'ஏழைகளுக்கு உதவுவார் எனக் கேள்விப்பட்டேன்' - சல்மான் கானிடம் பண உதவி பெற வந்த பெண் மும்பையில் மீட்பு

Jul 12, 2026 - 15:32
0
'ஏழைகளுக்கு உதவுவார் எனக் கேள்விப்பட்டேன்' - சல்மான் கானிடம் பண உதவி பெற வந்த பெண் மும்பையில் மீட்பு

மும்பையில் பாலிவுட் நடிகர்களைப் பார்க்கவேண்டுமென்ற ஆசையில் தினமும் ஏராளமானோர் மும்பைக்கு வந்துகொடிருக்கின்றனர். அது போன்று நடிகர் சல்மான் கானைச் சந்திக்க அசாமில் இருந்து மும்பை வந்து தெருக்களில் அநாதையாகச் சுற்றிக்கொண்டிருந்த பெண் மீட்கப்பட்டார்.

ஜோத்ஸ்னா பேகம் (55) என்ற பெண், மும்பை பாந்த்ரா கார்ட்டர் சாலையில் 'நடிகர் சல்மான் கான் வீடு தெரியுமா' என்று தெருவில் செல்வோரிடம் விசாரித்துக்கொண்டிருந்தார். இதனைக் கவனித்த தொண்டு நிறுவன தன்னார்வலர்கள் அப்பெண்ணை மீட்டனர்.

அசாமில் வறுமையில் வாடி வந்த ஜோத்ஸ்னா பேகம், சல்மான் கான் தனக்கு உதவுவார் என்ற நம்பிக்கையில் 2,500 கிலோமீட்டருக்கும் மேல் பயணம் செய்து மும்பை வந்துள்ளார். பாந்த்ரா கார்ட்டர் சாலையில் மன உளைச்சலுடன், சல்மான் கானின் வீடான 'கேலக்ஸி அபார்ட்மெண்ட்ஸ்' எங்கே இருக்கிறது என்று மக்களிடம் பதற்றத்துடன் கேட்டுக்கொண்டிருந்த அவரை, சீல் என்ற தொண்டு நிறுவனத்தினர் மீட்டுத் தங்களது காப்பகத்தில் அழைத்துச்சென்றனர்.

சல்மான் கான்
சல்மான் கான்

அங்கு அவருக்குத் தேவையான உணவு மற்றும் மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு, அவரது குடும்பத்தினரைத் தொடர்பு கொள்ளும் முயற்சிகள் செய்தனர்.

சீல் தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் பாஸ்டர் கே.எம்.பிலிப் இது குறித்து அளித்த பேட்டியில், ''அசாமில் இருந்து நீண்ட தூரம் பயணம் செய்து மும்பை வந்தடைந்த ஜோத்ஸ்னா பேகம், இந்த நகரத்தின் கூட்ட நெரிசலையும் பரப்பையும் கண்டு மிரண்டு போய், முற்றிலும் திசைதெரியாமல் பாதையைத் தொலைத்துவிட்டார்.

மும்பையின் கடுமையான மழைக்காலத்தில் வீடற்ற மற்றும் ஆதரவற்ற நிலையில் தவிப்பவர்களைத் தேடிக் கண்டறியும், தங்களது வருடாந்திர பருவமழை மீட்புப் பணியின்போதுதான் தன்னார்வலர்கள் இவரைக் கவனித்துள்ளனர்.

அவர் மனக்குழப்பத்தில் இருந்தபோதிலும், சல்மான் கானின் பாந்த்ரா இல்லத்திற்குச் செல்வதற்கான வழியைக் கேட்பதிலேயே குறியாக இருந்துள்ளார். தனது வறுமையைப் போக்க நடிகர் சல்மான் கான் கண்டிப்பாக தனக்குப் பண உதவி செய்வார் என்று அவர் மிக உறுதியாகக் கூறினார்.

ஜோத்ஸ்னா பேகம், கையில் போதிய பணமும் இல்லாமல், மும்பையில் தங்குவதற்கு எந்தவொரு அறிமுகமும் இல்லாமல், சல்மான் கானின் தொண்டு பற்றிய ஒரு செய்தித்தாளை மட்டுமே நம்பி அசாமில் வந்துள்ளார். வறுமையின் பிடியில் இருந்த அவருக்கு, சல்மான் கான் முன்பு ஒரு ஏழைக்கு நிதியுதவி செய்ததாகப் படித்த ஒரு செய்தி மட்டுமே ஒரே நம்பிக்கையாக இருந்துள்ளது.

இந்த நெடும் பயணத்தின் போது உணவு, தங்குமிடம் அல்லது அவசரத் தேவைகளுக்குக் கூட அவரிடம் போதிய பணம் இருந்திருக்கவில்லை. சல்மான் கான் பாந்த்ராவில் எங்கோ வசிக்கிறார் என்ற ஒரே ஒரு தகவலை மட்டுமே வைத்துக் கொண்டு அவர் இந்தத் துணிச்சலான பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

நடிகர் சல்மான் கான்
நடிகர் சல்மான் கான்

ஜோத்ஸ்னா பேகம் முழுமையாகக் குணமடைந்து, மனநிலை சீராகும் வரை பன்வெலில் உள்ள தங்களது காப்பகத்தில் வைத்து மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், அதன் பின்னர் அவர் அசாமில் உள்ள அவரது குடும்பத்தினருடன் பத்திரமாகச் சேர்க்கப்பட்டதாகவும் பாஸ்டர் கே.எம்.பிலிப் தெரிவித்தார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User