தவெக எம்.எல்.ஏ வழக்கு: `இது அடாவடித்தனம்!' - சென்னை உயர் நீதிமன்றத்தைக் கண்டித்த உச்ச நீதிமன்றம்

May 13, 2026 - 14:01
0
தவெக எம்.எல்.ஏ வழக்கு: `இது அடாவடித்தனம்!' - சென்னை உயர் நீதிமன்றத்தைக் கண்டித்த உச்ச நீதிமன்றம்

தமிழக அரசியலில் ஒரு ஓட்டு வித்தியாசம் ஏற்படுத்திய புயல் இன்று டெல்லி உச்ச நீதிமன்றத்தில் கரை கடந்துள்ளது. தமிழக வெற்றி கழகத்தின் எம்.எல்.ஏ சீனிவாச சேதுபதிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கிய உச்ச நீதிமன்றம், "எந்த அடிப்படையில் உயர் நீதிமன்றம் இப்படி ஒரு உத்தரவைப் பிறப்பித்தது?" என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளது.

மூத்த வழக்கறிஞர்கள் அபிஷேக் மனு சிங்வி மற்றும் முகுல் ரோத்தகி இடையே நடந்த காரசாரமான விவாதங்களின் முழுத் தொகுப்பைப் பார்ப்போம்.

நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கையின் போது சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக்கழக வேட்பாளர் சீனிவாச சேதுபதியிடம் ஒரே வாக்கு வித்தியாசத்தில் திமுகவின் பெரிய கருப்பன் தோல்வி அடைந்திருந்தார்.

தபால் வாக்குகள் எண்ணும் பணிகளின் போது குளறுபடிகள் நடந்தது தான் தனது தோல்விக்கு காரணம் என பெரிய கருப்பன் கூறி இருந்ததோடு, சென்னை உயர் நீதிமன்றத்திலும் மனுதாக்கல் செய்திருந்தார்.

வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தபால் வாக்குகள் உள்ளிட்ட ஆவணங்களைச் சமர்ப்பிக்க உத்தரவிட்டதோடு, நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் சீனிவாச சேதுபதி பங்கேற்கத் தடை விதித்தது.

சென்னை உயர்நீதி மன்றம்

இந்தத் தடையை எதிர்த்து தவெக எம்.எல்.ஏ சீனிவாச சேதுபதி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

"நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளதால், இந்த மனுவை உடனடியாக விசாரிக்க வேண்டும்" என்ற கோரிக்கையை ஏற்ற தலைமை நீதிபதி, இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உறுதி அளித்தார். இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், சந்திப் மேத்தா மற்றும், பிஷ்ணோய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது

திமுகவின் முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி பின்வரும் வாதங்களை முன்வைத்தார்:

"இது வெறும் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் முடிவு செய்யப்பட்ட தேர்தல் வழக்கு. கடந்த 75 ஆண்டுகளில் இத்தகைய ஒரு தவறை தேர்தல் ஆணையம் செய்ததாக நாங்கள் பார்த்ததில்லை.

அமைச்சர் பெரியகருப்பன்

திருப்பத்தூர் என்ற பெயரில் தமிழகத்தில் இரண்டு தொகுதிகள் உள்ளன. ஒரு தொகுதியின் எண் 185 (சிவகங்கை), மற்றொரு தொகுதியின் எண் 50 (திருப்பத்தூர் மாவட்டம்). தபால் வாக்குகள் மாறி அனுப்பப்பட்டதால் மொத்த முடிவும் பாதிக்கப்பட்டுள்ளது.

"இன்றைய நம்பிக்கை வாக்கெடுப்பின் போது திமுக வெளிநடப்பு செய்துவிட்டது. எனவே இது அரசின் பெரும்பான்மை தொடர்பானது அல்ல, ஒரு வேட்பாளரின் வெற்றி-தோல்வி தொடர்பானது.

தேர்தல் அதிகாரியின் தவறான செயல்பாட்டால் ஒருவரின் வெற்றி வாய்ப்பு பறிக்கப்பட்டதால் தான் நாங்கள் ரிட் மனு (Article 226) தாக்கல் செய்தோம்." என்றார்.

நீதிபதிகள் கடும் அதிருப்தி

ரோத்தகியின் வாதத்தைக் கேட்ட நீதிபதிகள் கடும் அதிருப்தி அடைந்தனர். அவர்கள் எழுப்பிய கேள்விகள்:

"ஏன் ரிட் மனு?: தேர்தல் தொடர்பான விவகாரங்களை 'தேர்தல் மனுவாகத்' (Election Petition) தானே தாக்கல் செய்ய வேண்டும்? அதை விடுத்து சட்டப்பிரிவு 226-ன் கீழ் ரிட் மனுவாக ஏன் தாக்கல் செய்தீர்கள்?"

தேர்தல் ஆணையத்தின் பங்கு: ``இந்த ரிட் மனுவை தேர்தல் ஆணையம் எப்படி ஆதரித்தது? இது மிகவும் வியப்பாக இருக்கிறது."

"அடாவடித்தனம்: இந்த மனுவை உயர் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்று, உடனடியாகத் தடையுத்தரவு பிறப்பித்திருப்பது ஏற்கத்தக்கது அல்ல. இது ஒரு 'அடாவடித்தனமான' விஷயம்."

சீனிவாச சேதுபதி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி உயர் நீதிமன்றத்தின் அவசரத்தை விமர்சித்தார்:

"பெரியகருப்பன் சனிக்கிழமை இரவு மனுத் தாக்கல் செய்கிறார். ஞாயிற்றுக்கிழமையே உயர் நீதிமன்றம் விசாரணை நடத்துகிறது. அப்படி என்ன அவசரத் தேவை இந்த உலகத்திற்கு வந்துவிட்டது?" என ஆவேசமாகக் கேட்டார்.

இதற்குப் பதிலளித்த பெரியகருப்பன் தரப்பு:

"நீதிமன்றங்கள் அவசரத்தை உணர்ந்து எப்போது வேண்டுமானாலும் விசாரிக்கலாம். யாசின் மாலிக் வழக்கை இதே உச்ச நீதிமன்றம் நள்ளிரவு 2 மணிக்கு விசாரித்திருக்கிறது. அது நீதிமன்றங்களின் வரம்பிற்கு உட்பட்டது" எனப் பதிலடி கொடுத்தனர்.

சீனிவாச சேதுபதி
சீனிவாச சேதுபதி

நீதிபதிகளின் அதிரடி உத்தரவு

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பின்வரும் இடைக்கால உத்தரவைப் பிறப்பித்தனர்:

``சீனிவாச சேதுபதி சட்டமன்றத்தில் பங்கேற்க விதிக்கப்பட்ட தடையை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. இந்த வழக்கைச் சென்னை உயர் நீதிமன்றம் தொடர்ந்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. தேர்தல் ஆணையம் மற்றும் பெரியகருப்பன் ஆகியோர் 2 வார காலத்திற்குள் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

அடுத்த 2 வாரங்களுக்குப் பிறகு இந்த வழக்கு விரிவாக விசாரிக்கப்படும்.. இந்தத் தீர்ப்பின் மூலம் தமிழக வெற்றி கழகத்தின் எம்.எல்.ஏ சீனிவாச சேதுபதியின் சட்டமன்ற உறுப்பினர் தகுதி தற்காலிகமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User