டின் முக்கிய எண்ணெய், எரிவாயு வயல்கள் உள்ளிட்டவை உள்ள வட ஏமன் பகுதியைத் தங்களுக்குக் கீழ் கொண்டுவர ஹூதி முயன்றது.

சவுதி அரேபியா
சவுதி அரேபியா

ஆனால், அந்த முயற்சி ஏமன் அரசாங்கத்திற்கு சவுதி அரேபியா செய்த உதவியால் தடைப்பட்டது.

இதனால், 2022-ம் ஆண்டில் இருந்து ஏமனின் எண்ணெய் மற்றும் எரிவாயு வருவாயைப் பெறுவதற்கு சவுதி அரேபியா உடன் மறைமுக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தது.

ஹூதிகள் செங்கடலில் நடத்திய தாக்குதல்கள், 2025-ம் ஆண்டு மார்ச் மாதம் ஹூதிகளை அமெரிக்க அரசு 'வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாக' அறிவித்தது போன்றவை இந்தப் பேச்சுவார்த்தைக்கு தடை போட்டது.

எதிர்பார்ப்பு

இதன் காரணமாக கூட, ஹூதி தற்போது இந்த முற்றுகையைக் கையிலெடுத்திருக்கலாம் என்றும், தற்போதைய முற்றுகைக்கு இன்னும் இரண்டு காரணங்களை எடுத்து வைக்கிறார்கள் நிபுணர்கள்.

ஒன்று, சவுதி அரேபியாவிடம் இருந்து தற்போது ஹூதி அமைப்பு ஏதேனும் சலுகைகளை எதிர்பார்க்கலாம்.

மற்றொன்று, ஹூதி அமைப்பு மற்றொரு போருக்கு மீண்டும் தயாராகி வருகிறது என்பதை குறிப்பதாக இருக்கலாம்.

ஜூலை 20-ம் தேதி ஹூதி சவுதிக்கு எதிரான கப்பல் முற்றுகையை அறிவித்தது.

ஹூதி தாக்குதல்
ஹூதி தாக்குதல்

அடுத்த மூன்று நாள்களில் (ஜூலை 23), செங்கடல் வழியாக பயணம் செய்த சவுதி அரேபியாவின் இரண்டு டேங்கர்களை தாக்கியது ஹூதி.

இதற்குப் பதிலடியாக, ஹூதியின் ராணுவ மையங்கள், தொலைதொடர்பு நெட்வொர்க்குகள் மீது வான்வழி தாக்குதலை நடத்தியது சவுதி அரேபியா. இதற்கும் சவுதி அராம்கோ கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தி பதிலடி தந்திருக்கிறது ஹூதி.

இந்தத் தாக்குதல்கள் அடுத்தடுத்து தொடர்ந்தால், உலக எண்ணெய் பொருளாதாரத்திற்கு மீண்டும் ஒரு பெரிய அடி விழுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User